அதிமுக-பாஜக கூட்டணி: ’தேர்தல் போருக்கு ஈபிஎஸ் நன்கு தயாராகி வருகிறார்’ இந்து குழும இயக்குநர் மாலினி பார்த்தசாரதி ட்வீட்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  அதிமுக-பாஜக கூட்டணி: ’தேர்தல் போருக்கு ஈபிஎஸ் நன்கு தயாராகி வருகிறார்’ இந்து குழும இயக்குநர் மாலினி பார்த்தசாரதி ட்வீட்!

அதிமுக-பாஜக கூட்டணி: ’தேர்தல் போருக்கு ஈபிஎஸ் நன்கு தயாராகி வருகிறார்’ இந்து குழும இயக்குநர் மாலினி பார்த்தசாரதி ட்வீட்!

Kathiravan V HT Tamil
Published Apr 19, 2025 05:57 PM IST

“அவர் நம்பிக்கையுடனும், வரவிருக்கும் கடுமையான தேர்தல் போருக்கு நன்கு தயாராகவும் இருக்கிறார் என்பது தெளிவாகிறது. வரவிருக்கும் மாதங்கள் இரண்டு திராவிட கட்சிகளுக்கும் அவர்களின் கூட்டணிக் கட்சிகளுக்கும் இடையே ஒரு உற்சாகமான போட்டியை உறுதியளிக்கின்றன”

’தேர்தல் போருக்கு ஈபிஎஸ் நன்கு தயாராகி வருகிறார்’ இந்து குழும இயக்குநர் மாலினி பார்த்தசாரதி ட்வீட்!
’தேர்தல் போருக்கு ஈபிஎஸ் நன்கு தயாராகி வருகிறார்’ இந்து குழும இயக்குநர் மாலினி பார்த்தசாரதி ட்வீட்!

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி கே. பழனிசாமியை பிரபல ஊடகவியலாளரும், தி இந்து பப்ளிகேஷன்ஸ் குழுமத்தின் தலைவருமான மாலினி பார்த்தசாரதி அவரது இல்லத்தில் சந்தித்தார். 2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அதிமுக-பாஜக கூட்டணியை வழிநடத்தும் எடப்பாடி பழனிசாமியுடன் மாலினி நடத்திய இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இது தொடர்பாக ‘எக்ஸ்’ வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள இடுகையில், ”2026 சட்டமன்றத் தேர்தலுக்கான அதிமுக-பாஜக கூட்டணிக்கு தலைமை தாங்கும் முன்னாள் தமிழக முதல்வர் இபிஎஸ் தமிழ்நாட்டை இன்று அவரது இல்லத்தில் சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இது ஒரு சுவாரஸ்யமான உரையாடலாக இருந்தது, மேலும் அவர் நம்பிக்கையுடனும், வரவிருக்கும் கடுமையான தேர்தல் போருக்கு நன்கு தயாராகவும் இருக்கிறார் என்பது தெளிவாகிறது. வரவிருக்கும் மாதங்கள் இரண்டு திராவிட கட்சிகளுக்கும் அவர்களின் கூட்டணிக் கட்சிகளுக்கும் இடையே ஒரு உற்சாகமான போட்டியை உறுதியளிக்கின்றன” என தெரிவித்து உள்ளார்.

சந்திப்பின் பின்னணி

மாலினி பார்த்தசாரதி, எடப்பாடி பழனிசாமியை சந்திப்பது இது முதல் முறை அல்ல, கடந்த 2021ஆண்டு ஜனவரி மாதத்தில், அப்போது முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமியை மாலினி பார்த்தசாரதி நேரில் சந்தித்து, தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி வழங்கல் மற்றும் பெருந்தொற்று மேலாண்மை குறித்து பேசியிருந்தார். தற்போதைய சந்திப்பு, 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாக அமைந்துள்ளது.

அதிமுக-பாஜக கூட்டணி

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலுக்காக அதிமுகவும் பாஜகவும் கூட்டணி அமைத்துள்ளன. இந்த கூட்டணி, கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி அன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோரால் சென்னையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. 2023-ம் ஆண்டு, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் பேச்சால் ஏற்பட்ட பிணக்கு காரணமாக இந்த கூட்டணி முறிந்தது. இருப்பினும், இதனால் 2024ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலை பாஜக, அதிமுக கட்சிகள் தனித்தனியாக சந்தித்தனர். அண்ணாமலை பதவியில் இருந்து விலகிய பின்னர், பாஜக மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டு, மீண்டும் கூட்டணி உறுதி செய்யப்பட்டது.

தேர்தல் சூழல்

தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தல் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2021-ல் திமுக கூட்டணி 159 இடங்களை வென்று ஆட்சியைப் பிடித்தது, அதிமுக கூட்டணி 75 இடங்களை மட்டுமே பெற்றது. வாக்கு வங்கி பலங்களின் அடிப்படையில் அதிமுக-பாஜக கூட்டணி திமுகவுக்கு கடும் சவால் அளிக்கலாம் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

Kathiravan V

TwittereMail
கதிரவன் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் சீனியர் கன்டென்ட் ப்ரொடியூசராக உள்ளார். தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் ஊடக துறைகளில் 2016ஆம் ஆண்டு முதல் பணியாற்றி அனுபவம் பெற்றுள்ளார். அரசியல், தொழில்முனைவு, வணிகம், ஆன்மீகம் மற்றும் நாட்டு நடப்பு உள்ளிட்ட பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறார். தூசி பாலிடெக்னிக் கல்லூரியில் DME பட்டயப்படிப்பு, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பி.ஏ அரசியல் அறிவியல், SRM பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ முடித்து உள்ளார். புதிய தலைமுறை டி.வி., ஏபிபி நாடு ஆகிய முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய இவர், கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணியாற்றி வருகிறார்.
Whats_app_banner
மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.