கலாநிதி மாறன் Vs தயாநிதி மாறன்: சன் டிவி பங்குகள் யாருக்கு? நோட்டீஸில் சொன்னது என்ன?
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  கலாநிதி மாறன் Vs தயாநிதி மாறன்: சன் டிவி பங்குகள் யாருக்கு? நோட்டீஸில் சொன்னது என்ன?

கலாநிதி மாறன் Vs தயாநிதி மாறன்: சன் டிவி பங்குகள் யாருக்கு? நோட்டீஸில் சொன்னது என்ன?

Kathiravan V HT Tamil
Published Jun 20, 2025 08:17 AM IST

”தயாநிதி மாறன் அனுப்பிய நோட்டீஸில், சன் டிவி மூலம் கலாநிதி மாறன் சட்டவிரோத பணப் பரிவர்த்தனைகளில் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது”

கலாநிதி மாறன் Vs தயாநிதி மாறன்: சன் டிவி பங்குகள் யாருக்கு? நோட்டீஸில் சொன்னது என்ன?
கலாநிதி மாறன் Vs தயாநிதி மாறன்: சன் டிவி பங்குகள் யாருக்கு? நோட்டீஸில் சொன்னது என்ன?

தி.மு.க. மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன், தனது அண்ணன் கலாநிதி மாறனுக்கு எதிராக சட்டரீதியான நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்த நோட்டீஸ் சன் தொலைக்காட்சி குழும நிறுவனங்களின் பங்குப்பிரிவு தொடர்பாக எழுப்பப்பட்டுள்ளது, இது தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.

குற்றச்சாட்டுகளின் விவரம்

தயாநிதி மாறன் அனுப்பிய நோட்டீஸில், சன் டிவி மூலம் கலாநிதி மாறன் சட்டவிரோத பணப் பரிவர்த்தனைகளில் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கலாநிதி மாறன், சன் குழும நிறுவனங்களின் பங்குகளை குறைந்த விலைக்கு தனக்குத்தானே ஒதுக்கீடு செய்து கொண்டதாகவும், இதன் மூலம் சன் குழுமத்தில் 60% உரிமையை மற்ற பங்குதாரர்களிடம் கேட்காமலேயே எடுத்துக் கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், சன் குழுமத்தில் கலாநிதி மாறனைத் தவிர்த்த மற்ற குடும்ப உறுப்பினர்களின் பங்குகள் 50%இல் இருந்து 20% ஆகக் குறைந்திருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையின் மூலம், கலாநிதி மாறன் 2023 ஆம் ஆண்டு வரை ரூ.5,926 கோடி லாபமும், 2024 ஆம் ஆண்டில் மட்டும் ரூ.455 கோடி லாபமும் ஈட்டியுள்ளதாகவும் நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ரூ.3,500 கோடி மதிப்பிலான பங்குகள் வெறும் ஒரு கோடி ரூபாய்க்கு அன்றைய காலகட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த மோசடிகளின் மூலம், சன் பிக்சர்ஸ், சன் டைரக்ட், மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஐபிஎல் அணிகளை கலாநிதி மாறன் தன்வசப்படுத்திக் கொண்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

தயாநிதி மாறனின் கோரிக்கைகள்

ஜூன் 10ஆம் தேதி அனுப்பப்பட்டுள்ள இந்த நோட்டீஸில், சன் டிவி பங்குகளை கையாளுவது 2003 ஆம் ஆண்டு இருந்த நிலைக்கு மீட்டெடுக்கப்பட வேண்டும் என தயாநிதி மாறன் வலியுறுத்தியுள்ளார். மேலும், கலாநிதி மாறன், அவரது மனைவி காவேரி மாறன் உட்பட எட்டு பேர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முந்தைய நோட்டீஸ் மற்றும் எதிர்கால திட்டங்கள்

ஏற்கனவே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இதேபோன்ற ஒரு நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகவும், அப்போது கலாநிதி மாறன் தங்கள் சகோதரி அன்புக்கரசிக்கு ரூ.500 கோடி வழங்கியதாகவும் நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பாக மத்திய அரசின் விசாரணை அமைப்பை அணுகத் திட்டமிட்டுள்ளதாகவும் தயாநிதி மாறன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.