’ஞானசேகரன் வீட்டில் பிரியாணி சாப்பிட்டாரா மா.சுப்பிரமணியன்’ வைரல் போட்டோக்கள்! அம்பலப்படுத்தும் அண்ணாமலை?
ஞானசேகரன், அமைச்சர் திரு மா.சுப்பிரமணியன் அவர்களுடன், வெகு சமீபத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படம் இது. பெஞ்சல் புயல் பணிகளின்போது, அமைச்சருடன் செல்லும் அளவுக்கு நெருக்கமாக இருக்கும் இந்த ஞானசேகரன் குறித்து, அமைச்சர் திரு. மா. சுப்பிரமணியன் ஏன் இன்னும் விளக்கமளிக்கவில்லை? என அண்ணாமலை கேள்வி
அண்ணா பல்கலைக்கழக மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரனின் வீட்டில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பிரியாணி சாப்பிடுவது போன்ற புகைப்படங்கள் சமூகவலைத்தளத்தில் வைரல் ஆகி வருகின்றது.
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர் ஒருவருடன் மாணவி பேசிக் கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத நபர் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது. இந்த விவகாரத்தில் ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர் தப்ப முயன்ற போது கீழே விழுந்ததில் அவருக்கு கை மற்றும் கால்களில் காயம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த விவகாரம் தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு உள்ள ஞானசேகரன், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உடன் இருக்கும் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரல் ஆகி வருகின்றது.
இது தொடர்பான புகைப்படங்களின் உண்மை தன்மையை, அரசு தகவல் சரிபார்ப்பு நிறுவனமான ‘TN Fact Check’ அமைப்பு உறுதிப்படுத்துமா என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்த நிலையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பதிவிட்டுள்ள ’எக்ஸ்’ வளைத்தள பதிவில், அமைச்சர் மா.சுப்பிரமணியன் உடன் ஞானசேகரன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து உள்ளார். அதில், ”அண்ணா பல்கலைக்கழக மாணவியை பாலியல் தாக்குதல் செய்த குற்றவாளியான திமுக நிர்வாகி ஞானசேகரன், அமைச்சர் திரு மா.சுப்பிரமணியன் அவர்களுடன், வெகு சமீபத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படம் இது. பெஞ்சல் புயல் பணிகளின்போது, அமைச்சருடன் செல்லும் அளவுக்கு நெருக்கமாக இருக்கும் இந்த ஞானசேகரன் குறித்து, அமைச்சர் திரு. மா. சுப்பிரமணியன் ஏன் இன்னும் விளக்கமளிக்கவில்லை?
குற்றவாளி திமுகவைச் சேர்ந்தவன் என்பதை மறைக்க, இன்னும் எத்தனை நாட்களுக்குப் பொய் சொல்லி ஏமாற்றலாம் என்று நினைக்கிறது திமுக அரசு? திமுகவினருக்காக மட்டுமே இந்த ஆட்சி நடக்கிறதா? முதலமைச்சர் ஸ்டாலினுக்கு, நமது சகோதரிக்கான நியாயத்தை விட, திமுகவைச் சேர்ந்த குற்றவாளி முக்கியமாகிவிட்டாரா?” என கேள்வி எழுப்பி உள்ளார்.