நீங்கள் நினைப்பது கனவிலும் நடக்காது- பிஜேபியை எச்சரித்த முதல்வர்!
தேவையற்ற அரசியலை புகுத்தி, அதன் மூலம் கட்சியை பலப்படுத்த வேண்டும் என்று பாஜகவினர் நினைத்தால், அது தமிழ்நாட்டில் நடக்கவே நடக்காது என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரித்தார்.

சென்னை: சென்னை மேற்கு மாம்பலம் அயோத்தியா மண்டப விவகாரம் தொடர்பாக பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் வானதி சீனிவாசன் சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார்.
இதற்கு, பதிலளித்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், "ஏழை எளிய மக்களை பாதிக்கக்கூடிய பிரச்சினைகளில் பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றார்.பெட்ரோல், டீசல் விலை உயர்வு போன்றவற்றால் ஏழை எளிய மக்களின் வாழ்க்கையில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாகவும், இவற்றைத் தீர்க்க மத்திய அரசிடம் பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
மேலும் மாநில அரசுக்கு மத்திய அரசிடம் இருந்து வரவேண்டிய நிதி நிலைமை குறித்து தான் நேரில் வலியுறுத்தியதாகவும், இதனை பெற்றுத் தரவேண்டிய நடவடிக்கைகளில் பாஜகவினர் ஈடுபட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மேலும் தேவையற்ற அரசியலை புகுத்தி, அதன் மூலம் கட்சியை பலப்படுத்த வேண்டும் என்று பாஜகவினர் நினைத்தால், அது தமிழ்நாட்டில் நடக்கவே நடக்காது எனவும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரித்தார்.
