TVK Vijay: தனது மகனை இண்டர்நேஷனல் பள்ளியில் படிக்க வைத்த விஜய் மும்மொழிக் கொள்கையை எதிர்ப்பதா? ஹெச்.ராஜா சரமாரி கேள்வி!
ஜேஸன் சஞ்சய்யை அமெரிக்கன் இண்டர்நேஷனல் பள்ளியில் சேட்த்a

மும்மொழிக் கொள்கை விவகாரத்தில் தவெக தலைவர் விஜய்யின் மகனின் கல்வித் தகுதியை சுட்டிக்காட்டி பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா விமர்சனம் செய்து உள்ளார்.
தேசியக் கல்விக் கொள்கையை தமிழ்நாடு ஏற்றால் மட்டுமே மத்திய அரசு திட்டங்களுக்கான நிதியை ஒதுக்கீடு செய்யும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறிய கருத்து பெரும் விவாதத்தை கிளப்பி உள்ளது.
தவெக தலைவர் விஜய் ட்வீட்
இது தொடர்பாக தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் தவெக தலைவர் விஜய் ட்வீட் செய்து இருந்தார். அதில், மும்மொழிக் கொள்கையை வலியத் திணிப்பது, மாநிலங்களின் தன்னாட்சி உரிமையைப் பறிப்பதன்றி வேறென்ன?
ஜனநாயகத்தின் நான்காவது தூணான இதழியல் துறைக்கு உரியதான பத்திரிகை சுதந்திர தர்மம் காக்கப்பட வேண்டும். நூற்றாண்டு காணும் விகடனின் இணையத்தளப் பக்கம் முடக்கப்பட்டதற்கு ஒன்றிய அரசுதான் காரணம் என்கிற கருத்து நிலவுகிறது. பத்திரிகை, ஊடகங்களால் வெளியிடப்படும் கருத்துகள் தவறானவையாகவோ, குற்றம் சுமத்துபவையாகவோ இருந்தால் நீதிமன்றம் மூலம் தீர்வு காண வேண்டுமே தவிர, கருத்துச் சுதந்திரத்தை முடக்கும் வகையில் செயல்படுவது, அரசியல் சாசன உரிமையைக் கேள்விக்குறி ஆக்குவதன்றி வேறென்ன?
மாநில மொழிக் கொள்கைக்குச் சவால் விடுத்து, தமிழகத்திற்கு நிதி ஒதுக்கமாட்டோம் என்று பகிரங்கமாக அறிவிப்பதும், விகடன் இணையத்தளப் பக்கத்தை முடக்கியதும் ஜனநாயகத்திற்கு எதிரான, கண்டனத்திற்கு உரிய ஃபாசிச அணுகுமுறையே.
ஃபாசிச அணுகுமுறைகளை எந்த வடிவத்தில் யார் கையிலெடுத்தாலும் அது ஒன்றிய அரசாக இருந்தாலும், மாநில அரசாக இருந்தாலும் மக்கள் பக்கம் நின்று தமிழக வெற்றிக் கழகம் எந்நாளும் தீர்க்கமாக எதிர்க்கும் என தெரிவித்து இருந்தார்.
விஜய்க்கு பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கேள்வி
இந்த நிலையில் மொழிக் கொள்கை குறித்த தவெக தலைவர் விஜய்யின் அறிக்கையும், அவரது செயல்பாடுகளையும் சுட்டிக்காட்டி பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா விமர்சனம் செய்து உள்ளார். அதில், நடிகரும் தவெக தலைவருமான திரு.விஜய் அவர்கள் வேட்டைக்காரன் என்கிற ஒரு திரைப்படத்தின் முதல் பாடலில் தனது மகன் திரு.ஜேஸன் சஞ்சய் அவர்களோடு நடனமாடி இருப்பார்.
அந்த பாடலில் பள்ளிச் சிறுவர்கள் கூட்டத்தின் மத்தியில் நின்று … “ ஆலமர பள்ளிக்கூடம் ஆக்ஸ்போர்டா மாறனும், நீ தாய்மொழியில் கல்வி கற்று தமிழ்நாட்டை உயர்த்தனும்” என்று பாடுவார்.
தமிழக மாணவர்கள் தாய்மொழியில் கல்வி கற்று தமிழ்நாட்டை உயர்த்தனும் என்று தன் மகனோடு நடனமாடி பாடிய அவர்தான்...
தன் மகன் திரு.ஜேஸன் சஞ்சய் அவர்களை தமிழ்வழி சமச்சீர் பள்ளியில் சேர்க்காமல் மும்மொழி கல்வி போதிக்கும் சென்னை "அமெரிக்கன் இன்டர்நேஷனல் ஸ்கூலில்" சேர்த்து படிக்க வைத்திருக்கிறார்.
ஆலமர பள்ளிக்கூடம் ஆக்ஸ்போர்டா மாறனும் என்று பாடி இருக்கிறாரே தவெக தலைவர் விஜய் அவர்கள்...
அவர் விருப்பபடி அரசு பள்ளிகள் எல்லாம் ஆக்ஸ்போர்ட் போல அவருடைய மகன் திரு.ஜேஸன் சஞ்சய் பயின்ற அமெரிக்கன் இன்டர்நேஷனல் ஸ்கூல் போல கல்வித் தரத்தில் உயர வேண்டும் என்கிற உயர்ந்த நோக்கத்தோடு தான் புதிய தேசிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. அதை புரிந்து கொள்ளாமல் அவர் மும்மொழிக் கொள்கையை எதிர்ப்பது ஏன் என தெரியவில்லை.
அவர் மகனை மும்மொழி கல்வி போதிக்கும் பள்ளியில் சேர்த்து படிக்க வைத்துவிட்டு அவருடைய ரசிகர்கள் வீட்டுப் பிள்ளைகள் மற்றும் தமிழக குழந்தைகள் அனைவருக்கும் அதே தரத்திலான மும்மொழி கல்வியை மத்திய அரசு வழங்குவதற்கு அவர் எதிர்ப்பு தெரிவிப்பது வியப்பாக இருக்கிறது.
