Coimbatore: புலம் பெயர் தொழிலாளிகள் மீது தாக்குதல் நடத்திய 4 பேர் கைது
மேற்கு வங்க தொழிலாளர்களை தாக்கியதாக இந்து முன்னணி அமைப்பை சேர்ந்தவர்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை இடையர் வீதியில் மேற்கு வங்கத்தை சேர்ந்த புலம் பெயர் தொழிலாளிகள் மீது தாக்குதல் நடத்திய இந்து முன்னணி அமைப்பை சேர்ந்தவர்கள் உட்பட 4 பேரரை வெரைட்டிஹால் காவல் துறையினர் கைது செய்தனர்.
ட்ரெண்டிங் செய்திகள்
கோவை இடையர் வீதியில் மேற்கு வங்கத்தை சேர்ந்த புலம் பெயர் தொழிலாளி கௌதம் சியாமல் கட்டுவா என்பவர் தனது நண்பர்கள் தன்மாய் ஜனா, ஜெகத் ஆகியோருடன் சென்று கொண்டு இருந்தார். அப்போது அவ்வழியாக நடத்து வந்த இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த சூரிய பிரகாஷ் ,பிரகாஷ் , கல்லூரி மாணவர்கள் பிரகதீஷ் ,வேல்முருகன் ஆகியோரும் நடந்து வந்துள்ளனர். அப்போது கௌதம் சியாமல் கட்டுவா மற்றும் அவருடன் வந்த தன்மாய் ஜனா ஆகியோரை வழிவிடாமல் நடந்து சென்றதாக கூறி சூரிய பிரகாஷ் மற்றும் அவருடன் வந்த நபர்கள் தாக்கியுள்ளனர்.
மேலும் பானிபூரி கடையில் இருந்த மோனோ, ஷேக சவான் என்ற மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த இரு புலம் பெயர் தொழிலாளர்களையும் சூரியபிரகாஷ் மற்றும் அவருடன் வந்தவர்கள் தாக்கியுள்ளனர். இந்த தகவல் கிடைத்த மேற்குவங்க மாநில தொழிலாளர்கள் அங்கு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் சூர்ய பிரகாஷ் உடன் வந்தவர்கள் குறித்து வெரைட்டிஹால் காவல் நிலையத்தில் கௌதம் சியாமல் கட்டுவா புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் இந்து முன்னணியை சேர்ந்த சூரிய பிரகாஷ் ,பிரகாஷ் கல்லூரி மாணவர்கள் பிரகதீஷ், வேல்முருகன் ஆகிய 4 பேரையும் கைது செய்த வெரைட்டிஹால் போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே கடந்த சில தினங்களுக்கு முன் உள்நோக்கத்துடன் போலியான வீடியோக்களை பரப்பிய தெய்னிக் பாஸ்கர் பத்திரிகை ஆசிரியர், தன்வீர் போஸ்ட் பத்திரிகை ஆசிரியர் முகமது தன்வீர், உள்ளிட்ட 4 பேரை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது என தமிழக டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்தார். மேலும் இதுபோன்ற வதந்தி பரப்புபவர்களை மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக முதல்வர் மு.கஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இதனிடையே வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூக வலைத்தளங்களில் பரவும் போலியான வீடியோக்கள் குறித்து திருப்பூர் சைபர் கிரைம் போலீசார் கண்காணித்து வரும் நிலையில் பீகார் மாநிலம் வைசாலி மாவட்டத்தை சேர்ந்த பிரசாந்த் குமார் (32) என்பவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் கோவையில் மேற்கு வங்க தொழிலாளர்களை தாக்கியதாக இந்து முன்னணி அமைப்பை சேர்ந்தவர்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டாபிக்ஸ்