Kallakurichi Liquor Death: ’கள்ளச்சாராய சாவுகளுக்கு முதல்வரே பொறுப்பு! ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும்!’ ஈபிஎஸ் ஆவேசம்!
Kallakurichi Liquor Deaths: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களை வயிற்று வலியால் இறந்தார் என மாவட்ட ஆட்சியர் அரசுக்கு முட்டுக் கொடுக்கிறார். கள்ளச்சாராயம் குடித்தவர்களை குணப்படுத்தும் மருந்து எந்த அரசு மருத்துவமனையிலும் இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் ஈபிஎஸ் புகார்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அருந்தி 35 பேர் வரை உயிரிந்த நிலையில், பாதிக்கப்பட்ட மக்கள் சிகிச்சை பெற்று வரும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி சென்று நலம் விசாரித்தார்.
கள்ளக்குறிச்சி மரணம் - மிகுந்த வேதனை அளிக்கிறது
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், நேற்றைய தினம் தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்த போது மாலை 3 மணியளவில் இந்த செய்தி கிடைத்தது. ஆனால் இவ்வளவு அதிகமான பேர் இறந்த செய்தி மிகுந்த வேதனையும், வருத்தத்தையும் அளிக்கிறது. காவல் நிலையத்தின் பின்புறமே கள்ளச்சாராயம் விற்கப்படுகின்றது என்றால் இந்த ஆட்சியின் அவலம் எப்படி உள்ளது என்பதை அறிய வேண்டும்.
அதிகாரம் மிக்கவர்கள் துணையோடு சாராயம் விற்பனை
இதற்கு பின்னால் ஆளும்கட்சியை சேர்ந்த மிகப்பெரிய கும்பல் உள்ளதாக தெரிகிறது. இவ்வளவு துணிச்சலாக நகர மையப்பகுதியில் கள்ளச்சாராய விற்பனை நடைபெறுமா? இன்னும் எவ்வளவு பேர் சிகிச்சையில் குணம் அடைவார்கள் என்று தெரியவில்லை.
நேற்று முதல் ஒவ்வொருவராக இறந்து வருவது அதிர்ச்சி அளிக்கிறது. இதற்கு முன்னர் விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் அருந்தி 22 பேர் உயிரிழந்தார்கள்.
தமிழ்நாட்டில் கள்ளச்சாராயத்தை குடித்து ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்படுவதாக ஏற்கெனவே தமிழ்நாடு அரசை எச்சரித்து இருந்தேன். ஆளும் கட்சியை சேந்த அதிகாரம் மிக்கவர்கள் துணையோடுதான் இந்த கள்ளச்சாரய விற்பனை நடந்தது.
ஏற்கெனவே எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?
ஏற்கெனவே கள்ளசாராய மரணங்கள் தொடர்பாக சிபிசிஐடி விசாரணை நடந்து, அதில் என்ன நடவடிக்கை எடுத்தார்கள் என்று தெரியவில்லை. ஏற்கெனவே வீரவசனம் பேசி அறிவிப்பை வெளியிடுகின்றனர். ஆனால் அந்த பிரச்னை முடிந்த பிறகு அப்படியே விட்டுவிடுகின்றனர். செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் கள்ளச்சாரயம் அருந்தி இறக்க காரணமான அதிகாரிகள் யார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
கள்ளச்சாராயம் விற்பனை குறித்து அரசுக்கு தகவல் கிடைத்து இருந்தால் நடவடிக்கை எடுத்து இருப்போம் என அமைச்சர்கள் கூறுகின்றனர். ஆனால் கடந்த 5 நாட்களுக்கு முன்னர் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ செந்தில் குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் தொலைபேசி மூலம் புகார் அளித்துள்ளார். நேற்று முன் தினம் நேரில் சந்திக்கும்போதும், இது குறித்து கேள்வி எழுப்பி உள்ளார். கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ செந்தில் குமார் சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானத்தையும் அளித்து உள்ளார்.
மு.க.ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும்
இப்படிப்பட்ட மரணம் நடக்க காரணம் விடியா திமுக முதலமைச்சரின் நிர்வாக திறமையின்மையே காரணம். இதன் பின்னணியில் திமுகவினர் உள்ளனர். நிர்வாக திறன் அற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும்.
விக்கிரவாண்டி சட்டமன்றத் தேர்தலில் பூத் வாரியாக அமைச்சர்களை நியமனம் செய்கின்றனர். ஆனால் கள்ளச்குறிச்சி மரணங்களுக்கு 20 பேருக்கு ஒரு அமைச்சரை போட்டு சென்னையில் இருந்து மருத்துவர்களை அழைத்து வந்தால், பலரை காப்பாற்றி இருக்கலாம். கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களை வயிற்று வலியால் இறந்தார் என மாவட்ட ஆட்சியர் அரசுக்கு முட்டுக்கொடுக்கிறார். கள்ளச்சாராயம் குடித்தவர்களை குணப்படுத்தும் மருந்து எந்த அரசு மருத்துவமனையிலும் இல்லை என எடப்பாடி பழனிசாமி தெரிவித்து உள்ளார்.
