AIADMK: பாஜக கூட்டணியில் கைகோர்த்த பிறகு கூடுகிறது அதிமுக செயற்குழு.. எடப்பாடி பழனிசாமி அறிவிப்பின் பின்னணி என்ன?
பரபரப்பான அரசியல் சூழலில் வரும் மே 2 ஆம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மே 2 ஆம் தேதி செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஏப்.15)வெளியிட்டுள்ள அறிக்கையில், "அதிமுக செயற்குழு கூட்டம் வருகின்ற 2.5.2025 – வெள்ளிக் கிழமை மாலை 4.30 மணிக்கு, சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில், அவைத்தலைவர் அ.தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெறும்.
இதில் கலந்துகொள்ள செயற்குழு உறுப்பினர்களான, தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், பிற மாநிலக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் (மகளிர்) அனைவருக்கும் தனித் தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும்.உறுப்பினர்கள் அனைவரும் தங்களுக்குரிய அழைப்பிதழோடு தவறாமல் வருகை தந்து,செயற்குழு கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்." எனக் குறிப்பிட்டுள்ளார்.
விளக்கம் அளிக்கப்படுமா?
பாஜக உடன் அதிமுக கூட்டணி அமைத்துள்ள நிலையில் செயற்குழு முதல் முறையாக கூடுகிறது. ஏற்கனவே செயற்குழு, பொதுக்குழுவை கூட்டாமல் கூட்டணி முடிவு எடுக்கப்பட்டதால் பல நிர்வாகிகளிடம் அதிருப்தி நிலவுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிருப்தியில் உள்ள நிர்வாகிகளை சமாதானப்படுத்தும் வகையில் செயற்குழுவில் விளக்கம் அளிக்கப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
பாஜக - அதிமுக கூட்டணி
2026 தமிழக சட்டமன்ற தேர்தலை எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக - பாஜக கூட்டணி எதிர்கொள்ளும் என்று சமீபத்தில் மத்திய அமைச்சர் அமித் ஷா அறிவித்தார். அந்த அறிவிப்பு வெளியான சில நாட்களில் அதிமுகவின் செயற்குழுக் கூட்டம் முதன்முறையாகக் கூடுவதால் இந்தக் கூட்டம் அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
செங்கோட்டையன் பங்கேற்பாரா?
இருப்பினும் எடப்பாடி பழனிசாமியுடன் சமீபகாலமாக அதிருப்தியில் இருக்கும் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் உள்ளிட்டோர் இந்த கூட்டத்தில் கலந்து கொள்வார்களா? என்ற எதிர்பார்ப்பும் அக்கட்சி தொண்டர்கள் மத்தியில் நிலவி வருகிறது. இந்த சூழலில் வரும் மே.2-ம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெறவுள்ளது.
