NTK: ’ஈரோடு கிழக்கு தேர்தலில் இருந்து விலக சொல்லி திமுக பேரம் பேசியதா?’ செய்தியாளர் கேள்விக்கு நாதக வேட்பாளர் திணறல்!
’எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்பொருள் காண்பது அறிவு.’ இந்த கேள்வியால் ஈரோடு கிழக்கு மக்களுக்கு ஏதேனும் நன்மை விளைய போகிறதா? என நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி பதில்

ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியில் இருந்து விலக கோரி திமுக சார்பில் பேரம் பேசப்பட்டதாக எழுப்பப்பட்ட கேள்விக்கு நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி பதில் அளித்து உள்ளார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்!
ஈரோடு கிழக்கு தொகுதியில் வரும் பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் இன்றுடன் நிறைவடைந்து உள்ளது. திமுக, நாம் தமிழர் கட்சி உட்பட 55 பேரின் வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு உள்ளன. 5 பேரின் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி சீதாலட்சுமி செய்தியாளர்களை சந்தித்தார்.
கேள்வி:- தேர்தலில் இருந்து விலக சொல்லி திமுக பிரமுகர் ஒருவர் உங்களிடம் பேரம் பேசியதாக பதிவுகள் வெளியாகி உள்ளதே?
பதிவுகள் வெளியாகி உள்ளது என்று சொல்கிறீர்கள், நான் எங்காவது பதிவு செய்து உள்ளேனா என்பது எனது முதல் கேள்வி, இது போன்ற பதிவுகளை நான் எப்போதும் பதிவு செய்யவில்லை. ’எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்பொருள் காண்பது அறிவு.’ இந்த கேள்வியால் ஈரோடு கிழக்கு மக்களுக்கு ஏதேனும் நன்மை விளைய போகிறதா?.
கேள்வி:- திமுக பிரமுகர் ஒருவர் உங்களை தோட்டத்தில் சந்தித்து பேசினாரா?
எதை வைத்து இதை கேட்கிறீர்கள். சீமான் அவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பியதாக கூறுகிறீர்கள், அது எனக்கும் அண்ணனுக்குமானது. நான் தத்துவார்த்த ரீதியாக திமுகவை எதிர்க்கிறேனே தவிர, இங்குள்ள திமுக சொந்தங்களை ஒருபோதும் வெறுப்பது கிடையாது. எல்லா உறவுகளையும் நேசிக்கிறேன்.
கேள்வி:- தேர்தலில் இருந்து விலகக்கோரி உங்களிடம் பேச்சுவார்த்தை நடந்ததாக வாட்சப்பில் தகவல்கள் வருகிறதே?
அந்த பதிவுக்கு நான் பொறுப்பு இல்லை. என்னை தொடர்பு கொண்டு பேசி உள்ளார்களா, இல்லையா என்பது கேள்வி இல்லை.
கேள்வி:- திமுக தரப்பில் இருந்து பேசவில்லையா?
திமுக தரப்பில் இருந்து யாரும் பேசவில்லை; என்னோடு ஆயிரம் பேசுகிறார்கள்.
