Anna University issue: ’சைதாப்பேட்டைக்கு போக எனக்கு வழி தெரியும்’ என்று கூறி மா.சு.வை விளாசினாரா ஸ்டாலின்?
ஞானசேகரன் திமுக உறுப்பினர் என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிய நிலையில், சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘ஞானசேகரன் திமுக அனுதாபியே தவிர, திமுக உறுப்பினர் இல்லை’ என்று தெரிவித்தார்.

அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன் உடன் அமைச்சர் மா.சுப்பிரமணியன் இருக்கும் புகைப்படங்கள் வைரல் ஆன நிலையில், அவர் மீது மா.சுப்பிரமணியன் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை மாநகராட்சி மேயராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இருந்த காலம் தொட்டே, அவருக்கு நெருக்கமானவர்களில் ஒருவராக மா.சுப்பிரமணியன் இருந்தார். 2006ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலிலும் வென்று மா.சுப்பிரமணியன் மேயர் ஆக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பின்னணியில் இருந்தார். முதலமைச்சர் வாக்கிங் செல்லும் போதும், கூடவே அழைத்து செல்லும் அளவுக்கு அவரது செல்வாக்கு ஓங்கி இருந்தது. இந்த நிலையில், சென்னை சைதாப்பேட்டை தொகுதியில் நடந்த பொங்கல் பரிசுத் தொகை வழங்கும் விழாவில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொள்ளாதது பல்வேறு கேள்விகளை எழுப்பும் விதமாக உள்ளது.
ஞானசேகரன் உடன் மா.சுப்பிரமணியன்!
கடந்த டிசம்பர் 23ஆம் தேதி அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் உடன் ஞானசேகரன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரல் ஆனது.
ஞானசேகரன் திமுக உறுப்பினர் என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிய நிலையில், சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘ஞானசேகரன் திமுக அனுதாபியே தவிர, திமுக உறுப்பினர் இல்லை’ என்று தெரிவித்தார்.
மா.சு மீது முதல்வர் அதிருப்தி!
அமைச்சர் மா.சுப்பிரமணியன் உடன் ஞானசேகரன் இருக்கும் புகைப்படங்கள் கட்சிக்குள் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளதாம். இதனிடையே, சைதாப்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட் சின்னமலை பகுதியில் பொங்கல் பரிசித் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அன்றைய தினம் காலையிலேயே முதலமைச்சரின் வீட்டுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்று உள்ளார். முதலமைச்சரை நிகழ்ச்சிக்கு அழைத்துச் செல்ல காத்திருந்த போது, ‘சைதாப்பேட்டைக்கு எனக்கு வழி தெரியும்; நான் விழாவுக்கு செல்வேன். நீங்க சட்டசபைக்குச் சென்று, அங்கு பணிகளை பாருங்க’ என கோபமாக கூறி, அமைச்சரை அனுப்பி உள்ளார். பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் இல்லாமலேயே அவரது தொகுதியில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வாங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திரும்பினார்.
