நில அபகரிப்பு வழக்கு: ’அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் ஆஜராகாவிட்டால்…!’ நீதிமன்றம் எச்சரிக்கை
”சிட்கோ நிலத்தை, மா.சுப்பிரமணியன் சென்னை மாநகர மேயராக இருந்தபோது, தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி, போலி ஆவணங்கள் மூலம் தனது மனைவி காஞ்சனாவின் பெயருக்கு மாற்றியதாக புகார்”

அரசுக்கு சொந்தமான சிட்கோ நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்ததாக தொடரப்பட்ட வழக்கில், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி காஞ்சனா ஆகியோர் நேரில் ஆஜராகவில்லை என்றால், குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என எம்.பி, எம்.எல்.ஏக்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளது.
"போலி ஆவணங்கள் மூலம் நில அபகரிப்பு"
சென்னை கிண்டியில் உள்ள தொழிலாளர் காலனியில், எஸ்.கே. கண்ணன் என்பவருக்கு ஒதுக்கப்பட்ட சிட்கோ நிலத்தை, மா.சுப்பிரமணியன் சென்னை மாநகர மேயராக இருந்தபோது, தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி, போலி ஆவணங்கள் மூலம் தனது மனைவி காஞ்சனாவின் பெயருக்கு மாற்றியதாக சைதாப்பேட்டையைச் சேர்ந்த பார்த்திபன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். "இந்த வழக்கில், போலி ஆவணங்கள் தயாரித்தல், ஏமாற்றுதல், கூட்டு சதி மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் மா.சுப்பிரமணியன் மற்றும் காஞ்சனா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது" என நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
"நேரில் ஆஜராக உத்தரவு; இறுதி எச்சரிக்கை"
எம்பி, எம்எல்ஏ-க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. ஏற்கனவே, வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்த நிலையில், குற்றச்சாட்டு பதிவு நடவடிக்கைகளுக்காக மா. சுப்பிரமணியன் மற்றும் காஞ்சனா நேரில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், இன்றைய விசாரணையின்போது இருவரும் ஆஜராகவில்லை. "மே 23, 2025 அன்று இருவரும் கட்டாயம் நேரில் ஆஜராக வேண்டும், இல்லையெனில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும்" என நீதிபதி ஜெயவேல் எச்சரித்தார். மேலும், "இனி கால அவகாசம் வழங்கப்படாது" என உறுதியாகத் தெரிவித்து, வழக்கு விசாரணையை மே 23-ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

டாபிக்ஸ்