ரவுடி வெள்ளைக்காளியை போலி என்கவுண்டரில் கொலை செய்ய போலீஸ் முயற்சி.. மனித உரிமை ஆணையத்தில் பரபரப்பு புகார்!
மதுரையில் கிளாமர்காளி கொலை வழக்கு தொடர்பாக சென்னை புழல் சிறையில் இருக்கும் பிரபல ரவுடி வெள்ளைக்காளியை மதுரைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்த காவல்துறையினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கிளாமர் காளி கொலையில் தேடப்பட்ட சுபாஷ் சந்திரபோஸ் என்பவர் சமீபத்தில் என்கவுன்ட்டர் மூலம் கொல்லப்பட்டார். இந்த நிலையில், கிளாமர்காளி கொலை வழக்கு தொடர்பாக சென்னை புழல் சிறையில் இருக்கும் பிரபல ரவுடி வெள்ளைக்காளியை மதுரைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்த காவல்துறையினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் சிறைக் கைதிகள் உரிமை மையம் சார்பில் வழக்கறிஞர் புகழேந்தி என்பவர் மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் மனு அளித்துள்ளார்.
அந்த புகார் மனுவை பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: காளிமுத்து என்ற வெள்ளைக்காளி கடந்த 4 ஆண்டுகளாக தண்டனை சிறைவாசியாக இருந்து வருகிறார். அவர் தற்போது அவர் சென்னை புழல் மத்திய சிறையில் இருந்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 22.03.2025 அன்று மதுரையைச் சேந்த கிளாமர் காளி என்ற காளீஸ்வரன் என்பவர் ஆஸ்டின்பட்டி காவல் நிலைய எல்லைக்குள் வைத்து அடையாளம் தெரியாத நபர்களால் கொல்லப்பட்டார். இந்த வழக்கிற்கும் காளிமுத்து என்ற வெள்ளைக்காளிக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை.
இந்நிலையில், மேற்படி வழக்கில் காளிமுத்து என்ற வெள்ளைக்காளி மதுரை ஆஸ்டின்பட்டி காவல்துறையினர் பிடிவாரண்ட் மூலம் சென்னை புழல் சிறையில் இருந்து திருமங்கலம் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி, பின்னர் அவரை கஸ்டடி கேட்டு மனுத்தாக்கல் செய்ய உள்ளதாக தெரிய வருகிறது.
மேற்படி வழக்கில் அவரை போலீஸ் காவலில் விசாரணைக்கு எடுத்து விசாரணை நடத்த அனுமதி அளிக்கும் பட்சத்தில் அவரை காவல்துறையினர் போலி என்கவுன்ட்டர் செய்வதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் அல்லது அவரது கை, காலை துப்பாக்கியால் சுட்டு அவரை நிரந்தர ஊனமாக்க காவல்துறை திட்டமிட்டுள்ளதாக அவர் அஞ்சுகிறார்.
இந்நிலையில் கடந்த 30.3.2025 அன்று சுபாஸ் சந்திரபோஸ் என்பவரை பிடித்து சட்டவிரோதமாக வைத்திருந்து 31.03.2025 அன்று இரவு காவல்துறையினர் சுட்டுக்கொலை செய்துள்ளனர். எனவே தாங்கள் இதில் மதுரை காவல்துறையினர் போலீஸ் காவலில் எடுத்து காளிமுத்து என்ற வெள்ளைக்காளி என்பவரை போலி என்கவுன்ட்டர் செய்வதற்கு காவல்துறையினர் திட்டமிடுவதால் மனித உரிமைகளை காக்க காவல்துறையினருக்கு வேண்டுகிறேன்." எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
