‘எங்களை இக்கட்டான நிலைக்கு தள்ளிய துரைமுருகன்..’ திமுகவை சாடிய மார்க்சிஸ்ட் சண்முகம்!
நீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவதாக கூறி தங்களது கொடிக் கம்பங்களை அகற்றுமாறு கட்சியினருக்கு உத்தரவிட்ட திமுக அரசு, நீதிமன்றத்தின் அனைத்து தீர்ப்புகளையும் நடைமுறைப்படுத்தி விட்டார்களா?

கொடிக் கம்பங்களை தாமாக அகற்ற வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டுள்ள திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் எங்களை இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளியிருக்கிறார் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம் தேனியில் பேசியுள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அகில இந்திய மாநாடு வரும் ஏப்ரல் 2 முதல் 6 ஆம் தேதி வரை மதுரையில் நடைபெற உள்ளது. இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அகில இந்திய மாநாடு குறித்த கருத்தரங்கு மற்றும் நிதியளிப்பு பொதுக்கூட்டம் தேனி மாவட்டத்தில் நடைபெற்றது. தேனி மதுரை சாலையில் உள்ள பங்களாமேடு பகுதியில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் பேசுகையில், ‘‘286 நாட்களுக்குப் பிறகு விண்வெளியில் இருந்து சுனிதா வில்லியம்ஸ் என்ற பெண்மணி இன்றைக்கு பூமிக்கு திரும்பியுள்ளார். பல்வேறு கட்ட சோதனைகளுக்கு பிறகு விண்வெளியில் இருந்து பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸை பாராட்டி தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் வரவேற்கிறோம்.
திமுக மீது விமர்சனம் வைத்த சண்முகம்
பொது இடங்களில் இருக்கும் அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்ளை 12 வாரங்களுக்குள் அகற்ற வேண்டும் என்று கடந்த ஜனவரி 27 ஆம் தேதியன்று தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவு ஏற்கத்தக்கதல்ல. நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ஆளும் திமுக அரசு மேல்முறையீடு செய்திருக்க வேண்டும். அல்லது அனைத்து அரசியல் கட்சியினருடன் இது குறித்து ஆலோசனை செய்து மாற்று ஏற்பாடுகளை கையாண்டிருக்க வேண்டும்.
ஆனால் அதைவிடுத்து நீதிமன்ற உத்தரவுப்படி அடுத்த 15 நாட்களுக்குள் பொது இடங்களில் உள்ள திமுக கொடிக் கம்பங்களை அகற்ற வேண்டும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் இன்றைக்கு வெளியிட்டுள்ள அறிக்கை, எங்களை இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளியிருக்கிறது.இது திமுகவிற்கான பிரச்சினை மட்டுமல்ல. அனைத்து கட்சியினருக்கும் பொருந்தும். நீதிமன்ற உத்தரவால் அதிகம் பாதிக்கப்படப்போவது திமுக, அதிமுக போன்ற கட்சிகள் தான். சட்டரீதியாகவும் அரசாங்கம் என்ற ரீதியில் திமுக இதில் நிதானமாக செயல்பட்டிருக்க வேண்டும்.
எல்லா தீர்ப்பையும் நிறைவேற்றிவிட்டீர்களா?
மேலும் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவதாக கூறி தங்களது கொடிக் கம்பங்களை அகற்றுமாறு கட்சியினருக்கு உத்தரவிட்ட திமுக அரசு, நீதிமன்றத்தின் அனைத்து தீர்ப்புகளையும் நடைமுறைப்படுத்தி விட்டார்களா? பட்டியலின மக்களுக்கான காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று தீர்ப்பளித்து 10 ஆண்டுகளாகியும் தற்போது வரை நடைமுறைப்படுத்தவில்லை.
மேலும் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு நீதிமன்ற தீர்ப்புகள் எல்லாம் நிறைவேற்றப்படாமல் இருக்கும் நிலையில், கொடிக் கம்பங்கள் விவகாரத்தில் மட்டும் ஏன் திமுக இவ்வாறு செயல்பட வேண்டும். தாமாக அகற்றாத கொடிக் கம்பங்களை அரசு அதிகாரிகள் மூலம் அகற்றிவிட்டு அதற்கான செலவுகளை சம்பந்தப்பட்ட அரசியல் கட்சியினரிடம் வசூலிக்க வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவு எதேச்சாதிகாரத்தின் உச்சம்.
நீதிமன்றங்களுக்கு இவ்வளவு வெறுப்பு ஏன்?
நீதிமன்றங்களுக்கு அரசியல் கட்சிகள் மீது இவ்வளவு வெறுப்பு ஏன் என்று தெரியவில்லை. சமீபகாலமாக நீதிபதிகள் எல்லை மீறுகின்றனர். அதன் தொடர்ச்சி தான், அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கி பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவல்துறையினருக்கு சம்பந்தப்பட்ட கட்சியினர் கட்டணம் வழங்க வேண்டும் என உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர் உத்தரவிட்டுள்ளார்.
காவல்துறையிடம் அனுமதி கேட்டால் தானே, கட்டணம் செலுத்த வேண்டும். இனி அனுமதி கேட்க மாட்டோம், ஏனென்றால் எங்களின் செந்தொண்டர் படை போதும் பாதுகாப்பிற்கு. அரசியல் கட்சிகள் நடத்தும் பொதுக்கூட்டம், கருத்தரங்கு, மாநாடு போன்ற நிகழ்ச்சிகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பது அரசியல் சாசனம் வழங்கியிருக்கும் உரிமை. ஆனால் அதை மீறும் வகையில் உயர்நீதிமன்ற நீதிபதியின் தீர்ப்பு இருக்கிறது,’’ என்று அப்போது சண்முகம் பேசினார்.
