Coimbatore: அய்யோ பாவம்! அந்த குட்டியானைக்கு உடம்பு சரி இல்லையாம்!
மருத்துவ குழு மற்றும் வனப் பணியாளர்கள் குழு களத்தணிக்கையில் ஈடுபட்டு, சிகிச்சைக்காக யானையை கண்காணித்து வருகிறது
காரமடை பகுதியில் சுற்றி திரிந்த குட்டி யானைக்கு வாயில் காயம் ஏற்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது. இதையடுத்து கும்கி யானையின் உதவியுடன் யானையை மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ட்ரெண்டிங் செய்திகள்
காரமடை வனச்சரகம், காரமடை பிரிவு, கோபனாரி காப்புக்காடு. வெள்ளியங்காடு மேற்கு சுற்றுக்குட்பட்ட பகுதியில் கடந்த 14ம் தேதி காலை சுமார் 5.00 மணியளவில் காட்டு யானை ஒன்று காட்டை விட்டு வெளியேறி பட்டா நிலத்தில் இருப்பதாக தகவல் வெளியானது. இந்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு சென்று பார்க்கையில் சுமார் 15 வயது மதிக்க தக்க யானை ஒன்று பட்டா நிலத்தில் இருப்பது தெரியவந்து, இதையடுத்து காரமடை பிரிவு வானவர் தலைமையில் தனி குழு ஒன்று அமைக்கப்பட்டு யானையை அருகில் உள்ள காப்பு காட்டிற்குள் திருப்பி அனுப்பப்பட்டது. மீண்டும் அன்று மாலை யானை அதே பட்டா நிலத்தில் இருப்பதாக கிடைத்த தகவல் வெளியானது. இதையடுத்து வனச்சரகர் தலைமையில் குழு சம்பவ இடத்திற்கு சென்று கண்காணித்தது. இதில் யானையின் உடல் நிலை குன்றிருப்பதும், உணவு உட்கொள்ளாமல், தண்ணீர் மட்டும் அருந்தி வருவது தெரியவந்தது.
இதையடுத்து மாவட்ட வன அலுவலரின் உத்தரவின் அடிப்படையில் வனக் கால்நடை அலுவலர், யானையின் உடல் நிலை குறித்து ஆய்வு செய்தார். வனக் கால்நடை அலுவலர் ஆய்வு செய்ததில் வாய் பகுதியில் ஏற்பட்ட காயத்தினால் பல நாட்கள் உணவு அருத்தாமல், உடல் மெலிந்து காணப்படுகிறது என தெரிய வந்தது. இதையடுத்து, பழங்களின் மூலம் மருந்து வழங்கப்பட்டுள்ளது. யானை ஆதிமாதையனுர் பகுதிகளில் உலாவி வந்தது. இந்த யானையை தனி குழு தொடர்ந்து கண்காணித்து வந்தது.
இந்நிலையில் இன்று கள இயக்குநர் மற்றும் தலைமை வனப்பாதுகாவலர் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். இதையடுத்து மருத்துவ குழு மற்றும் வனப் பணியாளர்கள் குழு களத்தணிக்கையில் ஈடுபட்டு, சிகிச்சைக்காக யானையை கண்காணித்து வருகிறது. ஆனைமலை புலிகள் காப்பகத்திலிருந்து கும்கி யானை வரவழைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தற்போது உடல் நலம் குன்றிய யானை வெள்ளியகாடு மேற்கு சுற்று, கோபானரி காப்பு காட்டில் தொடர்ந்து கண்காணிக்கப் பட்டு சிகிச்சை அளிக்க தயார் நிலையில் தனிக்குழு இருந்து வருகிறது.
டாபிக்ஸ்