செங்கோட்டையன் முன்பு மோதிக்கொண்ட அதிமுகவினர்.. ஈரோடு செயல்வீரர்கள் கூட்டத்தில் அடிதடி.. பறந்து வந்த சேர்கள்!
ADMK Meeting: ஈரோட்டில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்ற அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான செயல் வீரர்கள் கூட்டம் இன்று (மார்ச் 05) காலை மொடச்சூர் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், ஈரோடு அதிமுக மேற்கு மாவட்ட செயலாளருமான கே.ஏ.செங்கோட்டையன் பங்கேற்றிருந்தார். பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர் பண்ணாரி, மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டுள்ளார்.
மேலும், இந்த கூட்டத்தில் ஈரோடு மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த அந்தியூர், பவானிசாகர் கோபிசெட்டிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பேரூர், நகர, வார்டு உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர்.பூத் கமிட்டி அமைப்பது மற்றும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பது குறித்து இக்கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.
திடீரென வெடித்த வாக்குவாதம்
இந்த கூட்டத்தில் செங்கோட்டையன் பேசி கொண்டிருந்த போது அந்தியூரை சேர்ந்த அதிமுக நிர்வாகி பிரவீன் என்பவர் எழுந்து இவ்வளவு பெரிய கூட்டம் நடந்து கொண்டிருக்கிறது ஆனால் நிர்வாகிகளுக்கு கட்சியில் இருந்து உரிய முறையில் அழைப்பு விடுப்பதில்லை. எந்த தகவலும் எங்களுக்கு சொல்லப்படுவதில்லை என்ற புகாரை கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அதிமுக நிர்வாகிகள் இடையே தள்ளுமுள்ளு
உடனடியாக புகார் தெரிவித்த அந்தியூர் நிர்வாகியை மேடைக்கு அழைத்து செங்கோட்டையன் பேசினார். அப்போது செங்கோட்டையன் ஆதரவாளர்கள் பிரவீனை சூழ்ந்து கொண்டு தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. அவரை செங்கோட்டையனிடம் பேசவிடாமல் தடுத்து அங்கிருந்து வெளியே இழுத்து செல்லும் முயற்சியில் சில நிர்வாகிகள் ஈடுபட்டனர். அப்போது அதிமுகவினர் இடையே ஒருவருக்கொருவர் தள்ளுமுள்ளு ஏற்பட்டது ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டனர். அங்கு இருந்த சேர்களும் தூக்கி வீசப்பட்டது .
செங்கோட்டையன் விளக்கம்
இதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறும் பொழுது அந்தியூரில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் இ.எம் .ஆர் ராஜா தான் இந்த பிரச்சனைக்கு ஒரு நபரை அனுப்பி வைத்துள்ளதாகவும், அந்தியூர் சட்டமன்ற தொகுதியில் தோல்வி அடைந்ததற்கு, இ.எம்.ஆர் ராஜா தான் காரணம் எனவும் பரபரப்பு குற்றம் சாட்டினார். அதற்கு தகுந்த ஆடியோ சிடி இருப்பதாகவும் குற்றம் சாட்டினார். இதனை தொடர்ந்து கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த இடத்தில் கேள்வி கேட்ட அந்த நபரை அதிமுக உறுப்பினர்கள் அடித்து விரட்டியது குறிப்பிடத்தக்கது.
அதிமுகவில் தொடரும் சலசலப்புகள்
கடந்த சில நாட்களுக்கு முன்பு, அத்திக்கடவு - அவிநாசி திட்ட விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் படங்கள் வைக்கப்படவில்லை என்பதால் பங்கேற்கவில்லை என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறியதால் அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து சட்டப்பேரவைத் தேர்தலுக்கான மாவட்ட பொறுப்பாளர்கள் பெயர்ப் பட்டியலில் செங்கோட்டையனின் பெயர் இடம்பெறாதது கூடுதல் சலசலப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னையில் அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற ஜெயலலிதா பிறந்தநாள் விழாவையும் செங்கோட்டையன் புறக்கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

டாபிக்ஸ்