’ஆந்திராவில் இருந்து எம்பி ஆகும் அண்ணாமலை!’ மத்திய அமைச்சர் ஆகவும் வாய்ப்பு! அமித்ஷாவின் மெகா ப்ளான்!
தமிழக பாஜகவில் செல்வாக்கு பெற்ற நபராக வலம் வந்த அண்ணாமலை தற்போது தலைவர் பதவியில் இருந்து மாற்றப்பட்டு உள்ளார். "அண்ணாமலையின் நிர்வாக திறமைகளை தேசிய அளவில் பயன்படுத்திக் கொள்ளப் போகிறோம்" என்று ஏற்கெனவே மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்து இருந்தார்

பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆந்திராவில் இருந்து ராஜ்யசபாவுக்கு செல்ல வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ராஜ்யசபா இடத்திற்கு பாஜகவின் முயற்சி
தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவரான அண்ணாமலைக்கு ஆந்திரப் பிரதேசத்தில் இருந்து ராஜ்யசபா உறுப்பினர் பதவி வழங்க பாஜக முயற்சி மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று நடத்தவுள்ள பேச்சுவார்த்தையில் இந்த விவகாரம் முக்கிய இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விஜயசாய் ரெட்டியின் பதவி விலகல்
ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் ராஜ்யசபா எம்பி விஜயசாய் ரெட்டி தனது பதவிக்காலம் முடிவதற்கு முன்பே தனது பதவியை ராஜினாமா செய்ததால் காலியான இடத்தை தெலுங்கு தேசம் கட்சி (டிபி) தற்போது கைப்பற்றும் நிலை உள்ளது. ஆந்திர சட்டப்பேரவையில் தெலுங்கு தேசம் கட்சிக்கு பெரும்பான்மை இருப்பதால், இந்த இடத்தை பாஜகவிற்கு வழங்குவது குறித்து பேச்சுவார்த்தைகள் நடைபெற உள்ளன.
அமித்ஷா கொடுத்த உறுதி மொழி
தமிழக பாஜகவில் செல்வாக்கு பெற்ற நபராக வலம் வந்த அண்ணாமலை தற்போது தலைவர் பதவியில் இருந்து மாற்றப்பட்டு உள்ளார். "அண்ணாமலையின் நிர்வாக திறமைகளை தேசிய அளவில் பயன்படுத்திக் கொள்ளப் போகிறோம்" என்று ஏற்கெனவே மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்து இருந்தார். ஆந்திராவில் காலியாக உள்ள ராஜ்யசபா இடத்தின் மூலம் அவரை மத்திய அரசியலுக்கு கொண்டுவர பாஜக திட்டமிட்டுள்ளது என தகவல்கள் கிடைக்கின்றன.
மத்திய அமைச்சரவையில் வாய்ப்பு?
அண்ணாமலை ராஜ்யசபா உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டால், அவருக்கு மோடி அரசில் மத்திய அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்று கருதப்படுகிறது. இது தமிழ்நாட்டு தொண்டர்களுக்கு பாஜகவின் முக்கியத்துவத்தை உணர்த்தும் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தெலுங்கு தேசத்தின் ஒப்புதல்
தெலுங்கு தேசம் கட்சி வட்டாரங்களின்படி, பாஜகவின் கோரிக்கையை ஏற்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. "முதற்கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன. சந்திரபாபு நாயுடு டெல்லி சென்று அமித்ஷாவுடன் இதுகுறித்து விவாதிக்கிறார். ஒரு ராஜ்யசபா இடத்தை பாஜகவிற்கு வழங்குவதற்கு பதிலாக, அடுத்த மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தில் சலுகைகள் பெறுவது குறித்து பேச்சுவார்த்தைகள் நடக்கலாம்," என்று தெலுங்கு தேசம் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மே 9, 2025 அன்று நடைபெறவுள்ள ராஜ்யசபா இடைத்தேர்தலில் அண்ணாமலை தேர்ந்தெடுக்கப்பட்டால், அவரது பதவிக்காலம் 2028 வரை இருக்கும்.
தமிழ்நாடு அரசியலில் தொடர்ந்து பங்கு
அண்ணாமலை ராஜ்யசபா உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டாலும், தமிழ்நாடு அரசியலில் அவரது செல்வாக்கு குறையாது என்று கமலாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. "அண்ணாமலை தமிழ்நாட்டு அரசியலை மையமாக கொண்டே செயல்படுவார். அவர் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் பிரச்சாரத்தில் முக்கிய பங்கு வகிப்பார். அவரது குரல் டெல்லியில் தமிழ்நாட்டு மக்களின் பிரச்சனைகளை எடுத்துரைக்கும்," என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பாஜகவின் வியூகம்
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதிமுகவுடன் கூட்டணி பாஜக கூட்டணி அமைத்து உள்ளது. தமிழ்நாட்டில் இருந்து வலுவான பிரதிநிதித்துவத்தை அளிக்கும் வகையில் மத்திய அமைச்சர் பதவியை அண்ணாமலைக்கு வழங்கி பாஜகவின் தொண்டர்களை உற்சாகப்படுத்தி தேர்தல் வேலைகளை வலுப்படுத்த டெல்லி பாஜக தலைமை திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
