தேசிய அரசியலில் திமுகவின் முகம்.. பிறந்தநாள் காணும் திராவிடப் புதல்வி கனிமொழி கருணாநிதியின் அரசியல் பயணம்..!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  தேசிய அரசியலில் திமுகவின் முகம்.. பிறந்தநாள் காணும் திராவிடப் புதல்வி கனிமொழி கருணாநிதியின் அரசியல் பயணம்..!

தேசிய அரசியலில் திமுகவின் முகம்.. பிறந்தநாள் காணும் திராவிடப் புதல்வி கனிமொழி கருணாநிதியின் அரசியல் பயணம்..!

Karthikeyan S HT Tamil
Jan 05, 2025 07:04 AM IST

திமுகவின் துணைப் பொதுச்செயலாளரும், தூத்துக்குடி மக்களவைத் தொகுதி எம்பியுமான கனிமொழி கருணாநிதி இன்று (ஜனவரி 05) தனது 57-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவருக்கு, அரசியல் கட்சித் தலைவர்களும், தொண்டர்கள் பலரும் நேரிலும், தொலைபேசி வாயிலாகவும் வாழ்த்து தெரிவி்தது வருகின்றனர்.

தேசிய அரசியலில் திமுகவின் முகம்.. பிறந்தநாள் காணும் திராவிடப் புதல்வி கனிமொழி கருணாநிதியின் அரசியல் பயணம்..!
தேசிய அரசியலில் திமுகவின் முகம்.. பிறந்தநாள் காணும் திராவிடப் புதல்வி கனிமொழி கருணாநிதியின் அரசியல் பயணம்..!

அனல் பறக்கும் அரசியல் களத்தில் ஒரு பெண்ணாக பல்வேறு இன்னல்களை சந்தித்தாலும் அவற்றை எல்லாம் சாதனைகளாக மாற்றியிருக்கிறார். தற்போது தனக்கென தனி அடையாளத்தோடு வலம் வந்துகொண்டிருக்கும் கனிமொழி கருணாநிதி இன்று (ஜனவரி 05) தனது 57-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு கனிமொழி கருணாநிதியின் அரசியல் பயணத்தில் சில சாதனைகளை பற்றி அறிவோம்.

பன்முகத் திறமை

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் போலவே கனிமொழியும் பத்திரிகையாளர், கவிஞர், எழுத்தாளர், இலக்கியம் என பன்முகத் திறமை வாய்ந்தவர் ஆவார். இலக்கியம் மற்றும் பத்திரிகைத்துறைகளில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த கனிமொழி தீவிர அரசியலில் நுழைவதற்கு முன்பாக இந்தியாவில் இந்து ஆங்கில நாளேட்டிலும் சிங்கப்பூரில் தமிழ் முரசு இதழிலும் பணியாற்றியிருக்கிறார்.

நெய்தல் கலைத் திருவிழா

கடந்த 2007ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் "சென்னை சங்கமம்" என்ற நிகழ்ச்சியை கருணாநிதி தொடங்கி வைத்தார். அந்த நிகழ்ச்சியை கனிமொழி ஒருங்கிணைத்து செயல்படுத்தினார். இந்த நிலையில், 2011 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், 2021 நடைபெற்ற தேர்தலில் திமுக மீண்டும் ஆட்சியை பிடித்தது. இதையடுத்து 2022 ஆம் ஆண்டு முதல் சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா என்ற பெயரில் நடத்தப்பட்டு வருகிறது.

ராஜ்யசபா எம்.பி

கடந்த 2007 ஆம் நடந்த மாநிலங்களவை தேர்தலுக்கு திமுக சார்பில் கனிமொழியின் பெயர் முதல்முறையாக அறிவிக்கப்பட்டது. அந்த தேர்தலில் வெற்றி பெற்று முதன்முறையாக மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார் கனிமொழி. அப்போது இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை மையப்படுத்தி தனது முதல் கன்னி பேச்சை அரங்கேற்றினார். அதில் தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய முக்கிய தொழிற்சாலைகள் தாமதமாவது, வேலை வாய்ப்பு குறித்தும் பேசியிருந்தார். காற்றாலை மின்சாரம் பற்றியும் அவர் விளக்கி கூறியிருந்தார்.

சிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர் விருது

நாடாளுமன்றத்தில் சிறப்பாக பங்காற்றியதற்காகவும், ஜனநாயகத்தின் மதிப்பீடுகள், கொள்கைகளுக்கு வலு சேர்த்ததாகவும் கூறி கனிமொழி கருணாநிதிக்கு சிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர் விருது கடந்த 2018 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.

முதல் முறையாக நேரடி தேர்தல் களம்

இரண்டு முறை மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட கனிமொழி முதன்முறையாக மக்களை சந்தித்து தேர்தலில் நின்று மக்களவைக்கு 2019 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார் தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட கனிமொழி , அதிமுக-பாஜக கூட்டணியில் அப்போதைய தமிழக பாஜக தலைவரான தமிழிசை சவுந்தரராஜன் வீழ்த்தி வெற்றி பெற்றார். முதல் முறையாக தேர்தல் களத்தை சந்தித்த கனிமொழி 3,42,209 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

2024 நாடாளுமன்றத் தேர்தல்

2024ல் நடைபெற்ற தேர்தலிலும் திமுக சார்பில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்ட கனிமொழி அமோக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மீண்டும் நாடாளுமன்றம் சென்றார். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகள், தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலினின் தங்கை என்ற அடையாளத்தை தாண்டி கவிஞர், தேர்ந்த அரசியல்வாதி, அரசியல் தெளிவு, ஆங்கிலப்புலமை, பெண்ணியவாதி என பல்வேறு அடையாளங்களை தாண்டி, அரசியல் தனக்கென தனி அடையாளத்தோடு வலம் வரும் கனிமொழி இன்று தனது 57வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். 

 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.