Vijayadharani: ’பாஜக வலையில் விஜயதாரணி சிக்கமாட்டார்’ செல்வப்பெருந்தகை சொன்ன பாயிண்ட்!
”காங்கிரஸ் கட்சி மீது அவருக்கு ஒரு அதிருப்தியும் இல்லை; கட்சி சட்டமன்ற கொறடாவாக உள்ளார். அவருக்கு காங்கிரஸ் நிறைய செய்துள்ளது, இனியும் செய்ய தயாராக உள்ளது என செல்வப்பெருந்தகை கூறினார்”

தமிழ்நாடு அரசு சட்டப்பேரவையில் தாக்கல் செய்துள்ள 2024-25 பட்ஜெட் தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், காலத்திற்கேற்ப நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, பட்ஜெட்டை உருவாக்கி உள்ளார். ஒன்றிய பாஜக அரசு தமிழ்நாட்டை தண்டித்துக் கொண்டிருக்கிறது. மக்கள் கட்டும் வரிப்பணத்தை, தொகையை அளிக்காமல் உத்திரப்பிரதேசத்திற்கும், பாஜக ஆளும் மாநிலத்திற்கும் இரட்டிப்பு தொகையாக கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். நாங்கள் அளிக்கும் வரியை தராமல் மோடி அடாவடி தனம் செய்கிறார். மத்திய அரசு பணம் தராவிட்டாலும் மக்களை பாதுகாப்போம் என தமிழ்நாடு அரசு பட்ஜெட்டில் சுட்டிக்காட்டி உள்ளது.
வெள்ளம் பாதிக்கப்பட்டது குறித்து ஒரு பைசா கூட பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ஒன்றிய அரசு தமிழ்நாட்டுக்கு அளிக்கவில்லை. துரோகம் செய்யும் ஒன்றிய அரசு, தமிழ்நாட்டு மக்களை புறக்கணிக்கிறது. இவர்களுக்கு வரும் தேர்தலில் மக்கள் தகுந்த பாடத்தை புகட்டுவார்கள்.
கேள்வி:- மத்திய அரசின் திட்டங்களை தமிழ்நாடு அரசு பெயர் மாற்றி செயல்படுத்துவதாக பாஜகவினர் கூறுகிறார்களே?
நான் முதல்வன் திட்டத்தை மோடி அரசு அறிவித்ததா?, ஆயிரம் ரூபாய் உரிமை தொகையை மோடி அரசு அறிவித்ததா? காலை உணவுத்திட்டம் மோடியின் திட்டமா?; ஏதாவது உண்மைக்கு புறம்பாக பேச வேண்டும் என பாஜக தலைவர்கள் பேசி வருகிறார்கள். பிரதமர் வீடுகட்டும் திட்டம் போன்ற குளறுபடி திட்டம் எங்கும் இல்லை. இந்த திட்டத்தில் 65% மாநில அரசுதான் தருகிறது. ஆனால் அதற்கு பிரதமர் வீடுகட்டும் திட்டம் என பெயர் உள்ளது.
கேள்வி: காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதாரணி பாஜகவுக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளதே?
அந்த அம்மா வந்து மூன்று முறை சட்டமன்ற உறுப்பினர், வழக்கறிஞர். பாஜக புள்ள பிடிக்கும் வேலையை செய்துவருகிறது. திறமையானவர்களை பிடிக்க பாஜக வலைவீசி வருகிறது. அவர்கள் வீசும் வலைக்கு எங்கள் சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி சிக்கமாட்டார்; அவர் விவரமானவர். உச்சநீதிமன்ற வழக்குக்காக 5 நாட்களாக புதுடெல்லியில் உள்ளார்.
காங்கிரஸ் கட்சி மீது அவருக்கு ஒரு அதிருப்தியும் இல்லை; கட்சி சட்டமன்ற கொறடாவாக உள்ளார். அவருக்கு காங்கிரஸ் நிறைய செய்துள்ளது, இனியும் செய்ய தயாராக உள்ளது என செல்வப்பெருந்தகை கூறினார்.
