RN Ravi: ’தமிழ்நாட்டில் சாதிய பாகுபாடுகள் அதிகரித்து வருகிறது’ பூணூல் அணியும் விழாவில் ஆளுநர் வேதனை!
”தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்த காரணத்தால் பஞ்சாயத்து தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்துமதி என்ற பெண்ணால் பதவி ஏற்க முடியாத நிலை உள்ளது”

அரியலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயிலில் நடைபெற்ற நந்தனார் குருபூஜையில் ஆதி திராவிடர்களுக்கு பூணூல் அணியும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு பேசினார். அதில்,
நந்தனாருக்கு சிவனே நேரடியாக காட்சி அளிக்கும் வகையில் இருந்தவர். அவரின் குருபூஜையில் பங்கேற்பதை பெருமையாக கருதுகிறேன். நந்தனார் போன்ற முனிவர்கள் தாழ்த்தப்பட்ட வகுப்பில் இருந்துதான் தோன்றி உள்ளார்கள்.
நம் அனைவரின் மனதிலும் கடவுள் குடியிருக்கும் போது நம்முள் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற வேறுபாடு எப்படி இருக்க முடியும். நாம் யாரும் உயர்ந்தவர்களோ தாழ்ந்தவர்களோ அல்ல; நாம் அனைவரும் சமமானவர்கள் என கூறப்பட்டுள்ளது. பின்னர் வந்த மனிதர்கள் பிரிவினை ஏற்படுத்திவிட்டு மாபெரும் பிரிவை சூத்திரர்கள் என பிரித்து வைத்தார்கள். இது மிகவும் அவமானகரமான செயலாகும். இதில் இருந்து நாம் விடுதலை அடைய வேண்டும்.
நாடு விடுதலை அடைந்து 75 ஆண்டுகள் ஆனபிறகும் இன்னும் உயர்ந்தவர் தாழ்ந்தவர் வேறுபாடுகள் இருப்பது இன்னும் வேதனை அளிக்கிறது.
இந்த நாட்டில் எல்லா பகுதிகளிலும் சாதிய பாகுபாடுகள் உள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் நடக்கும் நிகழ்வுகளை கேட்கும்போது மனம் வேதனை அடைகிறது.
இந்த பாகுபாடு சாதியால் மட்டுமில்லாமல் பொருளாதாரம், அரசியலிலும் பாகுபாடுகள் காட்டப்படுகிறது.
நான் செய்தித்தாள்களில் பார்க்கிறேன். இந்த சமுதாயத்தில் மாபெரும் பிரிவினரை ஆலயத்தில் பிரவேசிக்க தடை உள்ளது. இது இந்து மதத்திலோ, சனாதன தர்மத்திலோ இல்லை.
வேங்கைவயலில் தாழ்த்தப்பட்ட மக்கள் குடிக்கும் குடிநீரில் மலத்தை கலக்கிறார்கள். நாங்குநேரில் 12ஆம் வகுப்பு மாணவனை ஆசிரியர்கள் பாராட்டியதால் மாற்று சமூதாய மாணவர்கள் அவனை சரமாரியாக தாக்கி உள்ளனர். இது போன்ற கொடுமைகள் தமிழ்நாட்டில் அதிகரித்து வருகிறது.
பள்ளியில் படிக்கும் மாணவர்கள் தங்களை வேறுபடுத்தி காட்டுவதற்காக கையில் சாதி கையிறுகளை அணிகின்றனர்.
தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்த காரணத்தால் பஞ்சாயத்து தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்துமதி என்ற பெண்ணால் பதவி ஏற்க முடியாத நிலை உள்ளது.
சமூகநீதி சமூகநீதி என நாம் பேசி வருகிறோம். ஆனால் 75ஆண்டுகள் கழித்தும் இதே போன்ற இழிநிலைகள் இருந்து வருகிறது.
