Annamalai vs MK Stalin: சாராய விற்பனையை தட்டிக்கேட்ட 2 இளைஞர்கள் கொலை! முதல்வரை சாடும் அண்ணாமலை!
துருப்பிடித்த இரும்புக்கையை வைத்துக் கொண்டு, தன்னைத்தானே புகழ்ந்து தினமும் ஷூட்டிங் நடத்திக் கொண்டிருக்க, முதலமைச்சர் திரு. ஸ்டாலினுக்குக் கூச்சமில்லையா? சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற முடியவில்லை என்றால், தமிழ் சினிமாவில் முழு நேர துணை நடிகராகச் செல்ல வேண்டியதுதானே?

மயிலாடுதுறை அருகே முட்டம் கிராமத்தில் சாராய விற்பனயை தட்டிக் கேட்ட கல்லூரி மாணவன் ஹரிசக்தி மற்றும் ஹரிஷ் ஆகிய இருவரும் சாராய வியாபாரிகளால் படுகொலை செய்யப்பட்டனர். சாராய வியாபாரி ராஜ்குமார், தங்கதுரை ஆகிய 2 பேர் கைதான நிலையில், மூவேந்தன் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
காவல்துறை விளக்கம்:-
இந்த சம்பவத்திற்கு சாராய விற்பனை காரணம் அல்ல; முன் விரோதமே காரணம் என காவல்துறை விளக்கம் அளித்து உள்ளது. ஒரே தெருவில் வசித்த இளைஞர்களுக்குள் ஏற்பட்ட வாய்த் தகராறே சம்பவத்திற்கு காரணம் என காவல்துறை கூறி உள்ளது. தினேஷ், மூவேந்தன் ஆகியோர் இடையே ஏற்கெனவே முன் விரோதம் இருந்து வந்து உள்ளது. சம்பவ தினத்தன்று மூவேந்தன் உள்ளிட்டோர் தினேஷிடம் தகராறு செய்து தாக்கி உள்ளனர். தடுக்க வந்த ஹரிஷ், சக்தி ஆகியோரை மூவேந்தன் உள்ளிட்டோர் கத்தியால் தாக்கியதாக காவல்துறை தெரிவித்து உள்ளது.
அண்ணாமலை கண்டனம்
இந்த சம்பவத்திற்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மயிலாடுதுறை மாவட்டம் முட்டம் கிராமத்தில், சாராய விற்பனையைத் தட்டிக் கேட்ட, எஞ்சினியரிங் கல்லூரி மாணவர் உட்பட இரண்டு இளைஞர்களை, சாராய வியாபாரிகள் படுகொலை செய்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆறாக ஓடும் கள்ளச்சாராய விற்பனை
தமிழகம் முழுவதுமே கள்ளச்சாராயம் ஆறாக ஓடிக் கொண்டிருக்கிறது. இது அந்தந்த பகுதி காவல்துறைக்குத் தெரியாமலா இருக்கும்? இன்று சாராய வியாபாரிகளால் இரண்டு இளைஞர்கள் உயிர் போயிருக்கிறதே. உங்களுக்கெல்லாம் மனசாட்சி என்று ஒன்று இருக்கிறதா?
மு.க.ஸ்டாலினுக்கு கூச்சமே இல்லையா?
துருப்பிடித்த இரும்புக்கையை வைத்துக் கொண்டு, தன்னைத்தானே புகழ்ந்து தினமும் ஷூட்டிங் நடத்திக் கொண்டிருக்க, முதலமைச்சர் திரு. ஸ்டாலினுக்குக் கூச்சமில்லையா? சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற முடியவில்லை என்றால், தமிழ் சினிமாவில் முழு நேர துணை நடிகராகச் செல்ல வேண்டியதுதானே? தமிழ்த் திரையுலகம் உங்கள் கைகளில்தானே இருக்கிறது.
தமிழகம் தற்போது, 2006 - 2011 திமுகவின் இருண்ட ஆட்சிக் காலத்தை விட, மிக மோசமான நிலைக்குச் சென்று கொண்டிருக்கிறது. உங்கள் கையாலாகாத்தனத்தால், அமைதியான பொதுமக்களை, மிக மிக மோசமான எதிர்விளைவுகளுக்குத் தூண்டிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் உணர வேண்டும்.
