‘எதிர்க்கட்சிகள் கோமாளிகளா? ஆணவத்தின் வெளிப்பாடு’ விளாசும் தமிழிசை சவுந்தராஜன்
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  ‘எதிர்க்கட்சிகள் கோமாளிகளா? ஆணவத்தின் வெளிப்பாடு’ விளாசும் தமிழிசை சவுந்தராஜன்

‘எதிர்க்கட்சிகள் கோமாளிகளா? ஆணவத்தின் வெளிப்பாடு’ விளாசும் தமிழிசை சவுந்தராஜன்

Kathiravan V HT Tamil
Published Jun 02, 2025 04:33 PM IST

“இது வரவேற்கத்தக்க தீர்ப்பு. ஆனால், ஞானசேகரனுக்கு உதவியவர்கள் யார்? இந்தக் குற்றத்திற்கு பின்புலம் என்ன? இவர் தனியாகவா குற்றம் செய்தார்?

‘எதிர்க்கட்சிகள் கோமாளிகளா? ஆணவத்தின் வெளிப்பாடு’ விளாசும் தமிழிசை சவுந்தராஜன்
‘எதிர்க்கட்சிகள் கோமாளிகளா? ஆணவத்தின் வெளிப்பாடு’ விளாசும் தமிழிசை சவுந்தராஜன்

பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், திமுக அரசு மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். மதுரையில் நடைபெற்ற திமுக பொதுக்குழுவில் எதிர்க்கட்சிகளை “கோமாளிகள்” என்று குறிப்பிட்டதற்கு பதிலடியாக, “கோமாளிகள் என்று சொல்பவர்கள் ஏமாளிகளாகப் போகிறார்கள்” என்று தமிழிசை கூறினார். மேலும், திமுக அரசின் ஆட்சி முறையையும், மக்கள் மீது விதிக்கப்பட்டுள்ள கடன் சுமையையும் கடுமையாக விமர்சித்தார்.

திமுகவின் தீர்மானம் மற்றும் விமர்சனம்

திமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களைப் பற்றி பேசிய தமிழிசை, “எதிர்க்கட்சிகளை கோமாளிகள் என்று அழைப்பது ஆணவத்தின் வெளிப்பாடு. ஆளும் கட்சி என்பதால் தங்களை திறமையாளர்களாகவும், எதிர்க்கட்சிகளை கோமாளிகளாகவும் கூறுவது ஏற்க முடியாது,” என்றார். மேலும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை கேள்வி எழுப்பினார். “எந்தக் குற்றத்திற்காக தோழர்கள் ஓடிப்போனார்களோ, அதற்கு துணை நிற்பதற்காகவா இந்த தீர்மானம்?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.

தமிழக அரசின் கடன் சுமை

தமிழக அரசு 8 லட்சம் கோடி ரூபாய் கடனை உருவாக்கி, மக்கள் மீது 80,000 கோடிக்கு மேல் வட்டிச் சுமையை ஏற்றியிருப்பதாக தமிழிசை குற்றம்சாட்டினார். “இப்படிப்பட்ட அரசு மற்றவர்களை கோமாளிகள் என்று அழைப்பது நியாயமற்றது,” என்று அவர் கூறினார்.

அண்ணா பல்கலைக்கழக வழக்கு

அண்ணா பல்கலைக்கழக வழக்கில் குற்றவாளியான ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் தண்டனைக் குறைப்பு இல்லாத ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதை வரவேற்பதாக தமிழிசை தெரிவித்தார். “இது வரவேற்கத்தக்க தீர்ப்பு. ஆனால், ஞானசேகரனுக்கு உதவியவர்கள் யார்? இந்தக் குற்றத்திற்கு பின்புலம் என்ன? இவர் தனியாகவா குற்றம் செய்தார்? இந்தக் கேள்விகள் இன்னும் பதிலளிக்கப்படவில்லை,” என்று அவர் கூறினார். மேலும், நீதிமன்றத்தின் விரைவான செயல்பாட்டை திமுக தனது சாதனையாகக் கூறுவது தவறு என்றும், வேங்கைவயல் போன்ற பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படவில்லை என்றும் விமர்சித்தார்.

மதுரை ரோட்ஷோ மீது விமர்சனம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மதுரை ரோட்ஷோவை கிண்டல் செய்த தமிழிசை, “பிரதமர் மோடியின் ரோட்ஷோவை கிண்டல் செய்தவர்கள், இப்போது அதையே பின்பற்றி ரோட்ஷோ நடத்துகிறார்கள். ஆனால், சாக்கடைகளை மறைத்து, திரைகளைப் போட்டு ரோட்ஷோ நடத்தியிருக்கிறார்கள். அடிப்படை கட்டமைப்பு இல்லாத தமிழகத்தில், எத்தனை திரைகள் போட்டாலும் மோசமான ஆட்சியை மறைக்க முடியாது,” என்று கடுமையாக விமர்சித்தார்.