சிபிஎம் கட்சிக்கு புதிய மாநில செயலாளர் தேர்வு!கே.பாலகிருஷ்ணன் சொன்ன வார்த்தையால் நடந்த மாற்றம்!
மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். முன்னதாக அடுத்த மாதத்துடன் 72 வயது ஆவதால் தன்னை கட்சி பொறுப்புகளில் இருந்து விடுவிக்குமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கோரிக்கை விடுத்து இருந்தார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளாராக உள்ளவர் கே.பாலகிருஷ்ணன், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படிக்கும் காலத்தில் இருந்தே இடதுசாரி அரசியலில் ஆர்வம் காட்டியவர். கடந்த 2011ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத்தேர்தலில் அதிமுக கூட்டணியில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏவாக வெற்றி பெற்றார். கடந்த 2018ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக இருந்து வருகிறார்.
விழுப்புரத்தில் நடைபெற்ற மாநாட்டில் பேசிய கே.பாலகிருஷ்ணன், பதவி விலக விருப்பம் தெரிவித்து இருந்தார். “கட்சியின் அமைப்பு சட்ட விதிகளின்படி 72 வயதுக்கு மேல் எந்தவிதமான பொறுப்புகளிலும் நீடிக்க முடியாது” அடுத்த மாதம் 72 வயது ஆவதை ஒட்டி, தன்னை பொறுப்புகளில் இருந்து விடுவிக்க கட்சியின் மாநில மாநாட்டில் கே.பாலகிருஷ்ணன் கோரிக்கை வைத்து இருந்தார். இதனை அடுத்து அக்கட்சியின் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
திமுகவை சாடிய கே.பாலகிருஷ்ணன்!
முன்னதாக ஜனவரி 3ஆம் தேதி நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் பேசிய கே.பாலகிருஷ்ணன், திராவிட மாடல் என்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் உள்ள மக்களுக்கு இடதுசாரி மாடல்தான் சரியாக இருக்கும். பாஜக வீழ்த்தும் போராட்டத்தில் திமுகவுடன் இணைந்து தயக்கமின்றி பணியாற்றுவோம். ஆனால் திமுக அரசு, தொழிலாளர்கள், விவசாயிகள் உரிமைகளை பறிக்கும்போது, அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் வாக்குறுதிகளை நிறைவேற்றாத போது திமுக அரசுக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுப்போம். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை கேட்க விரும்புகிறேன். தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத அவசர நிலையை பிரகடன படுத்திவிட்டீர்களா? எப்படி காவல்துறை இப்படி கட்டுப்பாடு இல்லாமல் செயல்படுகிறது என பேசி இருந்தார்.
கே.பாலகிருஷ்ணனுக்கு முரசொலி பதில்
இதற்கு பதிலளிக்கும் விதமாக திமுகவின் அதிகாரப்பூர்வ நாளோடான முரசொலியில் கண்டனம் தெரிவித்துள்ளது. அதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விழுப்புரத்தில் பேசிய பேச்சு தோழமைக்கான இலக்கணமாக இல்லை!
‘தமிழகத்தில் அவசர நிலைப் பிரகடனமா?’ என்று கே.பாலகிருஷ்ணன் பேசிய பேச்சுக்கு ‘தினமலர்’கொடுத்த முக்கியத்துவத்தைப் பார்க்கும் போதே, தி.மு.க.ஆட்சிக்கு எதிரான சதி கூட்டத்துக்கு தீனி போடத் தொடங்கிஇருக்கிறார் கே.பி. என்பது தெளிவாகத் தெரிகிறது.
‘முதல்வரை இந்த மாநாட்டின் வாயிலாகக் கேட்கிறேன், தமிழகத்தில் அறிவிக்கப்படாத அவசர நிலையைப் பிரகடனப் படுத்தியுள்ளீர்களா?’ என்று கேட்டிருக்கிறார் கே.பி. அவரை பேசவிடாமல் தடுத்துள்ளார்களா? இல்லை! என விமர்சனம் செய்து இருந்தது.