மதுரை ஆதீனத்தை கொல்ல சதியா? கார் விபத்து விவகாரத்தில் ஆதீனம் ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  மதுரை ஆதீனத்தை கொல்ல சதியா? கார் விபத்து விவகாரத்தில் ஆதீனம் ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு!

மதுரை ஆதீனத்தை கொல்ல சதியா? கார் விபத்து விவகாரத்தில் ஆதீனம் ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு!

Kathiravan V HT Tamil
Published May 05, 2025 12:41 PM IST

மே 3 அன்று, சென்னை காட்டாங்குளத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மதுரை ஆதீனம், உளுந்தூர்பேட்டையில் தனது காரை மற்றொரு வாகனம் மோதி, தன்னை கொலை செய்ய முயன்றதாக குற்றம்சாட்டினார். இந்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மதுரை ஆதீனத்தை கொல்ல சதியா? கார் விபத்து விவகாரத்தில் ஆதீனம் ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு!
மதுரை ஆதீனத்தை கொல்ல சதியா? கார் விபத்து விவகாரத்தில் ஆதீனம் ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு!

சம்பவத்தின் பின்னணி

கடந்த மே 2 அன்று, மதுரை ஆதீனம் மதுரையிலிருந்து சென்னைக்கு காரில் பயணித்தார். பயணத்தின்போது, கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகிலுள்ள சேலம் ரவுண்டானா பகுதியில், சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த மற்றொரு கார் ஆதீனத்தின் காரின் பின்புறம் மோதியது. இந்த விபத்து ஆதீனத்தின் கார் ஓட்டுநர் அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் வாகனத்தை இயக்கியதால் ஏற்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

மே 3 அன்று, சென்னை காட்டாங்குளத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மதுரை ஆதீனம், உளுந்தூர்பேட்டையில் தனது காரை மற்றொரு வாகனம் மோதி, தன்னை கொலை செய்ய முயன்றதாக குற்றம்சாட்டினார். இந்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

காவல்துறையின் விசாரணை

மதுரை ஆதீனத்தின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்த கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், விபத்து நடந்த இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான சிசிடிவி காட்சிகளை ஆதாரமாக வெளியிட்டார். இந்த காட்சிகள் தொலைக்காட்சி உள்ளிட்ட ஊடகங்களில் ஒளிபரப்பப்பட்டன. விசாரணையில், விபத்துக்கு ஆதீனத்தின் கார் ஓட்டுநரே காரணம் என்பது தெரியவந்தது.

கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த முபாரக் அலி என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில், ஆதீனத்தின் கார் ஓட்டுநர் மீது உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஓட்டுநரின் அஜாக்கிரதையான மற்றும் அதிவேகமான வாகன ஓட்டுதலே விபத்துக்கு காரணம் என காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது. தற்போது உளுந்தூர்பேட்டை காவல்துறையினர் இவ்வழக்கு தொடர்பாக மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.