‘செங்கோட்டையன் எண்ட்ரி.. 2026 நமக்கே.. உற்சாகப்படுத்திய இபிஎஸ்’ மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நடந்தது என்ன?
‘2021 சட்டமன்ற தேர்தலில் 2 லட்சம் வாக்குகளில் தான், நாம் ஆட்சியை தவறவிட்டோம். ஒரு சில தொகுதிகளில் 1000க்கும் குறைவான வாக்குகளில் நாம் வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறோம். எங்கெல்லாம் நாம் சொர்ப்ப வாக்குகளில் வெற்றி வாய்ப்பை தவறவிட்டோமோ, அங்கெல்லாம் இன்னும் அதிக கவனத்தோடு பணியாற்றுங்கள்’

அஇஅதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம், அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் இன்று மாலை நடைபெற்றது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், மாவட்ட செயலாளர்களிடம் எடப்பாடி பழனிசாமி பேசியது என்ன? இதோ அவர் பேசியவற்றில் முக்கியமானவை:
நமக்கு தான் வெற்றி வாய்ப்பு
அதிமுக கூட்டணியில் பாஜக இணைந்துள்ள நிலையில், இன்னும் பல கட்சிகள் கூட்டணிக்கு வரவிருப்பதாக கூறினார். எந்த கட்சிகள் என்று அவர் பெயர் குறிப்பிடாத நிலையில், நம்முடன் நிறைய கட்சிகள் பேசிக் கொண்டிருப்பதாக மாவட்ட செயலாளர்களிடம் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். தேர்தல் நெருக்கத்தில் கூட்டணி எண்ணிக்கை அதிகரிக்கும், இதனால் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் நமக்கு தான் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.
எனவே நீங்கள் அனைவரும் நம்பிக்கையோடு பணியாற்றுங்கள் என்று தெரிவித்தார். 2021 சட்டமன்ற தேர்தலில் 2 லட்சம் வாக்குகளில் தான், நாம் ஆட்சியை தவறவிட்டோம். ஒரு சில தொகுதிகளில் 1000க்கும் குறைவான வாக்குகளில் நாம் வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறோம். எங்கெல்லாம் நாம் சொர்ப்ப வாக்குகளில் வெற்றி வாய்ப்பை தவறவிட்டோமோ, அங்கெல்லாம் இன்னும் அதிக கவனத்தோடு பணியாற்றுங்கள்.
நாம் பேசியவை நமக்குள் இருக்கட்டும்
காலம் குறைவாக இருப்பதால், பூத் கமிட்டி அமைக்காத மாவட்டங்களில் அந்த பணியை விரைந்து முடிக்க வேண்டும். 2026ல் நம்முடைய ஆட்சி அமையப் போகிறது என்கிற நம்பிக்கையில் நீங்கள் பணியாற்றுங்கள். இங்கு நாம் பேசியவை, நமக்குள் தான் இருக்க வேண்டும், வெளியில் சென்று இதை பகிர வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்.
செங்கோட்டையன் பங்கேற்பு
சமீபத்தில் எடப்பாடி பழனிசாமி எம்.எல்.ஏ.,க்களுக்கு கொடுத்த விருந்தில் பங்கேற்காத செங்கோட்டையன், இன்று நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றார். எடப்பாடி பழனிசாமியின் இருக்கைக்கு எதிரே, கைக்கு எட்டும் தூரத்தில் அமர்ந்திருந்தார் செங்கோட்டையன். தலைமை நிர்வாகிகளும், பொதுச் செயலாளரும் மட்டுமே பேசியதால், செங்கோட்டையன் உள்ளிட்ட மாவட்ட செயலாளர்கள் பேச வாய்ப்பு கிடைக்கவில்லை. இருப்பினும் மாவட்ட செயலாளர்களுக்கான தகவலை, எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
