‘சமரசத்திற்கு இடமில்லை.. ஆனால் மக்கள் நலனுக்காக எந்த எல்லைக்கும் போவோம்’ தவெக தலைவர் விஜய் பேச்சு!
‘ஓட்டளிக்க பூத்துக்கு வரும் மக்களுக்கு உதவியாக நாம் இருக்க வேண்டும். குடும்பம் குடும்பமாக கோயிலுக்கு போவதைப் போல, குடும்பம் குடும்பமாக பண்டிகையை கொண்டாடுவதைப் போல நமக்கு மக்கள் ஓட்டு போடுவதை மக்கள், கொண்டாட்டமாக செய்ய வேண்டும்’

கோவையில் நடந்து வரும் தமிழக வெற்றிக் கழகத்தின் பூத் கமிட்டி முகவர்கள் மாநாட்டின் இரண்டாவது நாளில், அக்கட்சியின் தலைவர் விஜய் தொண்டர்களிடம் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:
எந்த எல்லைக்கும் போய் சமரசம் செய்வோம்
‘‘நேற்று பேசும் போது, இந்த கூட்டம் வெறும் ஓட்டுக்காக நடப்பது அல்ல என்று ,நான் கூறினேன். நம்முடைய தவெக அரசியல் ஆதாயத்திற்காக தொடங்கப்பட்ட கட்சி கிடையாது. சமரசம் என்கிற பேச்சுக்கே இங்கே இடமில்லை. ஆனால் அதே நேரத்தில் இதனால் மக்களுக்கு ஒரு நல்லது நடக்கிறது என்றால், எந்த எல்லைக்கும் போய் அதை செய்ய நாங்கள் தயங்க மாட்டோம். நம்முடைய ஆட்சி அமைந்ததும், ஒரு சுத்தமான அரசாங்கம் இருக்கும்.
நம்முடைய ஆட்சியில் ஊழல் இருக்காது, குற்றவாளிகள் இருக்கமாட்டார்கள். அதனால், எந்த விதமான தயக்கமும் இல்லாமல் தைரியமாக, நம் பூத் கமிட்டி முகவர்கள் மக்களை போய் அணுகுங்கள். நீங்கள் மக்களை அணுகும் போது, அறிஞர் அண்ணா சொன்னதை சொல்ல நான் விரும்புகிறேன். ‘மக்களிடம் செல், மக்களிடமிருந்து கற்றுக் கொள், மக்களுடன் வாழ், மக்களிடமிருந்து கற்றுக் கொள், மக்களுடன் வாழ், மக்களுடன் சேர்ந்து திட்டமிடு, மக்களை நேசி, மக்களுக்காக சேவை செய்’ என்பதை புரிந்து செயல்பட்டால், உங்க ஊர் சிறுவாணி தண்ணீர் மாதிரி, அவ்வளவு சுத்தமான ஆட்சியாக இது அமையும்.
நமக்கு ஓட்டுப் போடுவதை மக்கள் கொண்டாட வேண்டும்
இன்னும் உறுதியாக சொல்ல வேண்டுமானால், தவெக ஆட்சி தெளிவான, உண்மையான, வெளிப்படையான ஆட்சியாக இது அமையும். அதனால் இதை நம் சார்பாக, ஒவ்வொருவரும் மக்களிடம் எடுத்துச் சொல்லுங்கள்.
ஓட்டளிக்க பூத்துக்கு வரும் மக்களுக்கு உதவியாக நாம் இருக்க வேண்டும். குடும்பம் குடும்பமாக கோயிலுக்கு போவதைப் போல, குடும்பம் குடும்பமாக பண்டிகையை கொண்டாடுவதைப் போல நமக்கு மக்கள் ஓட்டு போடுவதை மக்கள், கொண்டாட்டமாக செய்ய வேண்டும். அதற்கான மனமாற்றத்தை செய்யுங்கள். நாம் வழக்கமான அரசியல் கட்சியல்ல. இது புரட்சியை ஏற்படுத்தப் போகும் கட்சி. நாம் வெற்றி பெற பூத் கமிட்டி செயல்பாடு முக்கியம், நீங்கள் தான் முதுகெலும்பு. தன்னம்பிக்கையாக இருங்கள், நல்லதே நடக்கும், வெற்றி நிச்சயம்,’’
என்று அப்போது விஜய் தொண்டர்களிடம் பேசினார்.

டாபிக்ஸ்