‘உயர்கல்வியில் அடியெடுத்து வைக்கும் மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்’ முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  ‘உயர்கல்வியில் அடியெடுத்து வைக்கும் மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்’ முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

‘உயர்கல்வியில் அடியெடுத்து வைக்கும் மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்’ முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

Stalin Navaneethakrishnan HT Tamil
Published May 08, 2025 01:00 PM IST

‘தேர்ச்சி பெற இயலாத மாணவர்களும் துவண்டுவிடாதீர்கள். நீங்களும் உயர்கல்வி பெற்று வாழ்வில் வெற்றி பெற்றே தீருவீர்கள். அதற்கான வாய்ப்புகளை நமது அரசு உறுதிசெய்யும்’

‘உயர்கல்வியில் அடியெடுத்து வைக்கும் மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்’ முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
‘உயர்கல்வியில் அடியெடுத்து வைக்கும் மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்’ முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து

‘‘பள்ளிக்கல்வி நிறைந்து உயர்கல்விக்குள் அடியெடுத்து வைக்கும் மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்! நமது பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பின் மகேஷ் அவர்கள் சொன்னதுபோல கல்லூரிக் கனவு - உயர்வுக்குப் படி - சிகரம் தொடு - நான் முதல்வன் என நமது அரசின் திட்டங்கள் அடுத்து உங்களின் ஒவ்வொரு அடியிலும் உடனிருந்து வழிகாட்டும், உதவும்.

பெற்றோர்கள் பிள்ளைகளின் மீது எந்த அழுத்தத்தையும் ஏற்படுத்தாமல், அவர்கள் விரும்பிய துறைகளைத் தேர்ந்தெடுக்க ஊக்குவிக்க வேண்டும். தேர்ச்சி பெற இயலாத மாணவர்களும் துவண்டுவிடாதீர்கள். நீங்களும் உயர்கல்வி பெற்று வாழ்வில் வெற்றி பெற்றே தீருவீர்கள். அதற்கான வாய்ப்புகளை நமது அரசு உறுதிசெய்யும்!,’’

என்று அந்த அறிக்கையில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இன்று வெளியான ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள்

தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 08) வெளியானது. தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டார். தேர்வு முடிவுகளை, results.digilocker.gov.in, tnresults.nic.in, dge.tn.gov.in ஆகிய அதிகாரப்பூர்வ இணைய தளங்கள் மூலம் மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம்.

12ம் வகுப்பு பொதுத் தேர்வில் இந்தாண்டு தேர்ச்சி சதவிகிதம் 95.03% ஆக உள்ளது. மொத்தம் 7,92,494 மாணவர்கள் தேர்வு எழுதியதில், 7,53,142 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்தாண்டும் மாணவர்களைவிட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

  • மாணவிகள் தேர்ச்சி விகிதம் - 96.70%
  • மாணவர்கள் தேர்ச்சி விகிதம் - 93.16%
  • மாணவர்களை விட 3.54 சதவிதம் மாணவியர் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
  • தேர்விற்கு வருகைப்புரியாதவர்களின் எண்ணிக்கை 10,049 ஆகும்.
  • இந்தாண்டு அரசுப் பள்ளிகள் 91.94 சதவிதமும், அரசு உதவி பெறும் பள்ளிகள் 95.71 சதவிதமும், தனியார் சுயநிதிப் பள்ளிகள் 98.88 சதவிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மேலும் படிக்க | தமிழக பொறியியல் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கியது.. ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி? - முழு விவரம்!

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு

தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 3 முதல் மார்ச் 25 வரை நடைபெற்றது. இத்தேர்வை மொத்தம் 8,02,568 மாணவர்கள் எழுதினர். இதில் 18,344 தனித்தேர்வர்கள் மற்றும் 145 சிறைவாசிகளும் அடங்குவர். தேர்வு மொத்தம் 3,316 மையங்களில் நடத்தப்பட்டது. 7,518 மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் இதில் பங்கேற்றனர். முதல் நாள் தமிழ் தேர்வில் 11,430 மாணவர்கள் பங்கேற்கவில்லை என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. தேர்வு காலை 10:00 மணி முதல் பிற்பகல் 1:15 மணி வரை நடைபெற்றது. விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் தொடங்கின. அந்த பணிகளும் நிறைவு பெற்று மதிப்பெண்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணிகளும் முடிந்துவிட்ட நிலையில், பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டுள்ளன.

"மாணவர்களின் உயர்கல்விக்கு வாய்ப்பு"

பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பின்படி, "மாணவர்கள் அடுத்த கட்ட உயர்கல்வியைத் தேர்வு செய்வதற்கு இந்த முடிவு ஒரு முன்னோட்டமாக இருக்கும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவம், பொறியியல் மற்றும் பிற பட்டப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் தங்களது பாதையைத் தெளிவாகத் திட்டமிடுவதற்கு இந்த முன்கூட்டிய வெளியீடு உதவிகரமாக இருக்கும் என பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கூறினர். "தமிழகத்தில் உயர்கல்வியைத் தேர்வு செய்யும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால், அவர்களுக்கு சாதகமான சூழலை உருவாக்குவதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டது" எனவும் அவர்கள் தெரிவித்தனர்.