Jayalalithaa's Assets: சொத்து குவிப்பு வழக்கு.. ஜெயலலிதாவிடம் பறிமுதல் செய்த நகைகள் மீண்டும் தமிழகம் வருகை!
Jayalalithaa's Assets: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டில் நடத்திய சோதனையின் போது தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 2004ல் சொத்துக்குவிப்பு வழக்கு கர்நாடகத்திற்கு மாற்றப்பட பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களும் பெங்களூரு கருவூலத்தில் வைக்கப்பட்டன.

Jayalalithaa's Assets: சொத்துக்குவிப்பு வழக்கில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 27 கிலோ நகைகள், 1562 ஏக்கர் நிலப்பத்திரம் ஆகியவற்றை தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறையிடம் ஒப்படைக்க கர்நாடக அரசுக்கு பெங்களூரு நகர நீதிமன்றம் இன்று (ஜனவரி 29) உத்தரவு பிறப்பித்துள்ளது. தங்க, வைர, வெள்ளி நகைகள் மற்றும் நிலப்பத்திரங்களை வரும் பிப்ரவரி 14, 15 ஆகிய தேதிகளில் ஒப்படைக்க வேண்டும் எனவும் அன்றைய தினம் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், பெட்டிகளுடன் வர வேண்டும் எனவும் அவற்றை கொண்டு செல்ல உரிய வாகன, பாதுகாப்பு வசதிகளை ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருட்கள் எடுத்துச் செல்லும் போது அதனை மதிப்பீடு செய்ய மதிப்பீட்டாளர்கள் இருக்க வேண்டும், ஒட்டுமொத்த நடைமுறையும் வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்றும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
கடந்த 1996ம் ஆண்டு ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டில் நடத்திய சோதனையின் போது இந்த பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 2004ல் சொத்துக்குவிப்பு வழக்கு கர்நாடகத்திற்கு மாற்றப்பட பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களும் பெங்களூரு கருவூலத்தில் வைக்கப்பட்டன. இந்த நிலையில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்த பொருட்களை தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறையிடம் ஒப்படைக்க பெங்களூரு நகர நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கின் பின்னணி
கடந்த 1991 முதல் 1996 வரையிலான ஆட்சிக் காலத்தில், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது 2014 ஆம் ஆண்டு சிறப்பு நீதிமன்றம் குற்றம் சாட்டியது. அவர் குற்றவாளி எனத் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து, அவரது சொத்துக்கள் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டன.
கடந்த்த 2015 ஆம் ஆண்டில் கர்நாடக உயர் நீதிமன்றத்தால் அவர் விடுவிக்கப்பட்டாலும், அப்போதைய கர்நாடக காங்கிரஸ் அரசு அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. கடந்த 2016-ம் ஆண்டு ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அவர் மீதான வழக்கு ரத்து செய்யப்பட்டது. மறைந்த முதல்வரின் நெருங்கிய தோழி வி.கே.சசிகலா, அவரது உறவினர்கள் வி.என்.சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோருக்கு 2017 ஆம் ஆண்டில் சிறை தண்டனை விதிக்கப்பட்டபோது, ஜெயலலிதாவின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டதை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.
மேல்முறையீடு செய்த தீபா, தீபக்
2020 ஆம் ஆண்டில் சென்னை உயர் நீதிமன்றத்தால் ஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசுகளாக அங்கீகரிக்கப்பட்ட அவரது அண்ணன் மகன் தீபக், மகள் தீபா ஆகியோர் ஜெயலலிதாவின் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை விடுவிக்கக் கோரி மேல்முறையீடு செய்தனர். ஜெயலலிதா இறந்தவுடன் அவருக்கு எதிரான நடவடிக்கைகள் நிறுத்தப்படுவதால், அவரை ஒரு குற்றவாளியாக கருதக்கூடாது, மேலும் அவரது சொத்துக்களை வாரிசுகளிடம் ஒப்படைக்க வேண்டும் என வாதம் வைக்கப்பட்டது.
நிராகரித்த நீதிமன்றம்
இந்த வழக்கின் இறுதி விசாரணை முடிவடைந்த நிலையில், கர்நாடகா உயர்நீதிமன்றம், ஜெயலலிதாவின் சொத்துகளை தங்களிடம் ஒப்படைக்க கோரி ஜெ.தீபா உள்ளிட்ட வாரிசுகள் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையிடம் ஒப்படைக்க உத்தரவு
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 27 கிலோ நகைகள், 1562 ஏக்கர் நிலப்பத்திரம் ஆகியவற்றை தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறையிடம் ஒப்படைக்க கர்நாடக அரசுக்கு பெங்களூரு நகர நீதிமன்றம் இன்று (ஜனவரி 29) உத்தரவு பிறப்பித்துள்ளது.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்