கோவை: ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல்-உரிய நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் மனு!
இன்று கோவை பத்திரிக்கையாளர்கள் இணைந்து ஆட்சியரை சந்தித்து ஒளிப்பதிவாளர் தாக்கப்பட்ட விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு கல்குவாரி தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்ற நியூஸ் தமிழ் ஒளிப்பதிவாளர் பாலாஜி மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம்,கோவை பத்திரிக்கையாளர் மன்றம், மற்றும் மாற்றத்திற்கான ஊடகவியலாளர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று கோவை பத்திரிக்கையாளர்கள் இணைந்து ஆட்சியரை சந்தித்து ஒளிப்பதிவாளர் தாக்கப்பட்ட விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.
ட்ரெண்டிங் செய்திகள்
இந்நிலையில் மாற்றத்திற்கான ஊடகவியலாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு
கோவை நியூஸ் தமிழ் தொலைகாட்சியின் பத்திரிகையாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம். தாக்குதல் நடத்தியவர்கள் மீது காவல்துறை உடனே நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறோம்.
கோவை மாவட்டம் நியூஸ் தமிழ் தொலைகாட்சியின் செய்தியாளர் அருண் மற்றும் ஒளிப்பதிவாளர் பாலாஜி நேற்று (29.03.23) காலை, கிணத்துக்கடவு பகுதியில் செயல்படும் கல்குவாரி குறித்து செய்தி சேகரிக்கச் சென்றுள்ளனர்.
அப்போது அங்கு வந்த கல்குவாரியின் உரிமையாளர் மற்றும் அவருடைய உதவியாளர்கள் சிலர் பத்திரிகையாளர்கள் அருண் மற்றும் பாலாஜியை செய்தி சேகரிக்க விடாமல் தடுத்துள்ளனர். அவர்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியதுடன் ஒளிப்பதிவுக் கருவியையும் உடைக்க முற்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதலில் ஒளிப்பதிவாளர் பாலாஜிக்கு கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது. அப்போது அங்கு கூடிய பொதுமக்கள் அருண் மற்றும் பாலாஜியை தாக்குதல் நடத்திய கல்குவாரி ஆட்களிடமிருந்து மீட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து காயமடைந்த பாலாஜி கோவை அரசு மருத்துவமனையில் சிகிக்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த தாக்குதலை கண்டித்து கோவை பத்திரிகையாளர் மன்றம் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் ஆர்ப்பட்டம் நடத்தியுள்ளது. மேலும், பத்திரிகையாளர்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்கணிப்பாளரிடம் புகாரும் அளிக்கப்பட்டுள்ளது.
செய்தி சேரிக்கச் சென்ற பத்திரிகையாளர்கள் மீது கல்குவாரியைச் சேர்ந்த குண்டர்கள் நடத்தியுள்ள இந்த தாக்குதலை மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. மேலும் தாக்குதல் நடத்தியவர்கள் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்து அவர்களை உடனே கைது செய்ய வேண்டும் என்று கோவை மாவட்ட காவல்துறையை மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் வலியுறுத்துகிறது.
தாக்குதலில் காயமடைந்த பத்திரிகையாளர்களுக்க உரிய இழப்பீடு கிடைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் கேட்டுக்கொள்கிறது.
பணியின் போது பத்திரிகையாளர்கள் இதுபோன்ற தாக்குதலை சந்திப்பது தொடர்கதையாகிவரும் இந்த சூழலில், மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் தொடர்ந்து வலியுறுத்திவரும் பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சிறப்புச் சட்டத்தை தமிழ்நாடு அரசு உடனே நிறைவேற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.
டாபிக்ஸ்