Erode East By Election: அதிமுக வழியில் பாஜக! ஈரோடு இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அண்ணாமலை அறிவிப்பு!
வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல், திமுகவை முழுமையாக அகற்றவிருக்கும் தேர்தல். அந்த இலக்கை நோக்கியே, தேசிய ஜனநாயகக் கூட்டணி தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இதன் நடுவே, இடைத்தேர்தலில் மீண்டும் கால்நடைகளைப் போலப் பொதுமக்களை அடைத்து வைக்க தேசிய ஜனநாயகக் கூட்டணி விரும்பவில்லை.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை பாஜக கூட்டணி புறக்கணிப்பதாக அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்து உள்ளார். பிரதான எதிர்க்கட்சியான அதிமுக மற்றும் தேமுதிக ஆகிய கட்சிகள் ஈரோடு இடைத் தேர்தலில் போட்டியிடப்போவது இல்லை என்று நேற்றைய தினம் அறிவித்து இருந்தன.
இருண்டகாலத்தில் தமிழகம்!
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த நான்கு ஆண்டுகளாக, தமிழகத்தில் நடைபெற்று வரும் மக்கள் விரோத ஆட்சியைப் பார்த்து வருகிறோம். எல்லா துறைகளிலும் ஊழல், சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, வேலைவாய்ப்பின்மை, பெண்கள், குழந்தைகள், முதியவர்கள், அரசு அதிகாரிகள், காவல்துறையினர் என யாருக்குமே பாதுகாப்பின்மை என, தமிழகம் ஒரு இருண்ட காலத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறது.
திராவிட மாடலா? டிசாஸ்டர் மாடலா?
சட்டமேதை அம்பேத்கர் அவர்கள் நமக்கு வழங்கிய அரசியல் சாசன சட்டத்திற்கு நேர் எதிராகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது திமுக அரசு. இந்த ஆட்சியின் அவலங்களைத் தினந்தோறும் சகித்துக் கொண்டுள்ள மக்கள், இது திராவிட மாடல் இல்லை, Disaster மாடல் என்று உரக்கச் சொல்லத் துவங்கிவிட்டனர்.