‘தனிப்பெருமான்மை உடன் அதிமுக ஆட்சி அமைக்கும்’ ஈபிஎஸ் பேச்சால் பாஜக அதிர்ச்சி!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  ‘தனிப்பெருமான்மை உடன் அதிமுக ஆட்சி அமைக்கும்’ ஈபிஎஸ் பேச்சால் பாஜக அதிர்ச்சி!

‘தனிப்பெருமான்மை உடன் அதிமுக ஆட்சி அமைக்கும்’ ஈபிஎஸ் பேச்சால் பாஜக அதிர்ச்சி!

Kathiravan V HT Tamil
Published Jun 30, 2025 10:29 AM IST

"அதிமுகவை எந்த சக்தியாலும் வீழ்த்த முடியாது," என்று உறுதியாகக் கூறிய எடப்பாடி பழனிசாமி, கடந்த காலத்தில் கருணாநிதியாலும், ஸ்டாலினாலும் அதிமுகவை உடைக்க முடியவில்லை என்றார்.

‘தனிப்பெருமான்மை உடன் அதிமுக ஆட்சி அமைக்கும்’ ஈபிஎஸ் பேச்சால் பாஜக அதிர்ச்சி!
‘தனிப்பெருமான்மை உடன் அதிமுக ஆட்சி அமைக்கும்’ ஈபிஎஸ் பேச்சால் பாஜக அதிர்ச்சி!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற அதிமுக கொடி ஏற்று விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய அவர், திமுக அரசு மக்கள் விரோத ஆட்சியாக உள்ளதாகவும், பொய்யான வாக்குறுதிகளால் மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்ததாகவும் கடுமையாக விமர்சித்தார்.

திமுகவின் பொய் வாக்குறுதிகள்

எடப்பாடி பழனிசாமி, திமுக அரசு 525 அறிவிப்புகளை வெளியிட்டு மக்களை ஏமாற்றியதாக குற்றம்சாட்டினார். "பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதாகவும், ரேஷன் கடைகளில் கூடுதலாக ஒரு கிலோ சர்க்கரை வழங்குவதாகவும் திமுக கூறியது. ஆனால், இவை எதுவும் நிறைவேற்றப்படவில்லை," என்று அவர் குறிப்பிட்டார். மேலும், முதலமைச்சர் ஸ்டாலின் நேர்மையாக மக்களை சந்திக்கவில்லை என்றும், பொய்யான வாக்குறுதிகளால் ஆட்சிக்கு வந்ததாகவும் தெரிவித்தார்.

அதிமுகவின் வலுவான கூட்டணி

திமுகவின் மக்கள் விரோத ஆட்சியை அகற்றுவதற்காக அதிமுக பலமான கூட்டணியை அமைத்துள்ளதாகவும், இந்த கூட்டணி மூலம் அனைத்து வாக்குகளும் அதிமுகவின் வேட்பாளர்களுக்கு கிடைக்கும் வகையில் செயல்படுவதாகவும் பழனிசாமி கூறினார். பாஜகவுடனான கூட்டணி குறித்து ஸ்டாலினுக்கு பயம் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் அவரால் இந்த கூட்டணியை பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்றும் அவர் கிண்டலாகத் தெரிவித்தார்.

அதிமுகவின் வலிமை

"அதிமுகவை எந்த சக்தியாலும் வீழ்த்த முடியாது," என்று உறுதியாகக் கூறிய எடப்பாடி பழனிசாமி, கடந்த காலத்தில் கருணாநிதியாலும், ஸ்டாலினாலும் அதிமுகவை உடைக்க முடியவில்லை என்றார். அம்மாவின் மறைவுக்குப் பிறகு சில துரோகிகள் மற்றும் சந்தர்ப்பவாதிகள் திமுகவுடன் சேர்ந்து அதிமுக ஆட்சியை கவிழ்க்க முயன்றபோதும், மக்களின் ஆதரவுடன் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சியை தக்கவைத்ததாக அவர் நினைவுகூர்ந்தார்.

மக்களுக்கு அழைப்பு

2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவின் தொண்டர்களும், நிர்வாகிகளும் ஒன்றிணைந்து சிறப்பாக செயல்பட்டு, திமுகவின் தீய சக்தியை அகற்றுவதற்கு உறுதியேற்பதாக எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்தார். "நாங்கள் யாருடன் கூட்டணி வைத்தாலும், அதற்கு ஸ்டாலினுக்கு என்ன கவலை?" என்று கேள்வி எழுப்பிய அவர், அதிமுகவின் வெற்றி உறுதி என்று தெரிவித்தார்.