தருமபுரியில் அமைச்சர் ராஜேந்திரனிடம் அதிமுக எம்.எல்.ஏக்கள் சரமாரி கேள்வி! திமுகவினர் மிரட்டல்! போலீஸ் மூலம் கைது!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  தருமபுரியில் அமைச்சர் ராஜேந்திரனிடம் அதிமுக எம்.எல்.ஏக்கள் சரமாரி கேள்வி! திமுகவினர் மிரட்டல்! போலீஸ் மூலம் கைது!

தருமபுரியில் அமைச்சர் ராஜேந்திரனிடம் அதிமுக எம்.எல்.ஏக்கள் சரமாரி கேள்வி! திமுகவினர் மிரட்டல்! போலீஸ் மூலம் கைது!

Kathiravan V HT Tamil
Published May 09, 2025 12:49 PM IST

”கோவிந்தசாமியின் கேள்விகளைத் தொடர்ந்து, அரூரிலிருந்து கலந்துகொண்ட அதிமுக எம்.எல்.ஏ. சம்பத்குமாரும் ஆதரவாக பேசினார். இதன்போது, அருகே இருந்த திமுக தொண்டர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் கூச்சலிடத் தொடங்கினர். அவர்கள் மேசைகளின் மீது ஏறி, இரு எம்.எல்.ஏ.க்களையும் வெளியேறுமாறு கோஷமிட்டனர்”

தருமபுரியில் அமைச்சர் ராஜேந்திரனிடம் அதிமுக எம்.எல்.ஏக்கள் சரமாரி கேள்வி! திமுகவினர் மிரட்டல்! போலீஸ் மூலம் கைது!
தருமபுரியில் அமைச்சர் ராஜேந்திரனிடம் அதிமுக எம்.எல்.ஏக்கள் சரமாரி கேள்வி! திமுகவினர் மிரட்டல்! போலீஸ் மூலம் கைது!

தருமபுரி மாவட்டம், அரூர் கோபாலபுரம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் இன்று காலை நடைபெற்ற ஆய்வு மற்றும் விவசாயிகள் கலந்தாய்வு கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், அதிமுகவைச் சேர்ந்த பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் அரூர் சட்டமன்ற உறுப்பினர்களான கோவிந்தசாமி மற்றும் சம்பத்குமார் ஆகியோர் கலந்துகொண்டு அமைச்சரிடம் கேள்விகள் எழுப்பினர்.

சர்க்கரை ஆலை இணை மின் நிலைய திட்டம் குறித்த கேள்வி

கூட்டத்தில், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி, சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலையில் இணை மின் நிலையம் அமைப்பதற்காக 2006ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட திட்டம் குறித்து கேள்வி எழுப்பினார். இந்த திட்டம் 2018ஆம் ஆண்டு கைவிடப்பட்டதாகவும், 2019ஆம் ஆண்டு திட்டத்தை நிறுத்துவதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். ஆனால், சமீபத்திய சட்டமன்ற கூட்டத்தில், இந்தத் திட்டத்திற்கு 40 சதவீத பணிகள் நிறைவடைந்ததாக அமைச்சர் தெரிவித்ததாகவும், இதில் முரண்பாடு உள்ளதாகவும் கோவிந்தசாமி சுட்டிக்காட்டினார். இந்தக் கேள்வி, அரசின் திட்ட நிர்வாகத்தை விமர்சிக்கும் வகையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

திமுக தொண்டர்களின் தாக்குதல் முயற்சி

கோவிந்தசாமியின் கேள்விகளைத் தொடர்ந்து, அரூரிலிருந்து கலந்துகொண்ட அதிமுக எம்.எல்.ஏ. சம்பத்குமாரும் ஆதரவாக பேசினார். இதன்போது, அருகே இருந்த திமுக தொண்டர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் கூச்சலிடத் தொடங்கினர். அவர்கள் மேசைகளின் மீது ஏறி, இரு எம்.எல்.ஏ.க்களையும் வெளியேறுமாறு கோஷமிட்டனர். இதனால் கூட்டத்தில் கலவரமான சூழல் உருவானது. சட்டமன்ற உறுப்பினர்களை நோக்கி தாக்குதல் முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு உருவானது. காவல்துறையினர் உடனடியாக தலையிட்டு, இரு எம்.எல்.ஏ.க்களையும் கைது செய்து அழைத்துச் சென்றனர். இந்தச் சம்பவம் தருமபுரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.