EVM Machine: ஈரோடு வாக்கு எண்ணும் மையத்தில் CCTV கேமரா திடீர் பழுது.. மாவட்ட எஸ்பி சொல்வதென்ன?
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Evm Machine: ஈரோடு வாக்கு எண்ணும் மையத்தில் Cctv கேமரா திடீர் பழுது.. மாவட்ட எஸ்பி சொல்வதென்ன?

EVM Machine: ஈரோடு வாக்கு எண்ணும் மையத்தில் CCTV கேமரா திடீர் பழுது.. மாவட்ட எஸ்பி சொல்வதென்ன?

Karthikeyan S HT Tamil
Published Apr 29, 2024 09:56 AM IST

Erode, EVM Machine: ஈரோடு வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி கேமரா பழுதாகி உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 19 ஆம் தேதி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ஜூன் மாதம் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள சூழலில், வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில், சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு அந்தந்த மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளன.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பள்ளி, கல்லூரிகளில் மத்திய தொழில் பாதுகாப்பு படை, தமிழ்நாடு சிறப்பு காவல் படை, தமிழ்நாடு காவல்துறை சார்பில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ஈரோடு மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள சித்தோடு பொறியியல் கல்லூரியில் உள்ள ஸ்ட்ராங் ரூமில் சிசிடிவி கேமரா திடீரென இயங்கவில்லை என புகார் எழுந்துள்ளது. 220க்கும் மேற்பட்ட கேமராக்கள் உள்ள நிலையில் ஸ்ட்ராங் ரூமுக்கு வெளியே வைக்கப்பட்டுள்ள கேமரா பழுதாகி உள்ளது. 

நள்ளிரவு 12 மணிக்கு மேல் சுமார் 30 நிமிடங்கள் வரை சில கேமராக்கள் மட்டும் இயங்காததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஸ்ட்ராங் ரூமில் 3 அடுக்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பழுது ஏற்பட்ட சிசிடிவி கேமரா உடனே சரி செய்யப்பட்டதாக ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவஹர் தகவல் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, நீலகிரி தொகுயில் பதிவான வாக்குகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த உதகை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் திடீரென்று வாக்குப்பதிவு இயந்திரங்களை கண்காணிக்கும் சிசிடிவி கேமராக்கள் செயலிழந்தன.

இது குறித்து விளக்கம் அளித்த மாவட்ட தேர்தல் அதிகாரியும், ஆட்சியருமான அருணா, "தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 173 சிசிடிவி கேமராக்களும் 26 நிமிடங்கள் இயங்கவில்லை என்று தெரிவித்திருந்தார். அதிக வெப்பம் மற்றும் போதிய காற்று வசதி இல்லாத காரணத்தால் 26 நிமிடங்கள் சிசிடிவி கேமராக்கள் செயலிழந்ததாக அவர் விளக்கம் அளித்துள்ளார். பின்னர், தொழில்நுட்பக் கோளாறு உடனடியாக சரி செய்யப்பட்டு, கண்காணிப்பு கேமராக்கள் பயன்பாட்டிற்கு வந்ததாக ஆட்சியர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், நீலகிரியை தொடர்ந்து ஈரோடு தொகுதியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூமில் சிசிடிவி கேமரா இயங்கவில்லை என புகார்  எழுந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மக்களவைத் தேர்தல் 2024:

தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகள் புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளில் ஏப்ரல் 19 அன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4 ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. முன்னதாக, தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த மார்ச் 20ஆம் தேதி தொடங்கி, மார்ச் 27ஆம் தேதி நிறைவடைந்தது. மார்ச் 28ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்ற நிலையில், வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கான அவகாசம் மார்ச் 30ஆம் தேதி உடன் நிறைவடைந்தது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.