தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  An Elephant Injured In The Mouth Died Due To An Explosion!

Coimbatore: வாயில் காயமடைந்த யானை உயிரிழப்புக்கு வெடி மருந்து காரணம்!

Pandeeswari Gurusamy HT Tamil
Mar 20, 2023 08:08 PM IST

யானை வெடி மருந்து உட்கொண்டதன் காரணமாக விபத்து ஏற்பட்டு தாடை மற்றும் பற்கள் காயமடைந்ததாக தெரியவந்துள்ளது.

உயிரிழந்த யானை
உயிரிழந்த யானை

ட்ரெண்டிங் செய்திகள்

கோவை மாவட்டம் காரமடை வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் வாயில் காயமடைந்து இருந்த நிலையில் மீட்கப்பட்ட பெண் காட்டு யானைக்கு பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகம் உலாந்தி வனச்சரகத்திற்கு உட்பட்ட டாப்ஸ்லிப் வரகளியார் வனத்துறை முகாமில் இரண்டு நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் நேற்று இந்த யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் இன்று யானைக்கு வன கால்நடை மருத்துவ குழுவினர் உடற்கூறு ஆய்வு மேற்கொண்டனர்...

இந்த ஆய்வில் யானை வெடி மருந்து உட்கொண்டதன் காரணமாக விபத்து ஏற்பட்டு தாடை மற்றும் பற்கள் காயமடைந்ததாக தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக கோவை மண்டல தலைமை வன பாதுகாவலரும் ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்கருமான ராமசுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, "ஆனைமலை புலிகள் காப்பகம், கோவை கோட்டம், காரமடை வனச்சரகப் பகுதியில் உடல் நலம் குன்றிய நிலையில் வாய் பகுதியில் காயங்களுடன் சுற்றித் திரிந்த பெண் காட்டு யானையினை 17.03.2023ம் தேதி திரு சதாசிவம், சத்தியமங்கலம், திரு சுகுமார். கோவை ஆகிய வனக்கால்நடை மருத்துவ குழுவினரால் மயக்க ஊசி செலுத்தி சின்னத்தம்பி என்ற துறை கும்கி யானையால் பிடிக்கப்பட்டு ஆனைமலை புலிகள் காப்பகம், பொள்ளாச்சிக் கோட்டம், உலாந்தி வனச்சரகம், வரகளியார் யானைகள் முகாமில் உள்ள கிராலில் சிகிச்சைக்காக விடப்பட்டது.

18.03.2023ம் தேதி உதவி வனப்பாதுகாவலர் மற்றும் உதவி இயக்குநர், அட்டகட்டி மற்றும் வனச்சரக அலுவலர், உலாந்தி ஆகியோரின் முன்னிலையில் திரு விஜயராகவன். உதவி வனக்கால்நடை மருத்துவ அலுவலர். பொள்ளாச்சிக் கோட்டம் அவர்களால் கிராலில் உள்ள பெண் காட்டு யானைக்கு முதற்கட்ட சிகிச்சை வழங்கினார்.

19.03.2023ம் தேதி திரு ராமசுப்பிரமணியன், வனப்பாதுகாவலர் மற்றும் கள இயக்குநர், ஆனைமலை புலிகள் காப்பகம், கோவை மற்றும் வனச்சரக அலுவலர். உலாந்தி ஆகியோரின் முன்னிலையில் திரு மனோகரன், உதவி இயக்குநர் (ஓய்வு) மற்றும் திரு விஜயராகவன், உதவி வனக்கால்நடை மருத்துவ அலுவலர், பொள்ளாச்சிக் கோட்டம் அவர்களால் யானைக்கு சிறப்பு சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இரவு சுமார் 8.00 மணியளவில் கிராலில் சிகிச்சையில் இருந்த பெண் காட்டு யானை இறந்து விட்டது. அதனைத் தொடர்ந்து உயர் அலுவலர்களுக்கு வனச்சரக அலுவலர், உலாந்தி அவர்களால் தகவல் தெரிவிக்கப்பட்டு 20.03.2023ம் தேதி காலை திரு செல்வன். உதவி வனப்பாதுகாவலர் மற்றும் உதவி இயக்குநர். அட்டகட்டி. திரு மு. சுந்தரவேல். வனச்சரக அலுவலர். உலாந்தி, திரு மதன் மோகன். தன்னார்வலர். நேச்சுரல் இன்ஸ்டியூசன் ஆப் டிரஸ்ட் ஆகியோரின் முன்னிலையில் திரு சுகுமார். வனக்கால்நடை மருத்துவ அலுவலர், கோவை, திரு விஜயராகவன். உதவி வனக்கால்நடை மருத்துவ அலுவலர். பொள்ளாச்சிக் கோட்டம் மற்றும் திரு செந்தில்நாதன். உதவி கால்நடை மருத்துவ அலுவலர். வால்பாறை அடங்கிய மருத்துவக் குழுவினரால் இறந்த பெண் காட்டு யானைக்கு உடற்கூறு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனையின் முடிவில் யானையானது வெடி மருந்தினை உண்டதால் வெடி மருந்து வெடித்து யானையின் தாடை மற்றும் பற்கள் சேதமடைந்து விட்டது. இதனால் யானையினால் உணவு உட்கொள்ள முடியாமல் உடல் பலவீனமாக இறந்து விட்டதாக மருத்துவக் குழுவினரால் அறிக்கை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்