ADMK: ஓ.பன்னீர் செல்வத்தை அதிமுகவில் சேர்க்க நடவடிக்கை எடுப்போம்; ஆனால்! ராஜன் செல்லப்பா ட்விஸ்ட்!
அதிமுக வளர வேண்டும் நினைத்தால் வழக்கு மன்றத்துக்கு போகவே கூடாது என ஓபிஎஸ்க்கு அதிமுக எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

ஆறு மாதம் பொறுமையாக இருந்தால் ஓபிஎஸை அதிமுகவில் சேர்த்துக் கொள்வது குறித்து ஈபிஎஸிடம் பேசுவோம் என திருப்பரங்குன்றம் அதிமுக எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா தெரிவித்து உள்ளார்.
ராஜன் செல்லப்பா பேட்டி
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த ராஜன் செல்லப்பா கூறுகையில், “அருமை அண்ணன் ஓபிஎஸ் ஆக இருக்கட்டும். வேறு யாராக இருக்கட்டும். அதிமுக வளர வேண்டும் நினைத்தால் வழக்கு மன்றத்துக்கு போகவே கூடாது. ஒரு ஆறு மாதம் பொறுமையாக இருங்கள். எங்களை போன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் அண்ணன் எடப்பாடியாரிடம் சென்று உங்களை சேர்த்துக் கொள்ள சொல்லி கேட்கிறோம். எங்களால் செய்ய முடிந்த நன்மை இது ஒன்றுதான்” என தெரிவித்து உள்ளார்.
ஈபிஎஸ்க்கு பின்னடைவை தந்த தீர்ப்பு
அதிமுகவின் கட்சித் தலைமை, இரட்டை இலை சின்னம் தொடர்பான பிரச்னைகளில் கட்சியின் உள் தகராறுகளை விசாரிக்க தேர்தல் ஆணையத்திற்கு விதிக்கப்பட்ட தடையை கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி தேர்தல் ஆணையம் ரத்து செய்தது எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ஓ.பி.ரவீந்திரநாத், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி. பழனிசாமி மற்றும் வா. புகழேந்தி ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் ஆர். சுப்பிரமணியன் மற்றும் ஜி. அருள் முருகன் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் இந்த உத்தரவை பிறப்பித்தது.
உட்கட்சி விவகாரம், அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்குதல் போன்ற பிரச்சினைகளை தேர்தல் ஆணையம் விசாரிப்பதற்கு தடை விதிக்கக் கோரிய பழனிசாமியின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
ஓ.பன்னீர் செல்வம் சொல்வது என்ன?
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கூறுகையில், தன்னைப் போன்ற ஒரு சாதாரண தொண்டரை கட்சியில் உயர் பதவியில் அமர வைத்த அதிமுகவில் ஜனநாயகம் மீட்டெடுக்கப்பட வேண்டும் என தெரிவித்தார். கட்சியில் உள்ள பல்வேறு பிரிவுகளை ஒன்றிணைக்க முயற்சிப்பதாகவும், 2026 சட்டமன்றத் தேர்தலில் அதை வெற்றிப் பாதையில் கொண்டு செல்ல விரும்புவதாகவும் கூறினார்.
அதிமுகவின் துணை விதிகளை எடப்பாடி பழனிசாமி விதிகளை மீறி திருத்தியதாக குற்றம்சாட்டிய அவர், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட டிடிவி தினகரன், சசிகலா, நான் ஆகியோர் எந்த நிபந்தனையும் இன்றி அதிமுகவுடன் இணையத் தயாராக இருக்கிறோம். பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளை தீர்க்க முடியும் என்றும் ஓபிஎஸ் கூறினார்.
