கோவையில் விஜய்க்கு டஃப் கொடுத்த உதய்! விமான நிலையம் முதல் ரோட்ஷோ! ஒரு கி.மீ நீளத்திற்கு பிரம்மாண்ட வரவேற்பு!
”விமான நிலையத்தில் இருந்து அவிநாசி சாலை வரை சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு, பறை இசை, செண்டை மேளங்கள் முழங்க, ஆயிரக்கணக்கான தொண்டர்கள் இரு புறங்களிலும் நின்று முழக்கங்களுடன் வரவேற்பு அளித்தனர். உதயநிதி, காரில் இருந்து வெளியே நின்று கையசைத்து தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்தார்”

கோவையில் நேற்றைய தினம் தவெக தலைவர் விஜய் ரோட்ஷோ நடத்திய நிலையில், இன்றைய தினம் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ரோட்ஷோ நடத்தினார்.
கோவை வருகையும் உற்சாக வரவேற்பும்
சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் கோவை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்த உதயநிதி ஸ்டாலினை, அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, கயல்விழி செல்வராஜ், மாவட்ட ஆட்சியர் பவன்குமார் உள்ளிட்டோர் வரவேற்றனர். கோவை பாராளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் மற்றும் திமுக பிரமுகர்கள், தொண்டர்கள் ஏராளமாக விமான நிலையத்தில் கூடி உற்சாக வரவேற்பு அளித்தனர். விமான நிலையத்தில் இருந்து அவிநாசி சாலை வரை சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு, பறை இசை, செண்டை மேளங்கள் முழங்க, ஆயிரக்கணக்கான தொண்டர்கள் இரு புறங்களிலும் நின்று முழக்கங்களுடன் வரவேற்பு அளித்தனர். உதயநிதி, காரில் இருந்து வெளியே நின்று கையசைத்து தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பு
ஆர்.எஸ்.புரம் பகுதியில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் உதயநிதி பங்கேற்க உள்ளார். 10 கோடி ரூபாய் மதிப்பில் அமையவுள்ள சர்வதேச ஹாக்கி மைதானத்திற்கு அடிக்கல் நாட்ட உள்ளார். மேலும், 29 கோடியே 99 லட்சம் மதிப்பிலான 64 முடிவடைந்த திட்டங்களின் தொடக்க விழாவையும், 82 கோடியே 14 லட்சம் மதிப்பிலான 132 புதிய திட்டங்களின் தொடக்க விழாவிலும் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்ள உள்ளார். அத்துடன், 239 கோடியே 41 லட்சம் மதிப்பில் 254 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
கட்சி நிகழ்ச்சியில் சிறப்பு உரை
இன்று மாலை 5:30 மணிக்கு, கோவை சிவானந்தா காலனி பகுதியில் திராவிட இயக்க தமிழர் பேரவை சார்பில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் உதயநிதி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்கிறார். சுப.வீரபாண்டியன் தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் உரையாற்ற உள்ளார்.
