'சர்வாதிகாரியாக மாறும் ஆவின், ஹிட்லரான கோவை ஆட்சியர்' கதறும் பால் விற்பனையாளர்கள்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  'சர்வாதிகாரியாக மாறும் ஆவின், ஹிட்லரான கோவை ஆட்சியர்' கதறும் பால் விற்பனையாளர்கள்!

'சர்வாதிகாரியாக மாறும் ஆவின், ஹிட்லரான கோவை ஆட்சியர்' கதறும் பால் விற்பனையாளர்கள்!

Kathiravan V HT Tamil
Dec 20, 2024 01:03 PM IST

பால் முகவர்கள் ஆவின் பால் மற்றும் பால் பொருட்கள் பெறுவதற்கும், பொதுமக்கள் மாதாந்திர அட்டை மூலம் ஆவின் பால் பாக்கெட்டுகள் பெறுவதற்கும் இணையவழி மூலம் மட்டுமே பணம் செலுத்த வேண்டும் என்கிற சர்வாதிகார உத்தரவை கோவை மாவட்ட ஆட்சியர் உடனடியாக திரும்பப் பெற வேண்டும்

'சர்வாதிகாரியாக மாறும் ஆவின், ஹிட்லரான கோவை ஆட்சியர்' கதறும் பால் விற்பனையாளர்கள்!
'சர்வாதிகாரியாக மாறும் ஆவின், ஹிட்லரான கோவை ஆட்சியர்' கதறும் பால் விற்பனையாளர்கள்!

இது தொடர்பாக அச்சங்கத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசின் கூட்டுறவு பால் நிறுவனமான ஆவின் தனியார் பால் நிறுவனங்களுக்கு இணையாக பால் கொள்முதலை அதிகரித்து, பால் மற்றும் பால் பொருட்களின் உற்பத்தியை கூடுதலாக்கி விற்பனையை உயர்த்துவதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் கார்ப்பரேட், தனியார் பால் நிறுவனங்களை விட மோசமான, ஹிட்லர், முசோலினி போன்ற சர்வாதிகாரி போல் மாறி வருவதை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.

குறிப்பாக வரும் 2025 ஜனவரி 1ம் தேதி முதல் பால் முகவர்களும், பொதுமக்களும் ஆவினில் ரொக்க பணபரிவர்த்தனை செய்து பால், பால் பொருட்களை வாங்கிட அனுமதியில்லை எனவும், இணையவழி மூலம் பணம் செலுத்துவோருக்கு மட்டுமே ஆவின் பால், பால் உபபொருட்கள் வழங்கப்படும், மாதாந்திர அட்டை மூலம் பால் விநியோகம் செய்யப்படும் என கோவை மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்தின் செயலாட்சியரும், கோவை மாவட்ட ஆட்சியருமான கிராந்திகுமார் அவர்கள் உத்தரவிட்டிருப்பது பால் முகவர்களையும், பொதுமக்களையும் வலுக்கட்டாயமாக தனியார் பால் நிறுவனங்களை நோக்கி துரத்தும் செயலாகும் என்பதால் கோவை மாவட்ட ஆட்சியரின் உத்தரவை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வன்மையாகக் கண்டிப்பதுடன் அந்த உத்தரவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறது.

கழுதை தேய்ந்து கட்டெறும்பானது போல்

ஆவினில் பணியாற்றும் அதிகாரிகளின் ஊதியம் மட்டும் ஆண்டுக்காண்டு பன்மடங்கு அதிகரித்து கொண்டே செல்லும் சூழலில் தமிழ்நாடு முழுவதும் ஆவின் பால் விற்பனைக்கான கமிஷன் தொகை மட்டும் பால் முகவர்களின் உழைப்பிற்கேற்ற வகையில் வழங்கப்படாமல் கழுதை தேய்ந்து கட்டெறும்பானது போல் மிக சொற்ப அளவிலேயே வழங்கப்பட்டு வருகிறது. இதனால் ஆவின் பால் விநியோகத்திற்கான வாகன எரிபொருள், பால் பாக்கெட்டுகளை பதப்படுத்துவதற்கான மின்கட்டணம், கடை வாடகை, பணியாளர் ஊதியம், பால் பாக்கெட்டுகள் லீக்கேஜ் காரணமாக ஏற்படும் பொருளாதார இழப்புகள் என வருமானத்தை மிஞ்சிய செலவினங்களால் பால் முகவர்கள் சொல்லெனா துயரங்கள் கணக்கில் அடங்காது என்கிற சூழலில் "நித்ய கண்டம் பூரண ஆயுசு" என்கிற நிலையிலேயே ஒவ்வொரு பால் முகவர்களும் ஆவின் பால் விநியோகம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தனியார் பால் நிறுவனங்களின் பால் விற்பனைக்கு முக்கியத்துவம்

இந்த சூழலில் இணையவழி மூலம் பணபரிவர்த்தனை செய்யும் பால் முகவர்களுக்கு மட்டுமே ஆவின் பால் விநியோகம் செய்யப்படும் என்பது கட்டாயமாக்கப்பட்டால் பால் முகவர்கள் ஆவின் பால் விற்பனையால் இன்னும் சொல்லெனா துயருக்கு ஆளாகி, கடும் பொருளாதார இழப்பை சந்தித்து பால் விநியோகத் தொழிலை விட்டே ஒதுங்கும் நிலைக்கோ அல்லது ஆவின் பால் விநியோகம், விற்பனையை படிப்படியாக குறைத்துக் கொண்டு தனியார் பால் நிறுவனங்களின் பால் விற்பனைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நிலைக்கோ தள்ளப்படுவர்.

ஜிஎஸ்டி வரியும் வசூலிக்கப்படுகிறது.

ஏனெனில் ஆவினில் இருந்து ஒவ்வொரு பால் முகவர்களும் தினசரி கொள்முதல் செய்யும் பால் பாக்கெட்டுகளை சில்லறை வணிகர்களுக்கு அதிகாலையில் விநியோகம் செய்து விட்டு இரவில் அதற்கான தொகையை வசூலிக்க செல்லும் போது பெரும்பாலும் 10, 20, 50, 100ரூபாய் நோட்டுகளாக மட்டுமே வசூலாகிறது. அதிலும் 10, 20ரூபாய் நோட்டுகள் தான் அதிகளவில் புழக்கத்தில் இருந்து வருவதால் அதைத் தான் பெரும்பாலான சில்லறை வணிகர்களும் பால் முகவர்களுக்கு செலுத்துகின்றர். அவ்வாறு சில்லறை வணிகர்கள் செலுத்தும் ரொக்க பணத்தை பால் முகவர்கள் ஒவ்வொருவரும் வசூலித்து அதனை தங்களின் வங்கி கணக்கில் ரொக்கமாக செலுத்தும் போது அதற்கு குறிப்பிட்ட தொகையை சேவை கட்டணமாக வங்கிகளால் பிடித்தம் செய்யப்படுவதோடு அதற்கு ஜிஎஸ்டி வரியும் வசூலிக்கப்படுகிறது.

ஏற்கனவே ஆவின் பால் விநியோகத்தில் வருமானத்தை விட இழப்புகளே பால் முகவர்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும் தருணத்தில் ரொக்க பணபரிவர்த்தனையை நிறுத்தி, இணையவழி பணபரிவர்த்தனைக்கு மட்டுமே அனுமதி என்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போலாகி பால் முகவர்களுக்கு கூடுதல் பொருளாதார இழப்பை ஏற்படுத்தும்.

ஆவின் பால் விற்பனை விலை மிக அதிகமாகி விடும்.

அத்துடன் தனியார் பாலினை விட ஆவின் பால் விற்பனை விலை மிககுறைவு என்பதால் தான் ஆவினுக்கான வாடிக்கையாளர்கள் அதிகரித்து வரும் நிலையில் மாதாந்திர அட்டை மூலம் பால் பாக்கெட்டுகளுக்கு விண்ணப்பிக்கும் அல்லது புதுப்பிக்கும் பொதுமக்கள் இணைய வழி வாயிலாக பணம் செலுத்தினால் மட்டுமே இனிமேல் ஆவின் பால் பாக்கெட்டுகள் விநியோகம் செய்யப்படும் என்பதும், இணையவழி பணபரிவர்த்தனை வாயிலாக மாதாந்திர அட்டை மூலம் ஆவின் பால் பாக்கெட்டுகள் பெறும் வாடிக்கையாளர்களுக்கு அதற்கான சேவைக் கட்டணமாக குறைந்தபட்சம் 18.00ரூபாய் பிடித்தம் செய்யப்படுவதால் தனியார் பாலினை விட ஆவின் பால் விற்பனை விலை என்பது மிக அதிகமாகி விடும். இதனால் மாதாந்திர அட்டை மூலம் ஆவின் பால் பாக்கெட்டுகள் பெறும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் நாளடைவில் கடும் வீழ்ச்சியை சந்திக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

உடனடியாக திரும்பப் பெற வேண்டும்

எனவே பால் முகவர்கள் ஆவின் பால் மற்றும் பால் பொருட்கள் பெறுவதற்கும், பொதுமக்கள் மாதாந்திர அட்டை மூலம் ஆவின் பால் பாக்கெட்டுகள் பெறுவதற்கும் இணையவழி மூலம் மட்டுமே பணம் செலுத்த வேண்டும் என்கிற சர்வாதிகார உத்தரவை கோவை மாவட்ட ஆட்சியர் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் எனவும், ஆவினில் இணையவழி பணபரிவர்த்தனை மற்றும் ரொக்க பணபரிவர்த்தனை இரண்டையும் மேற்கொள்ள அனுமதித்திடவும், இணையவழி பணபரிவர்த்தனை மேற்கொள்வோருக்கு எந்தவிதமான சேவைக் கட்டணங்களும் பிடித்தம் செய்யாமல் சிறப்பு ஊக்கத்தொகை வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வலியுறுத்துகிறது என தெரிவித்து உள்ளார். 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.