Crime: கழுத்தை நெறித்து பிசியோ தெரபிஸ்ட் கொலை.. 2 பேர் கைது!
ஆத்திரத்தில் தனலட்சுமியின் கழுத்தை நெரித்து கொலை செய்த பின்னர் வீடு முழுவதும் தேடியும் பணம் கிடைக்காதால் தனலட்சுமி கழுத்தில் அணிந்திருந்த 8 பவுன் நகை மற்றும் செல்போனை திருடி சென்றதும் தெரியவந்தது.

கோவை மாவட்டம் செட்டிபாளையத்தில் பெண் பிசியோதெரப்பிஸ்ட் கொலை செய்யப்பட்ட வழக்கில் பெண் உட்பட இருவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை போத்தனூர் - செட்டிபாளையம் சாலை அபிராமி நகரை சேர்ந்தவர் பாலா இசக்கிமுத்து. இவர் மாநகராட்சியில் ஒப்பந்த துப்புரவு வாகன ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி தனலட்சுமி (32). பிசியோதெரப்பிஸ்ட்டாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த டிசம்பர் 31ம் தேதி தனலட்சுமி வழக்கம் போல் வீட்டில் தனியாக இருந்துள்ளார். மாலை வேலை முடிந்து கணவர் வந்து பார்த்த போது தனலட்சுமி மூக்கு மற்றும் வாயில் இரத்தம் வெளியேறிய நிலையில் சடலமாக கிடந்தார். மேலும் தனலட்சுமியின் கழுத்தில் இருந்த 8 பவுன் செயின் மற்றும் செல்போன் மாயமானது தெரியவந்தது. இதையடுத்து கணவர் பாலா இசக்கிமுத்து செட்டிபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில் , தனலட்சுமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விட்டு வழக்கு பதிவு செய்த போலீஸார் 5 தனிப்படை அமைத்து மர்ம நபர்களை தேடி வந்தனர்.
தனிப்படையினர் அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, பெண் உட்பட இருவர் தனலட்சுமி வீட்டிற்கு சென்று விட்டு மீண்டும் பிற்பகலில் கிளம்பி சென்றது தெரியவந்தது. இதையடுத்து அப்பகுதியில் பதிவான செல்போன் சிக்னல், மற்றும் சிசிடிவி காட்சிகளை வைத்து பொள்ளாச்சி ஆனைமலை காட்டூரை பதுங்கியிருந்த பெண் உட்பட இருவரை தனிப்படை போலீஸார் கைது செய்து செட்டிபாளையம் அழைத்து வந்தனர்.
இந்த கொலை வழக்கில் முதல் கட்ட விசாரணையில் பிடிபட்ட நபர்கள் வால்பாறையை சேர்ந்த சந்திரா ஜோதி (41) மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த சுரேஷ் (39) என்பதும் தெரியவந்தது. கணவரை பிரிந்த சந்திரஜோதி , சுரேசுடன் பொள்ளாச்சி ஆனைமலை அருகே கோட்டூரில் ஒரே வீட்டில் வசித்து வந்து இருப்பதும் தெரியவந்தது. சந்திரா ஜோதி மீது ஏற்கனவே திருட்டு, கொலை முயற்சி வழக்குகளும் நிலுவையில் உள்ளது. சந்திரஜோதிக்கும் , தனலட்சுமிக்கும் சமீபத்தில் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. இநநிலையில் தனலட்சுமியிடம் அதிகளவு பணம் இருக்கும் என நினைத்து கடந்த டிசம்பர் 31 ம் தேதி சந்திரா ஜோதி, சுரேசுடன் சென்றுள்ளார்.
அங்கு ஆத்திரத்தில் தனலட்சுமியின் கழுத்தை நெரித்து கொலை செய்த பின்னர் வீடு முழுவதும் தேடியும் பணம் கிடைக்காதால் தனலட்சுமி கழுத்தில் அணிந்திருந்த 8 பவுன் நகை மற்றும் செல்போனை திருடி சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து இருவரை கைது செய்த போலீஸார் நகை மற்றும் செல்போனை பறிமுதல் செய்தனர். மேலும் இருவரிடமும் தனிப்படை போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9

டாபிக்ஸ்