Anbumani Ramadoss: தைலாபுரத்தில் ராமதாஸ் உடன் பேசியது என்ன? கடுகடு முகத்துடன் அன்புமணி பேட்டி!
நேற்றைய தினம் மேடையிலேயே கோபமாக பேசியது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, எங்கள் கட்சி ஒரு ஜனநாயக கட்சி, ஜனநாயக கட்சியில் நடைபெறும் பொதுக்குழுவில் காரசார விவாதங்கள் நடப்பது வழக்கம் என அன்புமணி கருத்து
விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாசை, பாமக தலைவர் அன்புமணி சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது பாமக கௌரவத் தலைவர் ஜி.கே.மணி, வழக்கறிஞர் பாலு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
மருத்துவர் ராமதாஸ் உடன் பேசியது என்ன?
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி ராமதாஸ், இன்று தைலாபுரம் தோட்டத்தில் மருத்துவர் ஐயா உடன் கட்சியின் வளர்ச்சி பற்றி பேசினேன். வரும் சட்டமன்றத் தேர்தல், சித்திரை முழு நிலவு மாநாடு, சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பான போராட்டங்கள், விவசாய மாநாட்டுக்கு பிறகு முன்னெடுக்க வேண்டிய போராட்டங்கள் குறித்து குழுவாக விவாதித்தோம். வரவிருக்கும் ஆண்டு எங்களுக்கு முக்கியமான ஆண்டு. இந்த ஆண்டில் எங்கள் செயல்திட்டங்கள், போராட்டங்கள், மக்கள் விரோத ஆட்சியை அகற்ற பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றினோம் என்றார்.
உட்கட்சி விவகாரம் குறித்து பேச வேண்டாம்
நேற்றைய தினம் மேடையிலேயே கோபமாக பேசியது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, எங்கள் கட்சி ஒரு ஜனநாயக கட்சி, ஜனநாயக கட்சியில் நடைபெறும் பொதுக்குழுவில் காரசார விவாதங்கள் நடப்பது வழக்கம். எங்களுக்கு ஐயா, ஐயாதான். எங்கள் கட்சியின் உட்கட்சி பிரச்னை பற்றி நீங்கள் பேச வேண்டாம். அது பற்றி நாங்கள் பேசிக் கொள்வோம் என கூறினார்.
பொதுக்குழுவில் நடந்தது என்ன?
பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டம் புதுச்சேரியில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய மருத்துவர் ராமதாஸ், பாமக இளைஞரணி தலைவராக முகுந்தன் பரசுராமனை அறிவித்தார். மருத்துவர் ராமதாசின் மூத்த மகளான காந்திமதியின் மகன் ஆவார்.
மருத்துவர் ராமதாஸின் இந்த அறிவிப்புக்கு மேடையிலேயே பாமக தலைவர் அன்புமணி எதிர்ப்பு தெரிவித்தார். அவர் கட்சியில் சேர்ந்தே 4 மாதம்தான் ஆகிறது. அனுபவம் மிக்க ஒருவரை அப்பொறுப்பில் நியமிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். அதை தொடர்ந்து பேசிய அவர், இது என் கட்சி, நான் சொல்வதைதான் கேட்க வேண்டும். விருப்பம் இருந்தால் இருங்கள், இல்லையென்றால் கிளம்புங்கள் என்ற பேசியது கூட்டத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. பனையூரில் தனி அலுவலகம் தொடங்கி உள்ளதாகவும், என்னை வந்து சந்திக்க விரும்புவர்கள் வந்து சந்திக்கலாம் என்றும் அன்புமணி கூறினார்.
ராமதாஸை சந்தித்த முகுந்தன்
பாமக பொதுக்குழுவில் நடைபெற்ற இந்த சம்பவம் பெரும் பேசுபொருள் ஆன நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸை, முகுந்தன் பரசுராமன் தனது குடும்பத்தினர் உடன் சந்தித்து பேசிஉள்ளார். என்னால் இருவருக்கும் எந்த பிரச்னையும் வரக்கூடாது. கட்சி இரண்டாக பிளவுபடக்கூடாது என்பதால் எனக்கு எந்த பதவியும் வேண்டாம் என தெரிவித்து உள்ளார். தொடர்ந்து பாமகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் தொடர்ந்து நீடிக்க விரும்புவதாகவும் முகுந்தன் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனை தொடர்ந்து விழுப்புரம் மாவட்டம், தைலாபுரத்தில் உள்ள மருத்துவர் ராமதாஸை சந்திப்பதற்காக சென்னையில் இருந்து அன்புமணி ராமதாஸ் புறப்பட்டுள்ளார். இந்த சந்திப்பில் பாமக இளைஞரணி தலைவராக யாரை நியமிப்பது என்பது குறித்து ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது.