DMK: திமுக மாவட்ட செயலாளர்கள் மாற்றம்! செஞ்சி மஸ்தான் முதல் தோப்பு வெங்கடாசலம் வரை! அடித்தது ஜாக்பாட்!
அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட செஞ்சி மஸ்தான், அதிமுகவில் இருந்து விலகி வந்த தோப்பு வெங்கடாசலம், சி.வி.சண்முகத்தை வீழ்த்திய லட்சுமணன் ஆகியோருக்கு மாவட்ட பொறுப்பாளர் பதவிகள் வழங்கப்பட்டு உள்ளது.

அடுத்தாண்டு வரவுள்ள சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் ஈரோடு, திருப்பூர், திருவள்ளூர், விழுப்புரம், மதுரை, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் 2 அல்லது 3 சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட பொறுப்பாளர்கள் நியனம் செய்யப்பட்டு உள்ளனர்.
ஈரோடு மாவட்டம்
ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி சட்டடமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய ஈரோடு தெற்கு மாவட்டத்திற்கு அமைச்சர் முத்துசாமி மாவட்ட செயலாளராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். அந்தியூர், பவானிசாகர், கோபிசெட்டி பாளையம் தொகுதிகளை உள்ளடக்கிய ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளராக என்.நல்லசிவம் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
தோப்பு வெங்கடாசலத்திற்கு மா.செ பதவி!
அதிமுகவில் இருந்து விலகி வந்த முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலத்திற்கு ஈரோடு மத்திய மாவட்ட செயலாளர் பொறுப்பு வழங்கப்படு உள்ளது. பவானி, பெருந்துறை ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கு இவர் பொறுப்பாளராக செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
திருப்பூர் மாவட்டம்
பல்லடம், திருப்பூர் தெற்கு தொகுதிகளை உள்ளடக்கிய திருப்பூர் கிழக்கு மாவட்ட செயலாளராக க.செல்வராஜ், காங்கேயம், தாராபுரம் தொகுதிகளை உள்ளட்டக்கிய திருப்பூர் மேற்கு மாவட்ட செயலாளராக அமைச்சர் சாமிநாதன் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
அவினாசி, திருப்பூர் வடக்கு தொகுதிகளை உள்ளடக்கிய திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளராக என்.தினேஷ் குமாரும், உடுமலை, மடத்துக்குளம் தொகுதிகளை உள்ளடக்கிய திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளராக இல. பத்மநாபனும் அறிவிக்கப்பட்டு உள்ளனர்.
செஞ்சி மஸ்தானுக்கு மீண்டும் பதவி
சமீபத்தில் மாவட்ட செயலாளர் மற்றும் அமைச்சர் பதவிகளில் இருந்து நீக்கப்பட்ட செஞ்சி மஸ்தானுக்கு மீண்டும் மாவட்ட செயலாளர் பொறுப்பு தரப்பட்டு உள்ளது. செஞ்சி, மயிலம், திண்டிவனம் தொகுதிகளை உள்ளடக்கிய விழுப்புரம் வடக்கு தொகுதி மாவட்ட செயலாளராக செஞ்சி மஸ்தான் நியமிக்கப்பட்டு உள்ளார்.
திருக்கோவிலூர், விக்கிரவாண்டி தொகுதிகளை உள்ளடக்கிய விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளராக அமைச்சர் பொன்முடியின் மகனும், முன்னாள் எம்பியுமான கெளதம சிகாமணி நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
வானூர் மற்றும் விழுப்புரம் தொகுதிகளை உள்ளடக்கிய விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளராக டாக்டர். ஆர்.லட்சுமணன் நியமிக்கப்பட்டு உள்ளார். முன்னாள் அதிமுக எம்.பியாக இருந்த இவர், திமுகவில் இணைந்து முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை வீழ்த்தியவர் ஆவார்.
மதுரை மாவட்டம்
மதுரை வடக்கு மாவட்ட செயலாளராக அமைச்சர் மூர்த்தி நியமிக்கப்பட்டு உள்ளார். மதுரை மாநகர் மாவட்ட செயலாளராக கோ.தளபதி செயல்படுவார் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
மாவட்ட செயலாளர்கள் விடுவிப்பு
தஞ்சாவூர் தெற்கு மாவட்ட செயலாளராக இருந்த க.அண்ணாதுரைக்கு பதிலாக பழனிவேல் மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
திருநெல்வேலி மத்திய மாவட்ட செயலாளராக இருந்த டி.பி.எம் மைதீன் கானுக்கு பதிலாக அப்துல் வகாப் மாவட்ட பொறுப்பாளராக நியமனம் செய்யபப்ட்டு உள்ளார்.
திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளராக பணியாற்றி வரும் டி.ஜெ.எஸ்.கோவிந்தராஜனுக்கு பதிலாக எம்.எஸ்.கே. ரமேஷ் ராஜ் புதிய மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
நீலகிரி மாவட்ட செயலாளராக பணியாற்றி வரும் பா.மு.முபாரக்கிற்கு பதிலாக கே.எம்.ராஜு புதிய மாவட்ட செயலாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார்.
