EVKS Elangovan: சாவதற்கு முன் ஈவிகேஎஸ் இளங்கோவன் என்னிடம் சொன்னது என்ன? போட்டு உடைத்த முதல்வர்!
என்னை எப்போது சந்திக்க வந்தாலும் ’உங்கள் உடம்பு எப்படி இருக்கிறது’ என்றுதான் கேட்பார். நானும் திரும்ப அவரிடத்தில் அதை தான் கேட்பேன். ”நீங்கள் உங்கள் உடம்பை பார்த்துக்கொள்ளுங்கள்”-என்றுதான் சொல்வேன்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு சென்னை காமராஜர் அரங்கத்தில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிக்கு அகில இந்திய அளவில் மாபெரும் தூணாக இருந்தவர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்கள். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய தூணாக விளங்கிக்கொண்டிருந்தவர் நம்முடைய மதிப்பிற்குரிய திரு. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்கள். இரண்டு முக்கியமான தலைவர்களை அடுத்தடுத்து நாம் இழந்திருக்கிறோம். இருவருடைய இழப்பும் பெரிய இழப்பாகும். நாட்டுக்காக மட்டுமல்ல, காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமல்ல, தனிப்பட்ட முறையில் இருவரையும் அறிந்தவன் என்ற முறையில் எனக்கும் இது தனிப்பட்ட இழப்புதான். டாக்டர் மன்மோகன் சிங் அவர்கள் பொருத்தவரையில் அவர் பிறவி அரசியல்வாதி அல்ல. ஆனால், இளங்கோவன் அவர்கள் பாரம்பரியமிக்க ஒரு அரசியல் குடும்பத்தை சார்ந்தவர் என்பது அனைவருக்கும் தெரியும். பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் பேரனாக, சொல்லின் செல்வர் ஈ.வெ.கி.சம்பத் அவர்களுடைய மகனாக! இப்படி ஒரு அரசியல் குடும்பத்தில் பிறந்து இறுதி வரை அரசியல் வானில் வலம் வந்தவர்.
மன்மோகன் சிங் அமைச்சரவையில் தமிழர்கள்!
வலிமை வாய்ந்த அரசியல் தலைவராக இல்லாத, ஆக விரும்பாத மன்மோகன் சிங் அவர்கள், அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், ஒரு முறையல்ல, இரண்டு முறை, மொத்தம் பத்து ஆண்டுகள் அந்தப் பொறுப்பில் இருந்து அவர் ஆட்சியை நடத்தக் காட்டியிருக்கிறார். அவருடைய ஆட்சிக்காலத்தில்தான் பல்வேறுத் திட்டங்கள் மன்மோகன் சிங் அமைச்சரவையில், 21 தமிழர்கள் ஒன்றிய அமைச்சர்களாக இடம் பெற்றிருந்தார்கள். 8 கேபினட் அமைச்சர்கள், 13 இணை அமைச்சர்கள் என்று மிக அதிக அளவில் தமிழர்கள் ஒன்றிய அரசில் கோலோச்சியது அவருடைய அமைச்சரவையில் தான். அதுவும் மிகமிக முக்கியமான பல துறைகளை தமிழ்நாட்டுக்கு வழங்கப்பட்டது. அதன் மூலமாக எண்ணற்ற திட்டங்கள் நமக்கு கிடைத்தன.
உடல் நலத்தை விசாரிக்கும் ஈவிகேஎஸ்!
நண்பர் மதிப்பிற்குரிய திரு.ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்கள், அவருடைய மறைவு என்பது நிச்சயமாக சொல்கிறேன் என்னால் தாங்கி கொள்ள முடியாத இழப்பு. என்னை எப்போது சந்திக்க வந்தாலும் ’உங்கள் உடம்பு எப்படி இருக்கிறது’ என்றுதான் கேட்பார். நானும் திரும்ப அவரிடத்தில் அதை தான் கேட்பேன். ”நீங்கள் உங்கள் உடம்பை பார்த்துக்கொள்ளுங்கள்”-என்றுதான் சொல்வேன். சொன்னார்,’நீங்கள் எல்லோரும் சேர்ந்து என்னை எம்.எல்.ஏ.-ஆக ஆக்கி இருக்கிறீர்கள், அந்த நம்பிக்கையை நிச்சயமாக காப்பாற்றுவேன், உழைப்பேன் உழைப்பேன்’-என்று உறுதியுடன் கூறினார்.
அவர் நம்மை விட்டு பிரிந்துவிட்டார்!
ஆனால், உடல்நிலை மோசமாகி மருத்துவமனைக்கு சென்றபோதும், அவருடைய வீட்டாரிடத்தில் சொல்லியிருக்கிறார். ’என்னைச் சந்திக்க வேண்டும்’ என்று அவர்கள் வீட்டில் இருப்பவர்களிடம் சொல்லியிருக்கிறார். இந்த செய்தி கிடைத்தவுடன் நான் உடனடியாக, மருத்துவமனைக்கு நான் சென்று பார்த்தேன். ஆனால், அவர் பேச முடியாத நிலையில் இருந்தார். ஏதோ சொல்ல முற்பட்டார். ஆனால், அவரால் பேச முடியவில்லை. அதைத்தான் இன்றைக்கு நினைத்துப் பார்க்கிறேன். அவரது மகன் திருமகன் ஈ.வெ.ரா மறைந்தபோது நான் வேதனைப்பட்டேன், மனம் உடைந்து போனேன். அவருக்கு நான் ஆறுதல் கூறினேன். மகன் மறைந்ததால் இளங்கோவன் அவர்கள் போட்டியிட்டு, அவர் வெற்றி பெற்று அந்தத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றிக் கொண்டிருந்தார். ஆனால், அந்த மகிழ்ச்சியும் நீடிக்காத வகையில் அவர் நம்மை விட்டு பிரிந்துவிட்டார்.
அதனால்தான் தாங்கிக்கொள்ள முடியாத இழப்பு என்று நான் கூறினேன். தந்தை பெரியார் குடும்பத்தின் பெருஞ்செல்வம் மட்டுமல்ல - அவருடைய தந்தையார் ஈ.வெ.கி.சம்பத் அவர்கள் பேரறிஞர் அண்ணாவுக்கும், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்கும் நெருக்கமான நண்பராக, தோழராக இருந்தார். திராவிட முன்னேற்றக் கழகத்தை விட்டு சம்பத் அவர்கள் விலகிய பிறகும், அவரை பேரறிஞர் அண்ணா அவர்கள் விமர்சிக்கவில்லை. அதேபோல் சில நேரங்களில் இளங்கோவன் அவர்களும் கலைஞர் அவர்களை அரசியல் சூழல் காரணமாக விமர்சிப்பார். ஆனால், கலைஞர் அவர்கள், அவரைப்பற்றி எதுவும் பேச மாட்டார். காரணம், ’சம்பத் பையன்தானே’-பேசட்டும் என்று பெருந்தன்மையோடு இருப்பார்.
திராவிட மாடல் சாதனையை பேசியவர்!
மனதில் உள்ளதை மறைக்காமல் – அதே நேரத்தில் துணிச்சலாக - தெளிவாக – எதைப் பற்றியும் கவலைப்படாமல், தயக்கம் இல்லாமல் பேசக் கூடியவர்தான் நம்முடைய திரு.ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்கள். ஆதரித்தாலும் சரி – எதிர்த்தாலும் சரி அதைச் சரியாக, உறுதியாக செய்யக் கூடியவர் நம்முடைய இளங்கோவன் அவர்கள். ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு நம்முடைய திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளை மிகத் தெளிவாக மேடைகளில் அவர் விளக்கிப் பேசினார்.
அதைவிட மற்றொன்றையும் கூறினார். “இதுதான் உண்மையான காமராசர் ஆட்சி”-என்று அவர் வெளிப்படையாக கூறியவர்தான் அவர். தேசிய குடும்பத்தில் பிறந்து, தேசியவாதியாக வாழ்ந்து மறைந்த இளங்கோவன் அவர்கள் இந்த திராவிட மாடல் ஆட்சிக்கு கொடுத்த நற்சான்றுப் பத்திரம் அது என்பதை நான் இப்போதெல்லாம் நினைத்து நினைத்து பெருமைப்படுகிறேன். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக, சட்டமன்ற உறுப்பினராக, நாடாளுமன்ற உறுப்பினராக, ஒன்றிய அமைச்சராக என்று எந்தப் பதவியில் இருந்தாலும் அந்தப் பதவியில் முத்திரைப் பதித்தவர் நம்முடைய இளங்கோவன் அவர்கள்.
டாக்டர் மன்மோகன் சிங் அவர்களும் எவ்வளவு நெருக்கடியான நேரத்திலும் நாடாளுமன்றப் பணிகளில் பங்கெடுத்தார் என்பது உங்களுக்குத் தெரியும். அங்கு பங்கெடுத்து பதிலும் அளித்திருக்கிறார். வயது முதிர்ந்த நிலையிலும் சக்கர நாற்காலியில் நாடாளுமன்றத்திற்கு வருகை தந்தவர் நம்முடைய மன்மோகன் சிங் அவர்கள். இப்படிப்பட்ட இரு தலைவர்களை நாம் இழந்திருக்கிறோம். ஆகவே, என்னுடைய புகழஞ்சலியை திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தெரிவித்து, என் புகழுரையை நிறைவு செய்கிறேன் என முதலமைச்சர் பேசினார்.