DMK - Congress: 'திமுகவினர் விழாக்களில் காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்க வேண்டாம்’: வெளியான வாய்மொழி உத்தரவின் பின்னணி!
திமுகவினர் விழாக்களில், காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்க வேண்டாம் என காங்கிரஸ் மாவட்டத் தலைவர்களுக்கு வாய் மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

திமுக விழா மற்றும் அரசு விழாக்களில் காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்க வேண்டாம் என மாவட்டத் தலைவர்களுக்கு வாய் மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. குறைந்த தொகுதி தருவதாக எழுந்த பிரச்னை காரணமாக இத்தகவல் வெளியாகியுள்ளது.
வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுக்கும் காங்கிரஸுக்கும் இடையே தொகுதி உடன்பாடு எட்டப்படவில்லை. அதுமட்டுமில்லாமல் காங்கிரஸை, திமுக ஒரு கிள்ளுக்கீரையாக நினைப்பதாகவும் காங்கிரஸ்காரர்களிடையே அதிருப்தி கிளம்பியுள்ளது. கடந்த முறை திமுக கூட்டணியில் அங்கம் வகித்த காங்கிரஸுக்கு 10 சீட்டுகள் கொடுக்கப்பட்டு, அதில் 9 இடங்களில் காங்கிரஸ் வென்றது.
ஆனால், இந்த முறை காங்கிரஸுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு செய்வது என திமுக தலைமை முடிவுஎடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. அதிலும், ஒரு சீட்டினை மக்கள் நீதி மய்யத்துடன் பகிர்ந்துகொள்ளுமாறு திமுக கேட்டுள்ளது. முன்பே காங்கிரஸ் - மக்கள் நீதி மய்யம் இடையே ஒரு இணக்கமான சூழல் இருந்த நிலையில், காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் ஒன்றை, மக்கள் நீதி மய்யத்துக்குத்தள்ளிவிட திமுக தலைமை முடிவு எடுத்துள்ளது.
அதுமட்டுமின்றி, திருச்சி மக்களவைத் தொகுதியில் சிட்டிங் எம்.பி. திருநாவுக்கரசர் அத்தொகுதியில் மக்கள் பணியாற்றி தனக்கு அந்தத்தொகுதி கிடைக்கும் என நம்பிவந்த நிலையில், திமுக அதனை மதிமுகவுக்கு ஒதுக்கி, துரை வைகோவை களம்காண முயற்சித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, வைகோவிடம் கூட இத்தொகுதியை விட்டுக்கொடுக்குமாறு கேட்டுள்ளார். ஆனால், வைகோ அசைந்துகொடுக்கவில்லை. இதனால், திருநாவுக்கரசர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கடும் அப்செட்டில் உள்ளனர்.
இந்நிலையில் திமுக - காங்கிரஸ் கூட்டணி தொடர்பாக இறுதி முடிவு எடுக்க, காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகையை டெல்லிக்கு அழைத்து ஆலோசனை நடத்தியிருக்கிறார்.
அப்போது காங்கிரஸ் 10 தொகுதிக்குக் குறைவாகப் பெறக்கூடாது எனவும், முடிந்தளவு திமுகவிடம் கறார் காட்டவேண்டும் எனவும் கூறியதாகத் தெரிகிறது.
இந்நிலையில் திமுகவுடன் தொகுதிப் பங்கீடு செய்வது வரை, திமுகவினரின் விழா மற்றும் அரசு விழாக்களில் காங்கிரஸ் கட்சியினர் தற்போது பங்கேற்க வேண்டாம் என மாவட்டத் தலைவர்களுக்கு வாய் மொழி உத்தரவிட்டுள்ளது, காங்கிரஸ் கட்சியின் தலைமை என்கிறார்கள்.
குறைந்த தொகுதி தருவதாக எழுந்த பிரச்னையை காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை வைத்து, திமுக தலைவர் ஸ்டாலினுடன் பேசி இப்பிரச்னையைத் தீர்க்கமுடிவு எடுத்துள்ளதாகவும் அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
