Sengottaiyan: ’எடப்பாடி பழனிசாமியின் பாராட்டு விழாவை புறக்கணித்தது ஏன்?’ உடைத்து பேசிய செங்கோட்டையன்!
அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை செயல்படுத்தியதற்காக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நடைபெற்ற பாராட்டு விழாவிற்கு செல்லாதது குறித்து முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் விளக்கம் அளித்து உள்ளார்.

எடப்பாடி பழனிசாமிக்கு நடந்த பாராட்டு விழாவுக்கு செல்லவில்லைதானே தவிர புறக்கணிக்கவில்லை என முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார்.
கோவை மாவட்டம் அன்னூர் அருகே அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை செயல்படுத்தியதற்காக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் ஈபிஎஸ்க்கு மாட்டுவண்டியில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய எடப்பாடி பழனிசாமி, இது எனக்கு கிடைத்த பாராட்டு அல்ல. விவசாயிகளுக்கு கிடைத்த பாராட்டு. எவ்வளவு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசி உள்ளேன். ஆனால் இன்று மன நிறைவுடன் பேசுகிறேன். அத்திக்கடவு திட்டத்தை செயல்படுத்த அதிகாரிகளிடம் ஆலோசனை கேட்டபோது மத்திய அரசு அல்லது வங்கிகளிடம் நிதி பெற்று செய்யலாம் என்றனர். ஆனால் எப்போது பணி முடியும் என்று சொல்ல முடியவில்லை. உரிய நேரத்தில் திட்டத்தை முடிக்க, நான் மாநில அரசின் நிதியில் திட்டத்தை அமல்படுத்த உத்தரவிட்டேன். பணிகளை வேகமாக முடிக்க எல்.என்.டி-க்கு பணி வழங்கப்பட்டது. பணி நடைபெற்றபோது கொரோனா பாதிப்பால் தொய்வு ஏற்பட்டது. சுமார் 85% பணிகள் முடிவடைந்தது 15% பணிகள் மீதம் இருந்தன. அடுத்து வந்த திமுக அரசு, அதிமுக அரசின் திட்டம் என்பதால் கிடப்பில் போட்டது. 4 வருடமாக காலம் தாழ்த்தி திட்டத்தை இப்போது திறந்து உள்ளனர் என கூறி இருந்தார்.
