’மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அமித்ஷா சுவாமி தரிசனம்!’ அடுத்த ப்ளான் இதுதான்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  ’மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அமித்ஷா சுவாமி தரிசனம்!’ அடுத்த ப்ளான் இதுதான்!

’மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அமித்ஷா சுவாமி தரிசனம்!’ அடுத்த ப்ளான் இதுதான்!

Kathiravan V HT Tamil
Published Jun 08, 2025 12:36 PM IST

”மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் முடித்த அமித்ஷாவின் இந்தப் பயணம், 2026 தேர்தல் உத்திகளை வகுப்பதற்கும், பாஜகவின் தென் மாவட்டங்களில் செல்வாக்கை வலுப்படுத்துவதற்கும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது”

’மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அமித்ஷா சுவாமி தரிசனம்!’ அடுத்த ப்ளான் இதுதான்!
’மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அமித்ஷா சுவாமி தரிசனம்!’ அடுத்த ப்ளான் இதுதான்! (PTI)

மீனாட்சி அம்மன் கோவில் தரிசனம்

அமித்ஷா இன்று காலை 11 மணியளவில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து முடித்தார். சுமார் 45 நிமிடங்கள் நடைபெற்ற இந்த தரிசனத்திற்குப் பின்னர், அவர் மதுரை சிந்தாமணி பகுதியில் உள்ள தனியார் விடுதிக்குத் திரும்பினார். 

பாஜக நிர்வாகிகள் கூட்டம்

மதுரை யானைமலை ஒத்தக்கடை பகுதியில் உள்ள வேலம்மாள் திடலில் பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் கூட்டம் நடைபெறுகிறது. இதில் பாஜகவின் 13 அணிகளைச் சேர்ந்த மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய மற்றும் மண்டல நிர்வாகிகள் உட்பட 10,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர். மதுரை, நெல்லை, சிவகங்கை, தேனி உள்ளிட்ட தென் மாவட்டங்களைச் சேர்ந்த மண்டலத் தலைவர்கள், பொதுச் செயலாளர்கள், ஐடி பிரிவு, மகளிர் பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவு நிர்வாகிகளை அமித்ஷா தனித்தனியாக சந்தித்து, தொகுதி நிலவரங்கள் குறித்து ஆலோசிக்கிறார்.

2026 சட்டமன்றத் தேர்தலை மையப்படுத்தியும், கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து தேர்தலை சுமூகமாக நடத்துவது குறித்தும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது. மேலும், ஜூன் 22 அன்று மதுரையில் நடைபெறவுள்ள முருகன் மாநாட்டில் பாஜகவின் பங்களிப்பு குறித்தும் அமித்ஷா தொண்டர்களுக்கு வழிகாட்டவிருக்கிறார்.

பிரம்மாண்ட பொதுக்கூட்டம்

மாலை 4 மணியளவில் வேலம்மாள் திடலில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க, நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு அனுமதி அட்டை அவசியம். கூட்டத்திற்கு வரும் முக்கிய நிர்வாகிகள் மற்றும் மண்டலப் பிரிவு நிர்வாகிகளுக்கு தனித்தனி நுழைவு வழிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

பாதுகாப்பு ஏற்பாடுகள்

நிகழ்ச்சி நடைபெறும் திடல் முழுவதும் காவல்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. மோப்ப நாய்கள் மற்றும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு அதிகாரிகள் உதவியுடன் தீவிர சோதனைகள் நடைபெறுகின்றன. அமித்ஷாவின் வருகையை முன்னிட்டு மதுரை முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் முடித்த அமித்ஷாவின் இந்தப் பயணம், 2026 தேர்தல் உத்திகளை வகுப்பதற்கும், பாஜகவின் தென் மாவட்டங்களில் செல்வாக்கை வலுப்படுத்துவதற்கும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. நிர்வாகிகள் கூட்டம் மற்றும் பொதுக்கூட்டம் மூலம், பாஜகவின் அரசியல் நகர்வுகள் மதுரையில் மேலும் வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.