Budget 2025: தமிழ்நாட்டுக்கு சிறப்பு திட்டங்கள் இல்லை.. வார்த்தை ஜாலங்கள் நிறைந்த மாயஜால அறிக்கை - இபிஎஸ்
Budget 2025: தமிழ்நாட்டுக்கு என சிறப்பு திட்டங்கள் எதுவும் இல்லை. ரயில்வே திட்டங்கள் இல்லாமல் இருப்பது ஏமாற்றமே. பீகார் மாநிலத்துக்கு விரைவில் தேர்தல் வருவதால் அந்த மாநிலத்துக்கான நிதிநிலை அறிக்கையாக உள்ளது என மத்திய பட்ஜெட் குறித்து எட்ப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் 2025-26ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். பட்ஜெட் உரையை தொடங்கும் முன் தெலுங்கு கவிஞரும், நாடக ஆசிரியருமான குருஜாதா அப்பா ராவ் கூறிய வாக்கியமான, "தேசமந்தே மட்டி காடோய், தேசமந்தே மனுஷுலோய்" என சொல்லி நிதியமைச்சர் தொடங்கினார்.
அதாவது "நாடு என்பது மண்ணை மட்டும் குறிப்பது அல்ல. மக்களையே குறிக்கும்" என்பது தான் அதன் பொருள். இதன் அடிப்படையில் நம்து வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றார்.
மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் நிலையில் அரசியல் தலைவர்கள் பலரும் பட்ஜெட் குறித்து தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.
அதன்படி, மத்திய பட்ஜெட் தொடர்பாக அறிக்கை வெளியிட்டிருக்கும் எதிர்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வார்த்தை ஜாலங்கள் நிறைந்த மாயாஜால அறிக்கையாக இருப்பதாக கூறியுள்ளார்.
இதுதொடர்பாக எடப்பாடி பழினிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, "2024-25 பொருளாதார ஆண்டறிக்கையில், குறிப்பிட்ட பொருளாதார வளர்ச்சியை எட்ட, முதலீட்டு மூலதனத்தை ஊக்கப்படுத்தவும், உள்நாட்டு நுகர்வை அதிகரிக்க வேண்டிய அவசியம் பற்றியும் குறிப்பிடப்பட்டிருந்தது. ஏழைகள், பெண்கள், விவசாயிகள், இளைஞர்கள் ஆகியவர்களை மையமாக கொண்டு 2025-26 நிதிநிலை அறிக்கையில் திட்டங்கள் இடம் பெறும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிதிநிலை அறிக்கையில் வருமான வரி விலக்கு கணிசமாக உயர்த்தப்பட்டது வரவேற்கத்தக்க அம்சமாகும்.
உள்நாட்டு உற்பத்தியை ஊக்கப்படுத்த அடிப்படை சுங்கவரிகளில் சில மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதும் வரவேற்கத்தக்கது.
பீகார் மாநில நிதிநிலை அறிக்கையாக உள்ளது
பீகார் மாநிலத்துக்கு விரைவில் தேர்தல் வருவதை கருத்தில் கொண்டு அம்மாநிலத்துக்கு மட்டும் பல வளர்ச்சி திட்டங்களை அறிவித்துள்ளதால், மத்திய அரசின் நிதி நிலை அறிக்கை என கூறுவதை விட, பீகார் மாநில வரவு - செலவு நிதிநிலை அறிக்கை என கருதும்படி அமைந்துள்ளது.
தமிழ்நாட்டுக்கு சிறப்பு திட்டங்கள் எதுவும் இல்லை
தமிழ்நாடு போன்ற மாநிலத்துக்கு எந்தவிதமான சிறப்பு திட்டங்களும் இல்லை. விவசாயத்துறையை பொருத்தவரை 100 மாவட்டங்களுக்கு சிறப்பு திட்டங்கள் உள்பட சில திட்டங்களை அறிவித்துள்ளார்கள். இந்த திட்டங்களில் விவசாயிகளுக்கு உற்பத்தியை பெருக்கவும், இடுபொருள் விலையை கட்டுப்படுத்தவும், விளைப்பொருட்களை நியாயமான விலையில் விற்பனை செய்யவும், அதன் மூலம் விவசாயிகளின் வருமானத்தை பெருக்கவும் தமிழ்நாட்டுக்கு எவ்வாறு உதவும் என்பதை பொருத்திருந்து பார்க்க வேண்டும்.
தமிழ்நாடு மாநிலம் நீர் பற்றாக்குறை மாநிலமாகும். விவசாய வளத்தை பெருக்கவும், விரையமாகும் நீரை பயன்படுத்த உதவும் நதி நீர் இணைப்பு திட்டங்கள் குறித்து எந்த அறிவிப்பும் இல்லை.
அதேபோல் சிறு குறு தொழில்களுக்கும், ஏற்றுமதிக்கும் சில அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்குவும், திறன் மேம்பாட்டு பயிற்சியுடன் புதிய வேகத்தை கொடுக்கவும் திட்டங்கள் ஏதும் இல்லை.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரயில்வே திட்டங்கள் மற்றும் கோவை, மதுரை ஆகிய நகரங்களின் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு எவ்வித அறிவிப்பும் நிதி நிலை அறிக்கையில் இல்லாதது தமிழ்நாட்டுக்கு ஏமாற்றம் அளிக்கிறது.
மாயஜால அறிக்கை
10 ஆண்டுகளுக்கு மேல் 8 சதவீதத்துக்கு குறையாத பொருளாதார வளர்ச்சியை அடைந்தால்தான் 2047இல் வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற இலக்கை அடைய முடியும் என பொருளாதார அறிக்கை கூறுகிறது. இந்த நிதி நிலை அறிக்கையில் தனிநபர் வருமான வரம்பை மட்டும் உயர்த்தியுள்ளதால், இது ஒரு மாயாஜல அறிக்கையாக, வார்த்தை ஜாலங்கள் நிறைந்த அறிக்கையாக தோன்றுகிறது. பொருளாதார வளர்ச்சி ஆண்டுக்கு 8% எப்படி உயர்த்தப்படும் என்பது ஒரு பெரிய கேள்விக்குறியாகவே உள்ளது."
இவ்வாறு அவர் கூறியுள்ளார்

தொடர்புடையை செய்திகள்