Savukku Shankar Case: ’போலீஸ் துன்புறுத்தவில்லை’ சவுக்கு சங்கர் நீதிபதியிடம் பரபரப்பு பதில்! மே 28 வரை காவல் நீட்டிப்பு
”Savukku Shankar Case: போலீஸ் துன்புறுத்தவில்லை; கண்ணியமாக நடத்தினார்கள் என்றும், கோவை சிறைக்கு பதிலாக திருச்சி சிறைக்கு மாற்ற வேண்டும் என்றும் யூடியூபரும், பத்திரிக்கையாளருமான சவுக்கு சங்கர் நீதிபதியிடம் கூறி உள்ளார்”
பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் திருச்சி சைபர் க்ரைம் போலீசார் பதிவு செய்த வழக்கில் சவுக்கு சங்கருக்கு வரும் மே 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டு உள்ளது.
பெண் காவலர்கள் குறித்து ரெட்பிக்ஸ் யூடியூப் சேனலில் அவதூறாக பேசிய வழக்கில் கடந்த மே மாதம் 4ஆம் தேதி அன்று சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார்.
திருச்சி, கோவை சைபர் க்ரைம் போலீஸ் வழக்கு
இது தொடர்பாக கோவை மற்றும் திருச்சி சைபர் க்ரைம் போலீசார் சவுக்கு சங்கர் மற்றும் ரெட்பிக்ஸ் யூடியூப் சேனல் நிறுவனர் பெலிக்ஸ் ஜெரால்டு மீதும் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
ஒருநாள் காவலில் சவுக்கு சங்கர்
இந்த வழக்கில் ஆஜர்படுத்தப்படுவதற்காக நேற்று முன் தினம் சவுக்கு கோவை சிறையில் இருந்து திருச்சி மகிளா நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்.
சவுக்கு சங்கரை ஒருநாள் காவலில் எடுத்து விசாரிக்க திருச்சி சைபர் க்ரைம் போலீசாருக்கு நீதிமன்றம் அனுமதி தந்த நிலையில், இன்று மாலை உடன் போலீஸ் காவல் நிறைவு பெற்றதால் யூடியூபர் சவுக்கு சங்கர் இன்று மாலை 4 மணி அளவில் திருச்சி மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
காவல்துறையினர் துன்புறுத்தவில்லை
அப்போது காவல்துறையினர் துன்புறுத்தினார்களா என்று நீதிபதி கேட்ட கேள்விக்கு, காவல்துறையினர் யாரும் துன்புறுத்தவில்லை; கண்ணியமாக நடத்தினார்கள் என பதில் அளித்தார்.
கோவை சிறை வேண்டாம்! திருச்சி வேண்டும்!
மேலும் கோவை சிறையில் போதை பொருள் பயன்படுத்தி மனநலம் பாதிக்கப்பட்ட சிறை வாசிகளுடன் அடைக்கப்பட்டு உள்ளேன் என்பதால், தன்னை கோவை சிறையில் இருந்து திருச்சி மத்திய சிறைக்கு மாற்ற வேண்டும் என்று நீதிபதியிடம் சவுக்கு சங்கர் கோரிக்கை வைத்தர்.
மே 28ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் நீட்டிப்பு
சவுக்கு சங்கரின் கோரிக்கையை கேட்ட நீதிபதி, இது தொடர்பாக கடிதம் கொடுத்தால் கோவை சிறை கண்காணிப்பாளருக்கு பரிந்துரை செய்வதாக பதில் அளித்த நீதிபதி, நீதிமன்றக் காவலை வரும் மே மாதம் 28ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
சவுக்கு சங்கர் கைதின் பின்னணி
யூடியூபரும், பத்திரிக்கையாளருமான சவுக்கு சங்கர், ரெட்பிக்ஸ் யூடியூப் சேனலில் அதன் ஆசிரியர் பெலிக்ஸ் ஜெரால்டுக்கு அளித்த பேட்டியில், “காவல்துறையில் பணியாற்றும் பெண்காவலர்கள்” குறித்து பேசிய கருத்து சர்ச்சை ஆனதால் கடந்த மே மாதம் 4ஆம் தேதி தேனியில் கைது செய்யப்பட்டார்.
அவர் மீது கோவை சைபர் கிரைம் போலீசாரும், திருச்சி சைபர் கிரைம் போலீசாரும் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
இது மட்டுமின்றி அவரது வீடு மற்றும் அலுவலங்களில் போலீசார் நடத்திய சோதனையில் சவுக்கு சங்கர் சங்கர் கஞ்சா பயன்படுத்தியதாக கூறி புதிய வழக்கு ஒன்றையும் காவல்துறையினர் பதிந்துள்ளனர்.
மேலும் பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கு தொடர்பாக ரெட்பிக்ஸ் நிறுவனத்தின் ஆசிரியர் பெலிக்ஸ் ஜெரால்டை டெல்லியில் காவல்துறையினர் கைது செய்த நிலையில், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குறித்து அவதூறாக பேசியதாக கூறி சவுக்கு சங்கர் மீதும், பெலிக்ஸ் ஜெரால்ட் மீதும் மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.