காவல் நிலைய தாக்குதல் – கே.என்.நேரு ஆதரவாளர்களுக்கு ஜாமீன் மறுப்பு
Bail Rejected: திருச்சியில் எம்பி சிவா வீடு மற்றும் காவல் நிலையம் தாக்கப்பட்ட சம்பவங்களில் தொடர்புடைய கவுன்சிலர்கள் உள்ளிட்ட 5 பேருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது.
திருச்சி கண்டோன்மெண்ட் எஸ்.பி.ஐ. காலனி பகுதியில் இறகுபந்து உள் விளையாட்டு அரங்க திறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கான அழைப்பிதழில் திருச்சி சிவா எம்.பி.யின் பெயர் இடம்பெறவில்லை என்று கூறி, விழாவிற்கு வந்த அமைச்சர் கே.என்.நேருவிற்கு சிவா எம்.பி.யின் ஆதரவாளர்கள் கருப்பு கொடி காட்டினர்.
ட்ரெண்டிங் செய்திகள்
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர் கே.என்.நேருவின் ஆதரவாளர்கள் சிவா எம்.பி.யின் வீடு, கார், இருசக்கர வாகனம் மற்றும் நாற்காலிகளை அடித்து நொறுக்கினர். இதற்கிடையே கருப்புக்கொடி காட்டியவர்களை போலீசார் கைது செய்து திருச்சி செசன்ஸ் கோர்ட் போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போது போலீஸ் நிலையத்திற்குள் புகுந்து சிவா எம்.பி.யின் ஆதரவாளர்களை, அமைச்சர் கே.என்.நேருவின் ஆதரவாளர்கள் தாக்கினர்.
இதையடுத்து, இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கவுன்சிலர்கள் காஜாமலை விஜய், முத்துசெல்வம், ராமதாஸ், ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் துரைராஜ் ஆகிய நான்கு பேரும், கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்டதாக கூறி திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கி அமைச்சரும், திமுக பொதுச்செயலாளருமான துரைமுருகன் உத்தரவிட்டார்.
இவ்விவகாரம் தொடர்பாக சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நேரு விளக்கமளித்தார். தொடர்ந்து திருச்சி சிவா எம்பியின் வீட்டிற்கு வந்து சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்தார். எனினும், காவல் நிலையில் புகுந்து தாக்குதல் நடத்திய சம்பவத்தை எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன.
இதையடுத்து எஸ்ஐ மோகன் அளித்த புகாரின்பேரில் 10 பிரிவுகளின் கீழ் செசனஸ் கோர்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கவுன்சிலர்கள் காஜாமலை விஜய், முத்துசெல்வம், ராமதாஸ், ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் துரைராஜ், பகுதி துணை செயலாளர் திருப்பதி ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்து, திருச்சி குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் அவர்கள் 5 பேரும் ஜாமீன் கேட்டு திருச்சி குற்றவியல் கோர்ட் எண் 2ல் மனு தாக்கல் செய்தனர். அதன் மீதான விசாரணை நேற்று நடைபெற்றது. மனுதாரர்கள் தரப்பில் ஆஜராக வழக்கறிஞர்கள், அரசியல் காரணங்களால் தொடரப்பட்ட வழக்கு என்பதால், இதிலிருந்து 5 பேருக்கும் ஜாமீன் வழங்கும்படி வாதிட்டனர். ஆனால், அரசு தரப்பு வழக்கறிஞர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். எனவே அந்த மனுவை விசாரித்த நீதிபதி பாலாஜி, ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
டாபிக்ஸ்