கோவை குண்டு வெடிப்பு குற்றவாளி - அல் உம்மா இயக்க தலைவர் பாஷா உடல் நலக்குறைவால் உயிரிழப்பு - நாளை இறுதி அடக்கம்!
கோவை குண்டு வெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்ட "அல் உம்மா" இயக்க தலைவர் பாஷா உடல்நிலை பாதிக்கப்பட்ட இருந்தார். இதன் காரணமாக பாஷா கடந்த 8 மாதங்களாக தொடர் பரோலில் இருந்தார். கடந்த பிப்ரவரி 18ம் தேதி பிணையில் வெளிவந்து சிகிச்சை பெற்று வந்தார்.

கோவையில் குண்டு வெடிப்பு வழக்கின் முக்கிய குற்றவாளி பாஷா இன்று தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நாளை அவரது உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது. இதனையொட்டி கோவை மாநகர காவல்துறை சார்பாக விடுப்பில் உள்ள அனைத்து காவல்துறையினரையும் பணிக்கு திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 2000த்திற்கு மேற்பட்ட போலிசார் நாளை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக காவல்துறை தரப்பில் தகவல்கள் வெளியாகி உள்ளது.
கடந்த 1997ம் ஆண்டு செல்வராஜ் என்ற காவலர் கொலை செய்யப்பட்டார். இதன் தொடர்ச்சியாக கடந்த, 1998ம் ஆண்டு பிப்ரவரி 14ம்தேதி, கோவையின் பல்வேறு இடங்களில் நடந்த பயங்கர குண்டுவெடிப்பு சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில், 58 பேர் கொல்லப்பட்டனர்; 250க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.பா.ஜ.க மூத்த தலைவர்களில் ஒருவரான அத்வானி, கோவையில் தேர்தல் பிரசாரத்துக்காக விமான நிலையம் வந்ததார். அப்போது மாலை 4.30 மணியளவில் இச்சம்பவம் நடந்தது. இதனால் கோவை நகரம் முழுவதும் பதற்றமான சூழல் நிலவியது.
இது தொடர்பாக, 'அல் உம்மா' இயக்க தலைவர் பாஷா, அன்சாரி, கேரள மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மதானி உள்பட, 167 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் கோவை தனிக்கோர்ட்டில் விசாரணை நடந்தது. கடந்த 2007ல், தீர்ப்பளிக்கப்பட்டது. இதில் பாஷா, அன்சாரி உள்பட பலருக்கு ஆயுள் தண்டனையும், மற்றவர்களுக்கு தலா, 10 ஆண்டு, 7 ஆண்டுகள் என்று சிறை தண்டனை விதிக்கப்பட்டது. சிலர் மேல் முறையீடு செய்ததால், விடுதலை செய்யப்பட்டனர். மேலும் பாஷா, அன்சாரி உள்பட, 14 பேர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.