மும்மொழிக் கொள்கை: ‘இந்தி கற்பிக்க ஆசிரியர்கள் இல்லையா?’ தமிழக அரசுக்கு ஐடியா கொடுக்கும் அண்ணாமலை
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  மும்மொழிக் கொள்கை: ‘இந்தி கற்பிக்க ஆசிரியர்கள் இல்லையா?’ தமிழக அரசுக்கு ஐடியா கொடுக்கும் அண்ணாமலை

மும்மொழிக் கொள்கை: ‘இந்தி கற்பிக்க ஆசிரியர்கள் இல்லையா?’ தமிழக அரசுக்கு ஐடியா கொடுக்கும் அண்ணாமலை

Kathiravan V HT Tamil
Published Feb 21, 2025 05:01 PM IST

திமுக அரசு நினைத்தால் தமிழ் மொழியில் பட்டம் பெற்று, ஆசிரியர் பணி கனவுடன் இருக்கும் தமிழக இளைஞர்களுக்கு, பக்கத்து மாநிலங்களின் தமிழக எல்லை மாவட்டங்களில் ஆசிரியர் வேலைவாய்ப்பு கிடைப்பதையும் உறுதி செய்யலாம்.

மும்மொழிக் கொள்கை: ‘இந்தி கற்பிக்க ஆசிரியர்கள் இல்லையா?’ தமிழக அரசுக்கு ஐடியா கொடுக்கும் அண்ணாமலை
மும்மொழிக் கொள்கை: ‘இந்தி கற்பிக்க ஆசிரியர்கள் இல்லையா?’ தமிழக அரசுக்கு ஐடியா கொடுக்கும் அண்ணாமலை

தமிழ்நாட்டில் தேசியக் கல்விக் கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக மத்திய - மாநில அரசுகளுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளது. 

தமிழ் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை பிரதமர் நரேந்திர மோடி உலகம் முழுவதும் எடுத்து சென்று வருகிறார். உயர்கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வுகள் தமிழ் உட்பட 13 மொழிகளில் நடைபெறுகிறது. 1968ஆம் ஆண்டில் இருந்து இந்தியாவின் கல்விக் கட்டமைப்பில் மும்மொழிக் கொள்கை முதுகெலும்பாக விளங்குகிறது. தமிழ் உட்பட ஒவ்வொரு மொழியையும் தேசிய கல்விக் கொள்கை மூலம் உரிய இடத்தை பெற உறுதி செய்வதே நோக்கம். தேசியக் கல்விக் கொள்கை விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் என மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதி இருந்தார். 

இதற்கு பதிலளித்து பேசிய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, ”மூன்றாவது மொழியை அறிமுகம் செய்வது, இந்தி தவிர பிற மொழிகளுக்கு தகுதியான ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளிட்ட நடைமுறை சிக்கல்கள் உண்டாகும். இது இந்தியை கற்க வற்புறுத்தும் செயலாக அமைந்துவிடும். இந்தியாவில் 56 மொழிகள் இந்தியால் விழுங்கப்பட்டு உள்ளது. மத்திய அமைச்சர் தர்மேந்திர பிராதானின் மாநிலமான ஒரிய மொழி உட்பட பல்வேறு மொழிகள் இந்தி திணிப்பால் அழிக்கப்பட்டு உள்ளது. அது போன்ற நிலை நமது தாய் மொழிக்கும் வந்துவிடக் கூடாது. தேசியக் கல்விக் கொள்கையை ஏற்றால், வரலாறு மாற்றப்படும். நல்லவர்கள் கெட்டவர்களாகவும், கெட்டவர்கள் தியாகிகளாகவும் காட்டப்படுவார்கள்” என கூறி இருந்தார். 

இந்த நிலையில் மும்மொழிக் கொள்கை அடிப்படையில் ஆசிரியர்களை நியமனம் செய்வது தொடர்பாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது ‘எக்ஸ்’ வலைத்தள பக்கத்தில் ட்வீட் செய்து உள்ளார். அதில், மாண்புமிகு மத்திய கல்வித் துறை அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் அவர்கள், தமிழக மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்யாதீர்கள் என்று, முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களுக்குக் கடிதம் எழுதியிருந்தார். அதற்கு, தமிழக அரசு, வழக்கமான மழுப்பல் காரணங்களோடு, ஹிந்தி தவிர்த்து பிற மொழிகள் கற்பிக்கப் போதிய ஆசிரியர்கள் இல்லை என்று கூறியிருக்கிறது.

மத்திய அரசு ஹிந்தி மொழியை மட்டுமே மூன்றாவது மொழியாகக் கொண்டு வரவில்லை என்பதை ஒப்புக்கொண்ட தமிழக அரசுக்கு முதலில் நன்றி. ஏற்கனவே பல ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கும்போது, உடனடியாக நீங்கள் வேறு இந்திய மொழிகளுக்கான ஆசிரியர்களை நியமித்து விடுவீர்கள் என்று, திமுக அரசை அறிந்த யாரும் எதிர்பார்க்கமாட்டார்கள். ஆனால் அதற்கான பணிகளைத் தமிழக அரசு தொடங்கலாம்.

தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளி மாணவர்களிடம் கருத்துக்கணிப்பு மேற்கொண்டு, எந்தெந்த மொழிகளைக் கற்க மாணவர்கள் விரும்புகிறார்கள் என்பதை முடிவு செய்து, அதன் அடிப்படையில் அந்தந்த மொழிகளைப் பயிற்றுவிக்க ஆசிரியர்களை நியமிக்கும் பணிகளைத் தொடங்க வேண்டும்.

மேலும், திமுக அரசு நினைத்தால் தமிழ் மொழியில் பட்டம் பெற்று, ஆசிரியர் பணி கனவுடன் இருக்கும் தமிழக இளைஞர்களுக்கு, பக்கத்து மாநிலங்களின் தமிழக எல்லை மாவட்டங்களில் ஆசிரியர் வேலைவாய்ப்பு கிடைப்பதையும் உறுதி செய்யலாம். எனவே, கல்வியில் வீணாக அரசியல் செய்யாமல், PMSHRI திட்டத்தில் இணைந்து, தமிழக பள்ளி மாணவர்கள், இளைஞர்கள் எதிர்காலம் சிறப்பாக அமைய, தமிழக அரசு உதவ வேண்டும்.