‘இணையத்தில் இலையின் குரல்’ மதுரையில் இன்று டிஜிட்டல் திறமையாளர்களை தேடும் நிகழ்வு!
மண்டல வாரியாக நடைபெற உள்ள இந்த திறமையாளர்கள் கண்டறியும் நிகழ்வில், 82 கட்சி மாவட்டங்களுக்குமான டிஜிட்டல் செய்தித் தொடர்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

அஇஅதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு சார்பில் "இணையத்தில் இலையின் குரல்" Digital Talent Search-க்கான மாடல் நிகழ்ச்சி மதுரையில் உள்ள எம்.ஆர்.சி மஹாலில் இன்று நடைபெறவுள்ளது.
இந்த மாடல் நிகழ்வில், அஇஅதிமுக துணைப் பொதுச்செயலாளர், முன்னாள் அமைச்சர் நத்தம் இரா விஸ்வநாதன், மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர், முன்னாள் அமைச்சர் செல்லூர் கே ராஜூ, மதுரை புறநகர் கிழக்கு மாவட்டச் செயலாளர், திருப்பங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் வி.வி. ராஜன் செல்லப்பா, தேனி மேற்கு மாவட்டச் செயலாளர் STK ஜக்கையன், தேனி கிழக்கு மாவட்டச் செயலாளர் முருக்கோடை MP இராமர், மேலூர் சட்டமன்ற உறுப்பினர் P பெரியபுள்ளான் (எ) செல்வம் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர்.
மண்டல வாரியாக நடைபெற உள்ள இந்த திறமையாளர்கள் கண்டறியும் நிகழ்வில், 82 கட்சி மாவட்டங்களுக்குமான டிஜிட்டல் செய்தித் தொடர்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். மேலும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் 71-வது பிறந்தநாளை முன்னிட்டு, 71 கன்டண்ட் படைப்பாளர்கள் மற்றும் எழுத்தாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
அதுமட்டுமின்றி, ஆளுங்கட்சி திமுகவைச் சேர்ந்தவர்கள் 63 ஆயிரத்து 124 ஆயிரம் பொய்களை அள்ளி வீசினாலும், அத்தனைப் பொய்களையும் தகர்த்தெறிந்து, "தமிழ்நாட்டின் ஒற்றை எதிரி திமுக தான்" என்ற உண்மையை கட்சியின் சார்பில் திடமாக வாதிட வல்ல "Digital Debate Panelist"களை தேர்ந்தெடுக்கும் வகையில் இந்த நிகழ்வில் தேர்வுகள் நடைபெற உள்ளன என்று அதன் பொறுப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இணையத்தில் பலமான அணியை கட்டமைக்க அதிமுக பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக தான், இந்த முயற்சியை தமிழகம் முழுவதும் மேற்கொண்டு வருகிறது.
இது போன்ற தேர்வுகளில் தேர்வாகும் இளைஞர்களை வைத்து, வரும் சட்டமன்ற தேர்தலில் பிரசாரத்தை தீவிரமாக முன்னெடுக்க அதிமுக திட்டமிட்டுள்ளது.
