கிருஷ்ணகிரியில் கீழே கொட்டப்பட மாங்கனிகள்! மா விவசாயிகளுக்கு ஆதரவாக அதிமுக உண்ணாவிரதம்!
”இந்த கடுமையான விலை வீழ்ச்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் மாங்கனிகளை சாலைகளில் கொட்டியும், மாமரங்களை வெட்டியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்”

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாம்பழ விவசாயிகளுக்கு ஆதரவாக அதிமுக சார்பில் கிருஷ்ணகிரி பேருந்து நிலையம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்தப் போராட்டத்தில்,பச்சை துண்டு அணிந்து அதிமுகவினர் பெருமளவில் பங்கேற்றுள்ளனர்.
அதிமுகவின் துணைப் பொதுச் செயலாளர் கே.பி. முனுசாமி தலைமையில் நடைபெறும் இப்போராட்டத்தில், முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி, நாடாளுமன்ற உறுப்பினர் தம்பிதுரை, சட்டமன்ற உறுப்பினர்கள் அசோக் குமார் மற்றும் தமிழ் செல்வன் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட அதிமுகவினர் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டுள்ளனர்.
மா விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் சுமார் 35,000 ஹெக்டர் பரப்பளவில் மா சாகுபடியில் ஈடுபட்டு, சுமார் 5 லட்சம் மெட்ரிக் டன் மாங்கனிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. கடந்த சில ஆண்டுகளாக மா உற்பத்தி குறைவாக இருந்த நிலையில், இந்த ஆண்டு சீதோஷ்ண நிலை மாற்றம் காரணமாக மாம்பழ சாகுபடி அதிகரித்தது.